கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

29.1.10

பால்ய நம்பிக்கைகள்

பிள்ளைப்பிராயத்தில்
ஓட்டப்பந்தயத்தின் இலக்குகள் எப்போதும்
ஒற்றைப்பனைமரமும்,தூரத்துத் தொடுவானும்.
ஒருநாளும் ஓடிக்கடந்ததில்லை
ஒற்றைப்பனையை.
கடந்த தூரம் திரும்பி வருவது,
காலில் தைக்கும் கருவேலமுள்ளோடு

கண்மாய்க்கரை அய்யனார் கோவில்
மண்குதிரைகளில் ரகசிய சவாரி
ராணி லட்சுமிக்கனவுகளில்.

கிராமத்து தேவதைகளின்
பூர்வீகக்கதைகள் சொல்லும்
அமானுஷ்யங்களை
விழிகள் விரியக்கேட்டு
விடிய விடிய தூங்காத திகிலிரவுகள்.

முட்டுச்சந்தில் முனியோட்டம்
ஆவிகள் உலவும் சலங்கைச்சத்தம்
கிழக்குச்சுவற்றில் பல்லியின் திருவுளம்
வாசலில் காக்கை கரைந்தால்
விருந்தாளிகள் வருகை
இன்னும் இன்னும் எத்தனை நம்பிக்கை.

தொடுவானத்தின் தூரம் வளர்வதை அறியா வயதில்
ஓட்டப்பந்தய இலக்காய் இருந்த
ஓற்றைப்பனையையும்
தூரத்துத்தொடுவானையும்
ஒருநாள் தொட்டே தீருவது,
அந்த நம்பிக்கை விருட்சத்தின் நிழலில் இன்று நாங்கள்.

இன்றும்
அந்த நம்பிக்கைகளின்
ஞாபகம் தரும் ஒற்றைப்புன்னகையை
தரவேமுடியவில்லை நான் கற்ற அறிவியலால்...

4 கருத்துகள்:

  1. கவிதை மிகமிக அருமை சாந்தி...

    //அந்த நம்பிக்கைகளின்
    ஞாபகம் தரும் ஒற்றைப்புன்னகையை
    தரவேமுடியவில்லை நான் கற்ற அறிவியலால்... //

    முழுக்கமுழுக்க நிஜம்.

    பதிலளிநீக்கு
  2. //முட்டுச்சந்தில் முனியோட்டம்
    ஆவிகள் உலவும் சலங்கைச்சத்தம்
    கிழக்குச்சுவற்றில் பல்லியின் திருவுளம்
    வாசலில் காக்கை கரைந்தால்
    விருந்தாளிகள் வருகை
    இன்னும் இன்னும் எத்தனை நம்பிக்கை.//

    கவிதையும், வரிகளும் அழகு....

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கைகளில் ஜீவன் இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  4. //தூரத்துத்தொடுவானையும்
    ஒருநாள் தொட்டே தீருவது,
    அந்த நம்பிக்கை விருட்சத்தின் நிழலில் இன்று நாங்கள்.

    இன்றும்
    அந்த நம்பிக்கைகளின்
    ஞாபகம் தரும் ஒற்றைப்புன்னகையை
    தரவேமுடியவில்லை நான் கற்ற அறிவியலால்...//

    மிக அருமை.

    பதிலளிநீக்கு