கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

16.1.10

ஒரு சமூகத்தின் எழுச்சி

அந்த நாட்களில் எங்களின் பாலைய நாட்டு கிராமங்களில் ஒருவர் இறந்து போனால் அதை மற்ற பதினைந்து கிராமங்களுக்கும் தெரியப்படுத்த ஒரு சமூக சகோதரர்களை அனுப்பி வைப்பார்கள்.அவர்களை ஊருக்குள் பார்த்ததுமே அறிமுகம் தேவையின்றி முகமே காட்டிக்கொடுக்க எதிர்ப்படுபவர்கள் விசாரித்து உரியவர்களிடம் சொல்லிவிடுவார்கள்.பேருந்து நிறுத்ததில் இறங்கி வீடு வரை ஒப்பாரி வைத்து அழுதுவரும் உறவுகளை கொட்டு கொட்டும் சகோதரர்கள் கொட்டு முழக்கி கூட்டிவருவார்கள்.

பிறகு கோட்டை கொண்டு வருபவர்களை அழைத்து வர,பிணம் குளிப்பாட்ட கண்மாயில் தண்ணீர் எடுத்து வர,இறுதி ஊர்வலத்தில் கொம்பு முழங்க,தாரை,தப்பட்டை முழங்க ஆடியபடி செல்வார்கள்.பிணத்தை புதைக்க வேண்டுமானால் குழிதோண்டுவதும், எரிக்க வேண்டுமாயின் அதற்குத்தக ஏற்பாடுகளைச்செய்வதும் அந்தச்சகோதரர்கள் தான்.அவர்கள் வீட்டுப்பெண்கள் நாற்றுப்பறிக்க,நடவு நட,களையெடுக்க,கதிர் அறுக்க, தோட்ட வேலை,வீட்டின் கட்டுத்தறி சுத்தம் செய்ய என்று வீடுகளுக்கு வருவார்கள்.இவர்களில் ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் என்று பேசிக்கொண்டு வேலை செய்வார்கள்.'எங்க ஐயா வீடு' என்ற உரிமையோடு தலைத்துண்டை இடுப்பில் கட்டி,காலணிகழற்றி,கைகட்டி படு மரியாதையாய் நிற்பார்கள்.பெண்களும் அப்படித்தான்.இது காலம் காலமாய் தொடர்ந்து வரும் ஒரு பழக்கம்.அடிமைத்தனமென்று அறியாமலே அடிமையாய்க்கிடந்த இந்தச்சமூகம் ஒரு நாள் விழித்துக்கொண்டது.

புலம் பெயர்ந்த மக்கள் வெளியுலகம் அறிந்து,விழிப்புணர்வு பெற்றதும்,அந்த விழிப்புணர்வை தம் இனம் எங்கும் பரப்பியதும், வெளிநாடுகளுக்கு பணிபுரியச்சென்று பொருளாதார மேம்பாடு பெற்றதும்,கல்வியின் அருமை உணர்ந்து தம் வழித்தோன்றல்களுக்கு கல்வியறிவு தந்ததும் அவர்களின் சுய மரியாதையும்,வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.எந்த இனம் ஊரின் தள்ளுப்பட்ட,கடைநிலை இனமாக இருந்ததோ இன்று அவர்களும் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக வாழ்கிறார்கள். இப்போது அவர்கள் யாரும் பிணம் எரிக்க,புதைக்க,கொட்டு கொட்ட,கொம்பூத வருவதில்லை.பெண்கள் வயல் வேலைக்கு வருவதில்லை.இளையதலைமுறை ஒன்று கூடி தம் இனத்திற்கு விழிப்புணர்வு ஊட்டி நல்வாழ்க்கை வாழ வழி செய்துள்ளனர்.இன்று அவர்கள் வாழும் பகுதிகள் குடிசைகளின்றி, தாரிசு வீடுகளும்,அடிப்படை வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.கோவில் திருவிழாக்களில், ஊர் மக்களுடன் ஒன்று கலந்து கொண்டாடிமகிழ்கிறார்கள்.

ஒற்றுமையும், உழைப்பும்,விடாமுயற்சியும் இருந்தால் ஒரு இனம் தன் நிலையை உயர்த்தி பெருமையுடன் வாழமுடியும் என்று நிரூபித்த அவர்கள் இனத்தின் பெயரால் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு ஒரு முன்மாதிரி.நான் குறிப்பிடும் அந்த இனத்தின் உயர்வைக்காண வேண்டுமாயின் எங்கள் ஊருக்கு வாருங்கள்.காலகாலமாய் ஊருக்குள் காலணி அணிந்து நடக்கக் கூட தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு இனம், தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஓர் இனம் எழுந்து நிற்பதில் பெருமையும்,நெகிழ்ச்சியும் தான்.உயரவேண்டுமென்று உறுதி கொண்டுவிட்டால் தடைக்கற்களும் படிக்கற்கள் தான்.இதை வாழும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்கள் இவர்கள்.

எந்தப்போராட்டங்களும் இல்லாமல்,மனச்சங்கடங்களும் இல்லாமல் அந்தச்சமூகம் சாதித்ததன் அடிப்படை கல்வி,பொருளாதார மேம்பாடு,ஒற்றுமை,இளைய சக்தியை முழுமொத்தமாக எந்த விமர்சனமும் இன்றி பயன்படுத்திக்கொண்ட அந்த சமூகத்தின் மூத்த தலை முறை.ஆக ஒரு சமூகத்தின் விடியல் அவர்கள் கையில் தான் இருக்கிறது.மொத்த சமூகமும் தனது முன்னேற்றத்தை ஒருவழியாக எண்ணம் குவித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அவர்களை வழிமறிக்கும் சக்தியும் இந்த உலகில் உள்ளதா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக