கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

12.1.10

பொங்கல் பாட்டு

கோவில் வீடுகளில் பங்காளிகள் ஒன்று கூடி பொங்கலிடும் போது பெண்கள் பாடும் குலவைப்பாட்டு இது.

பக பக சூரியரே! பகலெல்லாம் தற்காத்தவரே!
நருலப்படச்ச நல்ல பகவானே
மனுவப்படச்ச வருண பகவானே
நாக்குத்தவறாம நன் நாக்கும் குன்னாம
சேதி தவறாம சிந்தாம நீ காக்க
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

தெக்க தெக்க போகுமா வெத்திலக்கொழுந்து
சேமந்தடுக்குமாம் செங்கழனிப்பானை
முத்துக்குங்கீழே மொளிக்கரும்ப நட்டுவச்சு
மூவாயிரங்கோட்டைய கல்லாச்சமச்சு வச்சு
எட்டாட்டுக் கொம்பு வந்து இளங்காட்டு முள்ளு வந்து
மானு வந்தடையவே மயில் வந்து கூவவே
மனங்குளிரப் பாப்பாளாம் மகிழ்ச்சியுள்ள தையம்மா
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

மஞ்சலொரு மஞ்சள் மனக்காட்டு மஞ்ச
ஏழு பொதியில எடுத்துவிட்ட மஞ்ச
அஞ்சு பொதியில அள்ளிவிட்ட மஞ்ச
தும்பப்பூ போல துரத்திவிட்ட மஞ்ச
ஆவரம்பூ போல அள்ளிவிட்ட மஞ்ச
கொன்னப்பூப்போல கொட்டிவிட்ட மஞ்ச
ஆமணக்கந்தண்டு வெட்டி பூமணக்கம்போட்டு
அதுள நடப்பாளாம் அழகான தையம்மா
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

அடுப்பு மொழுகி அச்சாணிக் கோலமிட்டு
நச்சரகம் போல நாளி உமிப்பரப்பி
சீரகம் போல சிறுகத்தணற்பரப்பி
பான கழுவி பன்னீர் உலை வார்த்து
ஒத்த விறகு வச்சு ஓவியமாத்தீ மூட்டி
நாழி வரகரிசி தீட்டி உலையிலிட்டு
வரகரசி பதம் பாக்க வாராளாம் தையம்மா
போடுங்க பொண்டுகா பொன்னால் ஒரு குலவை

பொங்கலோ பொங்கல்.பொங்கப்பொங்க பொங்கல்
பொங்கலோ பொங்கல்.பொங்கப்பொங்க பொங்கல்

( இப்படி நீளும் பெரியபாட்டு இது!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக