கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

21.9.10

15. அதிரசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலம், சுக்குப்பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

முதலில் பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து, இடித்து சலித்துக் கொள்ளவும். சலிக்கும் போது பாதி அரிசிக்கு சிறுகண் சல்லடையும், பாதி அரிசிக்கு பெருங்கண் சல்லடையும் உபயோகித்து சலித்தெடுக்கவும். வெல்லத்தை பொடித்து, 150 மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். பாகு கம்பிப் பதம் வந்ததும் அதாவது தண்ணீரில் போட்டு, சிறிது நேரத்தில் உருட்ட வரவேண்டும். அந்தப்பதத்தில், மாவை சிறிது, சிறிதாகப் போட்டு, கட்டியின்றிக் கிளறி விடவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து, கையில் ஒட்டாத பதம் வந்ததும், அல்லது மாவை எடுத்து கை முறுக்கிற்கு சுற்றுவது போல் சுற்றினால் அறுந்து விடாமல் வர வேண்டும். அந்தப் பதத்தில் இறக்கி வைத்து. ஏலம் சுக்குப்பொடி கலந்து, பருத்தித் துணியால் வேடு கட்டி, மூடி வைக்கவும். மறுநாள், அல்லது இரண்டு நாட்களில் இந்த மாவில் அதிரசம் செய்யலாம். சிறு உருண்டை மாவை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த அதிரசம் கைகளால் பிய்க்கும் போதே உதிரும். சீர்ப்பலகாரங்களில் ஒன்று.

எங்கே போகிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, ஒரு லட்சியம், ஒரு இலக்கு நிச்சயம் இருக்கும். அது நிறைவேறியதும் இன்னொன்று. இப்படித்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் காலம் காலமாக. இப்படித்தான் நமது வாழ்க்கைப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக நமது பயணங்களில் போகும் வழியில் இடரென்றால் புறப்பட்ட இடத்திற்கே, அதே புள்ளிக்கே திரும்பி வர இயலும். ஆனால் வாழ்க்கைப்பயணத்தில், நாம் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை, தடைகளை, தடங்கல்களைக்கண்டு பயந்து புறப்பட்ட இடத்தில், அதாவது தாயின் கர்ப்பத்தில் தங்கிவிட முடியாது. வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்வதையும் ஆனந்தமாக வாழ வேண்டும். நமது வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டும்.இப்படியான ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. எல்லோருக்கும் இலக்குகள் வெவ்வேறு. ஆனால் வாழ்க்கை நிலைப்பாடு ஒன்று தான். பாதைகள் வேறு. ஆனால் பயணம் ஒன்று தான்.இந்தியாவில் காதல் தோல்வியிலும், தேர்வுத் தோல்வியிலும் அதிகமான இளைஞர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் எனில், இளம்பெண்கள் பேராசையாலும், கலாச்சாரப் புரிதலின்றியும், அவசர முடிவுகளாலும் நம்பிக்கை இழக்கிறார்கள். வெற்றியின் அளவுகோல் இன்று, பணமாக உடமையாக இருக்கிறது. யாருக்கும் அமைதியான, நேயம் நிறைந்த வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.அமைதியான வாழ்க்கையை விரும்பும் இளைஞன் சோம்பேறி என்று இகழப்படுவது தான் உண்மை. டாலர் கனவுகள், வெளிநாட்டு மோகம் இளைஞர்களை மட்டுமல்ல, நடுத்தர வயதினரையும் பிடித்தாட்டுகிறது.போதுமென்ற மனம் இல்லாத காரணத்தால் எப்படியாவது, எதை அடகு வைத்தாவது, எதை இழந்தாவது வெளிநாடு சென்று, பொருளீட்டி குவித்து விடத்துடிக்கிறார்கள். எல்லா வெற்றிடத்தையும், எல்லா வெறுமையையும் பணம் ஒன்றே இட்டு நிரப்பி விடுமென்று எண்ணும் மனோபாவம் பெருகி வருகிறது.வெளிநாட்டு வேலையில் பொருளீட்டுபவர்களும், அவர்கள் குடும்பத்தினரின் அலட்டல் மிகுந்த நடவடிக்கைகளும் ஏனையோரையும் அந்தப் பாதையில் பயணிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

போர்க்காலங்களில் வீட்டுக்கொரு ஆண் படையில் சேர வேன்டுமென்பார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கொரு இளைஞர் வெளிநாட்டு வேலைக்கு உருவாகித் தயாராவது இன்றைய நிலை. நிறைய வீடுகளில், வீட்டுக்கொருவர் வெளிநாடு சென்று வறுமை துடைத்து, தாரிசு வீடும், வீட்டுப்பெண்களுக்கு நகை, வசதியான வாழ்க்கை என்று வருவதைப் பார்த்து, உள்ளூரில் நிரந்தர வேலை, வசதி என்று இருப்பவர்களும் அதை விட்டு, வெளிநாடு செல்லும் கனவுகளில் இருப்பதை விட்டுப் பறந்து சிறகொடிந்து, வீடு திரும்ப வெட்கப்பட்டு காடோ, கதியோ என்று போகும் அவலத்தை நினைத்தால் மனம் வெதும்புகிறது. வெளிநாட்டு வீதிகளில் தங்கமும், வைரமும் கொட்டிக்கிடக்கிறதா என்ன? நம்மவர்களைத் தவறாக வழி நடத்தும் சக்தி எது? குடும்பத்தின் அண்மை, பாசம், நல்ல உணவு இதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட பணமிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு, இவர்கள் தள்ளப்படும் காரணம் என்ன? இந்தக்கேள்விகளுக்கு வெளிநாடு வாழ் சகோதரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

என் மாமா ஒரு நூற்பாலையில் நிரந்தர வேலை. வசதியான வீடு, தோட்டம், நிச்சயம் வருடம் தோறும் விளையும் வயல் இப்படி அனைத்தும் இருந்தும் வெளிநாட்டு மோகம் எப்படி அவர் மனதில் நுழைந்ததோ தெரியாது. முதலில் அமெரிக்காவிற்கு ஆள் எடுக்கும் பேர்வழியிடம் பணம் கொடுத்து, பாதி போய், பாதி மீண்டது. அப்போதே நாங்கள் எச்சரித்தோம். சிறிது காலம் அடங்கி இருந்து, பின் மலேசியாவிற்கு ஆள் எடுப்பவரிடம் பணம் கட்டி, மலேசியா சென்றும் விட்டார். அங்கு போனதும் தான் தெரிந்தது விசாவில் மோசடி என்று.கையிருப்பெல்லாம் ஏஜண்டிடம் கட்டியாயிற்று. வெறும் கையோடு ஊருக்குத் திரும்ப சங்கடப்பட்டு,அங்கிருந்த ஒரு நண்பர் ஒளிந்து வாழ்ந்து சம்பாதிக்கலாம் என்று கூற, அதற்கு உடன்பட்டு, கொஞ்ச நாளில் பிடிபட்டார். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் துக்கம் என்றால் அப்படி ஒரு துக்கம். இந்த அவமானத்தில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்ற கேள்வி எங்களை அரித்தெடுக்க, தெரிந்தவரைத் தொடர்பு கொண்டால், அவர், "வழக்கு முடிந்ததும் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் பயப்படவேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்.வழக்கு முடிந்து ஊர் திரும்பியவரை அழைத்து வரப்போனவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. ராஜா போல் இருந்தவர் அழுக்குச்சட்டையும், பரிதாபமான கோலமும். அவர் தங்கி இருந்த அறை நண்பர்கள் அவரது உடைமைகளைப் பங்கு வைத்துக் கொண்டார்களாம். மாற்றுத் துணி வாங்கிக்கொடுத்து அழைத்து வந்து ஒரு மாதம் வீடு வராமல், உடலும், மனமும் தேறி வந்ததும் பிறகு சொந்த வீடு திரும்பினார். இப்போது வெளிநாடு குறித்து எதுவும் பேசுவதில்லை. அவர் முகத்தில் களை மறைந்து, புன்னகை மறைந்து, துக்கம் நடந்த வீட்டின் மனிதர் போல் நடமாடும் அவர் பழைய மாதிரி எப்போது மீண்டு வருவார் என்ற எதிபார்ப்பில் எங்கள் குடும்பம் மொத்தமும்.

24.8.10

குடியினால் கெட்ட குடிகள்.

சொந்த ஊர் போகும் போது, உறவினர் வீட்டுத்திருமணங்கள், இறப்பு,பிறப்பு, சடங்கு ஆகியவற்றை முறை கேட்டு வருவது வழக்கம். அதிலும் துக்கம் கேட்கப் போகும் நாளில் சந்தோசமான முறை கேட்கப் போகும் பழக்கமில்லை. துக்கம் கேட்க ஒரு நாள் குறித்துக்கொண்டோம். அப்படி நேமத்தான் பட்டியில் உறவினர் வீட்டில் முறை கேட்டுவிட்டு, திரும்பி வரும் போது பேருந்து நடத்துநர், இந்தப்பேருந்து கோட்டையூர் வழியாகப்போகாது என்றும், எங்களை பள்ளத்தூரில் இறங்கிக்கொள்ளும்படியும் கூற நாங்களும் பள்ளத்தூரில் இறங்கினோம். பள்ளத்தூரில் இறங்கியதும் நகரப்பேருந்து வர தாமதமாகும் என்றார்கள்." ரொம்ப நாளாச்சு நடந்து. நடப்போமா! என்று நடக்கத்தொடங்கினோம். வழியில் மணச்சை. மணச்சையில் முறை கேட்டு வேலங்குடி. வேலங்குடியில் முறை கேட்டு கோட்டையூர் செல்ல வேண்டும். கண்மாய் ஒரு புறமும், வயல்வெளிகள் ஒரு புறமும், உச்சியில் அக்னி நட்சத்திர வெயிலும் எங்களைக் கடந்து போவோரின் ஏளனப்பார்வையும் சுகம் தான். வழியில் நுங்கு சுளை விற்றுக்கொண்டிருக்க அதையும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம்.எங்களின் குழந்தைப்பருவம் திரும்பக் கிடைத்தது போல் இருந்தது.

வேலங்குடி கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த போது எனது கணவரின் பெயர் சொல்லி அழைப்பு. திரும்பிப் பார்த்தால் அந்தமானில் நெடுநாள் வசித்த நண்பர். அவர் தந்த குளிர்பானத்தை பருகியபடி அவரை நலம் விசாரித்துப்பேசிக்கொண்டிருக்க, ஒரு பெண் வந்து பணத்தை நீட்டினார். வட்டியொன்றும் வேண்டாம். எடுத்துக்கொண்டு போ!. என்று வட்டிப்பணத்தை திருப்பிக் கொடுத்து, அவர் அடமானம் வைத்த பொருளைத் திருப்பிகொடுத்தார். அந்தப்பொருள் அடுப்பு, கேஸ் சிலிண்டர். குடிப்பழக்கம் உள்ள அந்தப்பெண்ணின் கணவர், குடிப்பதற்கு பணமில்லை என்றதும், அடுப்பை விட்டு சிலிண்டரைக் கழற்றத் தெரியாது, இரண்டையும் கொண்டு வந்து 1500/ ரூபாய்க்கு அடகு வைத்து குடித்துக் கும்மாளம். நான் அவரிடம் இனிமேல் வாங்காதீர்கள் இது தரித்திரம் என்று கூற அந்தப் பெண் ஐயோ! இந்த அண்ணன் வாங்காவிட்டால் எங்காவது கொண்டு போய் விற்று விடுவார் என்றழுதார்.

அரை மணி நேரம் அந்தம்மா சொந்தக்கதை, சோகக்கதை கூற ஏற்கனவே துக்கம் கேட்டு வந்த சோகம்.கண்கள் ஈரமாகின. இப்படி நிறைய வீடுகளில் நித்தம் இதே கதை. குடிப்பதற்குப் பணமில்லை என்றால் வடித்த சோற்றைத் தூக்கி கொட்டிவிட்டு, சோற்றுப் பானையை விற்றுக் குடிப்பார்களாம். தரவில்லை என்றால் மனைவி, மக்களை அடிப்பது, பானை சோற்றில் சிறுநீர் கழித்து வைப்பது போன்ற கொடூரங்கள். இதனால் தான் ஏழைகள் ஏழைகளாகவே! எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. குடித்து சீரழியும் மாக்கள் குடியை விட மட்டும் மருந்தே இல்லையா?����

15.7.10

ஆசைகள்

காயசண்டிகையின்
தீராப்பசி
ஒவ்வொரு மனதிலும்
தீராத ஆசைகளாய்....
அட்சய பாத்திரத்தில் சுரக்கிறது,
அன்னத்திற்கு பதிலாக செல்வங்கள்.
 மணிமேகலைகளோ
அட்சய பாத்திரத்தில் சுரக்கும்
செல்வங்களை அள்ளி
இன்று, நாளை,வருங்காலம்,
தலைமுறைகள் தாண்டி தாமே சேமிக்க
நசுங்கி,நலியும்
அட்சயபாத்திரங்கள்.

ஆசை ஒழி என்ற புத்தனின் சிலைகளைக் காட்சிப்பொருளாக்கி
வழிபாட்டறையில் குபேரர்கள்.
போதிமரங்கள் எல்லாம்
விறகுக்குப்போன ஒரு பொழுதில்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.
கீதையின் வாசகங்கள் உதட்டுச்சாயமாய்
குரானும், விவிலியமும் சரிகை ஆடைகளாய்
ஆசைகள் தன்னை அலங்கரித்துக்கொண்டன.


போதுமென்ற மனதுகள் பரிகசிக்கப்பட,
பசிய மனதுகள் காழ்ப்பை உமிழ,
காழ்ப்பு நெருப்பாகி, பூமி சிதிலமாகி,
கந்தர்வர்களும் அரக்கர்களாய்...
யுகத்துக்கொரு அவதாரம் என்றது போய்
நூறு அவதாரங்கள் ஒரு யுகத்தில்
சம்ஹாரங்கள் முடிந்தபாடில்லை.
கனவுகளுடன் உறங்கியது போய்
கவலைகளுடன் உறங்க வைக்கும் 
ஆசைகளை விட்டொழிக்கும் ஆசையில் நான்........

11.7.10

இரவல் நகை

சமீபத்தில் என் குழந்தையின் பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கதை. ஒரு பெண் பார்ட்டிக்குச் செல்ல தன் தோழியின் வைர நெக்லஸை இரவல் பெற்றுச்சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறாள்.எங்கும் தேடிக்கிடைக்காமல், காவல் துறையில் மனுக்கொடுத்து விட்டு அழுகிறாள். அவளின் கணவனோ திட்டித்தீர்க்கிறான். கணவன் தன் வேலையை விருப்ப ஓய்வில் எழுதிக்கொடுத்து பணம் பெற்று அந்தப்பணத்தில் தோழிக்கு வைர நெக்லஸ் புதிதாக வாங்கிக்கொடுத்து பிரச்சினையை முடித்து, தோழியும் வேற்றிடம் போய்விடுகிறாள்.

இவர்களின் அன்றாட வாழ்வு மிகச்சிரமமாகிவிட, ராணி மாதிரி இருந்தவள் தானும் வேலைக்குச்செல்கிறாள். குடும்பத்தில் பால், பழம், குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்கிறார்கள். தினமும் கணவர், குழந்தைகளின் குத்தல் பேச்சு வேறு. அழகு பிம்பமாக இருந்தவளைக் குலைத்துப்போடுகிறது வறுமை.

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சோர்ந்த நடையுடன் வீடு திரும்பும் இவளை எதேச்சையாகப்பார்க்கும் தோழி பிரமிக்கிறாள்."நீதானா இது? எப்படி இப்படி ஆளே மாறிப்போனாய்? என்ன நோய் உனக்கு" என்று பரிவுடன் கேட்கும் தோழியிடம் உண்மை சொல்ல, அவளோ "அது தானா அது இன்னும் அதே பளபளப்புடன் இருக்கிறது. அது என் கணவர் வாங்கி வந்த கவரிங் நகை. முதன்முதலில் அணிந்து வந்த போது நீங்கள் எல்லாம் புகழ்ந்ததும் நானும் ஒரு பெருமைக்காக ஆமாம் வைரம் என்றேன். நல்லவேளை இன்னும் அது என்னிடம் தான் இருக்கிறது" என்று சொல்லித் திரும்பத்தந்தாலும் திரும்பாதவை எத்தனை? என்று கதை முடிந்தது. 

இன்னும் பெண்களுக்குள் இந்த இரவல் நகைப்பழக்கம் உள்ளது.ஒருவரின் உடமைகளா அவருக்குப்பெருமை சேர்க்கிறது?சிலர் பண உதவி கேட்கும் போது பணம் இல்லாவிடில் நகையைத்தர வேண்டி பெற்று, திருப்பித்தர முடியாது நட்பை இழக்கிறார்கள்.


எங்கள் கிராமங்களில் ஒரு இருபது வருடங்களுக்கு முன் வறுமை தன் கோரக்கரங்களால் எங்கள் மக்களின் வாழ்வாதாரங்களோடு விளையாண்டு கொண்டிருந்தது. கை ரேகைகள் அழிய உழைத்த போதிலும் அவர்களின் வறுமை ரேகைகள் அழிந்த பாடில்லை.
 
பிள்ளைகளின் படிப்பு, அதன் வழி முன்னேற்றம் பெரிதாகக் கருதப்படாது, நம் வீடு, மாடு, கன்று, வயல், தோட்டம் இப்படி குறுகிய கண்ணோட்டத்தில் வாழ்ந்து, விழிப்புணர்வற்று, உயரும் தந்திரமற்று, குறிக்கோளற்று, வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் எங்கு கொண்டு செல்கிறதோ அந்த வழி சென்று காலம் கொண்டு சென்றபடி வாழ்ந்தவர்கள்.படிப்பு என்பதை அவசியமாய் உணராதவர்கள். அன்றாட வாழ்க்கை கூட சிலருக்கு மாமியார் வீட்டு சீதனப்பொருட்களை விற்று நடந்திருக்கிறது. இப்படியொரு நடப்பில் நகை சேமிப்பு என்பது பெரும்பாலும் வெளியூர்,வெளிநாடுகளில் தொழில் முனைந்தவர்களால் மட்டுமே சாத்தியமாயிருந்தது எனலாம்.

என் ஆயாவிடம் இரட்டை வடம் ஒரு சங்கிலியும், ஒற்றை வடம் ஒரு சங்கிலியும் இருந்தது. உறவினர் பெரும்பாலும் இறந்தவர் வீடுகள், கல்யாண வீடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில், என் ஆயாவிடம் இரவல் வாங்கி அணிந்து செல்வார்கள்.அந்த இரட்டை வடம் சங்கிலியோ அந்த கால கட்டத்தில் அனைத்து மணமகளின் கழுத்தையும் அலங்கரித்தது எனலாம். 

ஒரு முறை எங்கள் உற்வுப்பெண்மணி ஒருவர் வேறு ஒருவரிடம் நகையை இரவல் வாங்கி வந்து, அணிந்து சென்று விட்டு, அந்த சங்கிலியில் இரண்டு கண்ணிகளைக் கழற்றி விட்டு பின் நகையை திருப்பித் தந்து, அதை சங்கிலி இரவல் கொடுத்தவர் கண்டுபிடித்து, பெரிய ரகளை. அது முதல் நாங்கள் எங்கள் ஆயாவிடம் இரவல் தருவதைத் தடுப்பதுண்டு. என் ஆயா படிக்காதவர். அதனால் அந்தச்சங்கிலியின் நீளத்தை தன் கைப்பிடியில் அளந்து சுவற்றில் கோடு போட்டு வைத்திருப்பார். சங்கிலி திரும்ப வந்ததும் பிடிகளை எண்ணி சரிபார்ப்பார். இத்தனைக்கும் என் ஆயா அந்தச்சங்கிலி தேய்ந்து விடுமென்று எங்கும் போனால் வந்தால் தான் அணிவார். கைம்பெண்ணுக்கு எதுக்கு வீட்டில் சங்கிலி என்பார். நல்ல வேளையாக இப்படி எந்த சம்பவங்களும் அவரது வாழ்வில் நடைபெறவில்லை.நகைகள் பெரும்பாலும் பெண்களின் மனதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 

இன்றும் கூட எங்கள் மக்கள் வங்கி சேமிப்பு, பணச்சேமிப்பு என்று இருப்பதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்ததும், சொத்து சேர்ப்பதிலும், தங்கம் சேர்ப்பதிலும் குறியாய் இருப்பார்கள். தேவையென்றால் அவற்றை விற்று தேவைகளை சமாளிப்பார்கள். அவசிய செலவுகளுக்கென சேமிப்பு, காப்பீடுகளில், பங்குகளில் முதலீடு இப்படி எல்லாம் சேமிக்க இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.





9.7.10

கூடுகள் தேடி....

சாளரவெளியினில் தெரியும்
மரக்கிளையில் கூடு கட்டி
சிறகு சிலுப்பி
தலை கவிழ்த்துப் பார்க்கும்
தேன் சிட்டு ஜோடியொன்று.

அதிகாலை எழுப்பும் அலாரம் எனக்கு
அதன் கீசென்னும் குரல்
கதிர்கள் சீறும் காலையில்
திசைகள் கிழித்து
சின்னச்சிறகால் வானளந்து
உண்டி தேடி கூடு திரும்பி
சுபமானது அதன் வாழ்க்கை

மழைக்கும், வெயிலுக்கும்
காற்றுக்கும், புயலுக்கும் தாங்குமா கூடு?
கேள்விகளோடு தூக்கம் தொலைத்தாலும்
விடியலில்
விசனங்களற்ற அதன் குரல்.
எதற்கும் பொருந்திப்போகப் பாடம் சொல்லும்.

நகர்ந்தன நாட்கள்...
தந்திரங்களற்ற தேன்சிட்டுகள்
எங்கோ வேற்றிடம் தேடி.
புதிய மரம், புதிய கூடு
ஒரு நாளும் திரும்பவில்லை
பழைய கூட்டின் உரிமை தேடி
பழைய மரக்கிளைக்கு.

கட்டுகள் எதுவுமின்றி
சுதந்திர வெளியில்
திசைகளற்ற வானில் சிறகசைக்கும்
எங்கோ வனத்தில்
ஏதோ மரத்தில் அதெற்கென ஒரு கூடு.

கூடுகளும், உடைமைகளுமே
தேடலாகிப்போன எமக்கோ
விலக்க முடியா விலங்குகளுடன்
தேன் சிட்டாகும் கனவுகள் மட்டும்

8.7.10

மாற்றங்கள்









மாற்றம் ஒன்று மட்டும் தான் மாற்றமே இல்லாதது என்றான் ஒரு புதுக்கவிஞன்.மாற்றங்கள் நல்லதாக இருக்கும் போது மகிழும் மனம், கெடுதல்களைக் கண்டு சலனப்படும்.ஒவ்வொரு இரு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குப்போகும் போதும் ஊருக்குள் சில மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்கள், வெற்றுநிலங்களில் புது வீடுகள், இளையோர் சிலரின் வயோதிகத்தோற்றம், குழந்தைகள் சிலரின் வியத்தகு வளர்ச்சி, போனமுறை போனபோது இருந்த சிலரின் மறைவு இப்படி நிறைய. சில ஆச்சர்யம், சில சந்தோசம், சில வருத்தம். இந்த முறை என்னை வளர்த்த என் ஆயா இல்லாத வெறுமை தவிர மற்ற படி எல்லாம் சுகமே! நலமே!

எங்களின் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டம். ஆற்றுப்பாசனம், இயற்கை நீரோடைகள், கால்வாய்கள் எதுவுமே எங்கள் ஊர்களில் கிடையாது. ஊரணி, கண்மாய்கள் உண்டு. அவை மழைக்காலத்தில் மட்டும் நிரம்பிக்கிடக்கும்.இப்போது, அவைகள் மழைக்காலத்தில் கூட நிரம்பி வழிவதெல்லாம் கிடையாது. காரணம், வெற்று நிலங்களில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் என்று எழுப்பியபடியால், மழை நீர் வரத்து திசை மாறி, நீர் நிலைகளுக்கு, போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே எங்கும், கரிசல் பூமி போல், பாரதி ராஜாவின் "கருத்தம்மா" படத்தில் காட்டப்படும் பொட்டல் காடுகளாகக் கிடந்தன. இந்த வருட விடுமுறைக்குப் போன போது, ஊருக்குள் பசுமையை தரிசிக்க முடிந்தது. எல்லா வீடுகளிலும் ஒரு குளுமையை உணர முடிந்தது. மக்கள் மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும், பசுமையின் பயனையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பது குறித்து சந்தோசம். பேருந்துப்பயணத்தின் போது, கவனித்த போதும் சாலைகள், வீடுகளின் வெற்றிடங்களை மரங்களும் செடிகொடிகளும் நிரப்பி இருந்தது. தமிழ்நாட்டின் மின் வெட்டில், மின்சார விசிறி இல்லாத போதும், கோடை தகிக்காமல் சமாளிக்க முடிந்தது.


ஒவ்வொரு வீடுகளிலும் உரக்குழிகள் உண்டாக்கி, இயற்கை உரத்தயாரிப்பில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டிருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. வீட்டின் காய்கறிக்கழிவுகள், மாட்டுச்சாணம், ஆட்டுக்கழிவுகள், இலை, தழைகள் கொண்டு உரம் தயாரித்து, வீட்டுக்கும் உபயோகித்து, வேண்டுபவர்களுக்கும் விற்பனை செய்கிறார்கள்.ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபாடு அதிகரித்திருந்த போதிலும் பாக்கெட் பால் விற்பனை அமோகம் தான்.ஆனால் பாலித்தீன் பைகளின் உபயோகம் மட்டும் குறைந்தபாடில்லை.கிராமப்புற மக்களுக்கு அதன் தாக்கமும், சுற்றுச்சூழலைக் கெடுப்பதில் அதன் வீர்யமும், வீச்சும் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். தோட்டங்கள், வயல்வெளிகள், வீட்டின் சுற்றுப்புறம் அனைத்தையும் நீக்கமற நிறைத்திருந்தது.வேலிக்கருவை மரங்களில் கிழிந்த தோரணங்களாய் தொங்கிக்கொண்டிருந்தது விகாரமாய். அந்தமானில் நெகிழும் பைகளுக்குத் தடை விதித்துள்ளது போல் தமிழக அரசும் தடை விதித்தால் குப்பைகள் குறையும். பைகளை உபயோகித்த பின் பறக்கவிடாமல், ஒரே இடத்தில் சேகரித்து வைக்கும் விழிப்புணர்வு கூட அற்றுப்போய் இருக்கின்றனர் நம்மவர்.
அந்தமானில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மீள் சுழற்சிக்காக முக்கிய பூமி அனுப்பும் வியாபாரிகளுக்கு கப்பல் சத்தம் (fright) கிடையாது. 


ஊருக்குள் காங்கிரீட் வீடுகள் அதிகமாகி, குடிசைகள் அற்றுப்போயிருந்தது. சுபிட்சம் கூடியிருந்தது. மகளீர், சுய உதவிக்குழுக்கள் மூலமும், அவரவர் கல்வித் தகுதிக்கேற்றார் போல் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்க, பெரும்பாலான ஆண்கள் வெளி நாடுகளில் அல்லது வெளி நகரங்களில் சம்பாதிப்பதின் நிமித்தம்.பெண்களும் கணவனின் அருகாமையை விட, வசதியான வாழ்விற்கு தம்மைத் தயார் படுத்திக்கொண்ட தைரியம், மன உறுதியைக் கண்டு, இது தியாகமா? அன்றி சுயநலமா? என்று கேள்வி மனதைக்குடைந்தது. இருக்கும் அவர்கள் மனதிலும் யாருமறியாத ஆசாபாசங்களும், கண்ணீரும். அவர்கள் எதார்த்தங்களை அனுசரித்து குடும்பம் நடத்தும் பொறுப்பு பிடித்திருந்தது.அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து, செல்வம் சேர்த்து, "எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல சம்பாதிக்கிறார்" என்று பெருமை பொங்கக் கூறும் அவர்களின் அறியாமை பிடித்திருந்தது.குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற அவர்களின் நியாயமான குறிக்கோள் பிடித்திருந்தது.மொத்தத்தில் எங்கள் ஊர்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது சந்தோசம் தான். ஆனாலும் நம் நாட்டின் மனித வளம் மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது நல்லதா? புரியவில்லை.


பேருந்துகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் அதிகம் கேட்க நேர்ந்த வார்த்தைகள் - "அவன் நல்லா இருப்பானா? பெத்த வயிறு பத்தி எரியுது!" - தாயாராய் இருக்க வேண்டும். "எந்தம்பி நல்லவன் தான். வந்தவ சரியில்ல. மேல ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கான் - சகோதரி. இப்படியான வசனங்கள். நமது பெண்களின் பெருந்தன்மை குறைந்து அனைவரும் குறுகிய வட்டங்களுக்குள் தம்மைப் பூட்டிகொண்டார்களா? நமது ஆண்களின் நியாய உணர்வு அற்று விட்டதா? கேள்விக்கு விடை கிடைக்காமல் நாம். மொத்தத்தில் இன்று பெண்களில் பெரும்பாலானோருக்கு பேராசை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது வருத்தந்தான். காலம் அனைவைரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்.

2.5.10

விடுமுறை.

நண்பர்களே! நாளை முதல் (03.05.2010) என் வலைப்பூக்களுக்கு விடுமுறை. ஜூன் மாதம் 16ம் தேதி வரை, பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

8.4.10

தாலாட்டு - 3

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

கரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோ
தேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோ
மாசி வடுவோ, வைகாசி மாம்பழமோ
கோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ, குறையாத என் செல்வமோ
சங்கரா உன் காவல், சாத்தையா உன் அடிமை
வீரப்பா உன் காவல், வேறு வினை வாராமல்
சொக்கலிங்கம் உன் காவல், சொப்பனங்கள் தட்டாமல்
கருப்பையா உன் காவல் என்னையாவுக்குக் கண்ணேறு வாராமல்
கண்ணேறு வந்தால் வெண்ணீறு இடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி (திருஷ்டி) சுத்த, வீரனார் பேரனுக்கே!
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் என்னைய்யாவுக்குச்சுற்றுங்கள் சூரியர்க்கே!

காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி
கடைக்குக்கடை பார்த்துக் கல்லிழைத்த சங்கெடுத்து,
சுற்றிச்சிவப்பு (மாணிக்கம்) இழைத்து, தூரில் ஒரு பச்சை (மரகதம்) வைத்து
வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்து காண்பார்கள்.
கொண்டுவந்து காண்பார்கள் கோலப்பசுங்கிளியை கொம்பனையர் (ஆண் யானைக்கொத்தவர்) ஐயாக்கள்
வாங்கிவந்து காண்பார்கள் வண்ணப்பசுங்கிளிக்கு மயிலனையாள் ஐயாக்கள்.
ஐயாக்கள் செய்களிலே, அவலுக்கொரு நெல்லெடுத்து
பள்ளிகளைக்கூட்டி விட்டு பவன் போல் அவல் இடித்து
பொன் போல் அவல் இடித்து பொரிப்பொரித்து பாகு ஊற்றி
அவல் வாசம் கண்டொடனே என் ஐயா நீ அழுகை அமர்ந்தாயோ!
தின்று ருசி பார்த்தொடனே நீ சிரித்து மகிழ்ந்தாயோ!

பூப்பூத்த கோயிலிலே பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான் மாலைக்கழுதாயோ
அச்சடிக்கப்பொன் விளைய ஆதிச்சார் (கடவுள்) உன் தேசம்
வைத்திருக்கத்தந்த மகன் நீ ஆளுவாய் நூறு குடி
ஆறாரும் அந்தணரும் அப்போ வருங்கிளையும்
தாயாரும் தன் சேனை என் ஐயா தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும் என் ஐயா நீ பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும் மகிரவென்று (நிறைந்து வழிதல்) வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில் வருவார் மருமகனோ!

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

தாலாட்டு

இன்று தமது மழலைச்செல்வங்களை தாலாட்டுப்பாடி தூங்க வைக்கும் தாய்மார்கள் இருக்கிறார்களா? தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் கடந்த காலத்தின் மிச்சங்களாய் இருக்கும் பெரியவர்கள் தாலாட்டுப்பாடினால் உண்டு. அவர்கள் பாடிய தாலாட்டின் மிச்சங்களை திரைத்துறை பயன் படுத்திக்கொள்கிறது. அதைக்கேட்டதும் அடடா! என்ன மெலொடி என்று சிலிர்க்கும் நாம் அது நம் தாய் பாடிய தாலாட்டு என்பதை நமது நினைவடுக்கில் தேடி நினைவு கூர்வதற்குள் நேரமாகி விடுகிறது.

நாட்டுப்புறப் பாடல் ஆய்வு செய்பவர்களும், தமிழ்த்துறை ஆசிரியர், மாணவர் பெருமக்களும் தாலாட்டுப்பாடல்களை அறிந்து வைத்திருப்பதோடு, அழகாகப் பாடவும் செய்கிறார்கள்.புதுச்சேரி பாரதி தாசன் அரசுக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தனது தமிழ்த்துறை மாணவர்களுக்கு தாலாட்டு மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை ஓய்வு நேரத்தில் பாடிக்காட்டுவார்களாம். இப்படி சிலரின் முயற்சியால் தான் நமது பழமை பொக்கிஷங்கள் காப்பாற்றப்படுகின்றன. 

இன்று அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை இருக்கையில் அமரவைத்து அல்லது படுக்க வைத்து தொலைக்காட்சியையோ அல்லது குறுந்தகட்டில் பாடல்களையோ சுழல விட்டு தமது வேலைகளைத் தொடர்கிறார்கள்.தாலாட்டுப்பாடுவதால் குழந்தைகள் சீக்கிரம் வளரும் என்றொரு கருத்து எங்களின் செட்டிநாட்டு கிராம மக்களிடம் உண்டு.அவர்கள் பாடும் போது அந்தப்பாட்டின் இனிமை, அதில் கூறப்படும் தமது வம்சப்பெருமை, சொற்கட்டு, அன்பு, பாசம் இவையெல்லாம் நம்மை நெகிழ வைத்துவிடும்.இதோ அப்படி ஒரு தாலாட்டு.

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

கரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோ
தேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோ
மாசி வடுவோ, வைகாசி மாம்பழமோ
கோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ, குறையாத என் செல்வமோ
சங்கரா உன் காவல், சாத்தையா உன் அடிமை
வீரப்பா உன் காவல், வேறு வினை வாராமல்
சொக்கலிங்கம் உன் காவல், சொப்பனங்கள் தட்டாமல்
கருப்பையா உன் காவல் என்னையாவுக்குக் கண்ணேறு வாராமல்
கண்ணேறு வந்தால் வெண்ணீறு இடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி (திருஷ்டி) சுத்த, வீரனார் பேரனுக்கே!
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் என்னைய்யாவுக்குச்சுற்றுங்கள் சூரியர்க்கே!

காலை ரயிலேறி கல்கத்தா போயிறங்கி
கடைக்குக்கடை பார்த்துக் கல்லிழைத்த சங்கெடுத்து,
சுற்றிச்சிவப்பு (மாணிக்கம்) இழைத்து, தூரில் ஒரு பச்சை (மரகதம்) வைத்து
வாய்க்கு வைரம் வைத்து வாங்கி வந்து காண்பார்கள்.
கொண்டுவந்து காண்பார்கள் கோலப்பசுங்கிளியை கொம்பனையர் (ஆண் யானைக்கொத்தவர்) ஐயாக்கள்
வாங்கிவந்து காண்பார்கள் வண்ணப்பசுங்கிளிக்கு மயிலனையாள் ஐயாக்கள்.
ஐயாக்கள் செய்களிலே, அவலுக்கொரு நெல்லெடுத்து
பள்ளிகளைக்கூட்டி விட்டு பவன் போல் அவல் இடித்து
பொன் போல் அவல் இடித்து பொரிப்பொரித்து பாகு ஊற்றி
அவல் வாசம் கண்டொடனே என் ஐயா நீ அழுகை அமர்ந்தாயோ!
தின்று ருசி பார்த்தொடனே நீ சிரித்து மகிழ்ந்தாயோ!

பூப்பூத்த கோயிலிலே பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான் மாலைக்கழுதாயோ
அச்சடிக்கப்பொன் விளைய ஆதிச்சார் (கடவுள்) உன் தேசம்
வைத்திருக்கத்தந்த மகன் நீ ஆளுவாய் நூறு குடி
ஆறாரும் அந்தணரும் அப்போ வருங்கிளையும்
தாயாரும் தன் சேனை என் ஐயா தழைக்கவென்று வந்தாயோ!
பெத்தாரும் சேனைகளும் என் ஐயா நீ பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும் மகிரவென்று (நிறைந்து வழிதல்) வந்தாயோ!
செம்பொன் நல்ல தேரேறி சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில் வருவார் மருமகனோ!

ஆராரோ, ஆராரோ ஆரிரரோ
ஆராரோ, ஆராரோ ஆரிரரோ

3.4.10

விளந்தானை பாட்டு


தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே 

பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானை
சூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானை
சூரியனே சந்திரனே சுவாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே )

அய்யனாரை நோக்கி அடித்தோம் விளந்தானை
வெண்கலத்தைக் கீறியே விளக்கெரம்ப நெய் வார்த்து
நானாட நீயாட நடுவே சிலம்பாட
வேப்பங்க் கொழுந்தாட வேடிக்கை பாக்குறா மாரியாத்தா (தானானே )

கண்குளிரப் பாக்குறாடா காரியக்கார மாரியாத்தா
மனங்குளிரப் பாக்குறாடா மகமாயி மாரியாத்தா
அஞ்சிலம்பு கொஞ்சிவர மணிச்சிலம்பு ஓசை கேட்க
காற்சிலம்பு கொஞ்சிவர காவல் காக்குறா மாரியாத்தா (தானானே)

ஆந்தையும் கூகையும் அலறும் அந்தக்காட்டிலே
ஆகாசத் தண்ணிப்பந்தல் வைக்கிறாராம் சோலைமலை
ஊசி நுழையாத உடைவேளங்காட்டுக்குள்ளே
ஒத்தக்குதிரை ஓட்டி வாராராம் கருப்பண்ணே (தானானே )

குடுகுடுப்பைத் தேங்காய் அடிமடியிலே கட்டிக்கிட்டு
கூத்தியா வீடு தேடிப் போராராம் பெரியண்ணே
கூத்தியாட்டக் குடுக்கிற பணத்தை குளத்த வெட்டுடா பெரியண்ணே
அள்ளிக் குடிக்கலாம் ஆவல் தெளியலாம் (தானானே )

நாவெடுத்து நான் பாட நல்ல மழை பெற
பூவெடுத்துச்சாத்துங்களே பூமலை நாயகி அம்மனுக்கு
திருமயத்து மெய்யனோட பாதம் மறையவே
திட்டக்கிண்றும் சிறு ஊரணியும் பெருகவே (தானானே )

வயல்நாச்சியம்மனோட பாதம் மறையவே
வட்டக்கிண்றும் வாய்க்காலும் பெருகவே

பட்டான் பட்டான் பன்னாங்கு படையலப் பட்டான் பன்னாங்கு
நெத்தியில துண்டப்போட்டு நேரே போட்டான் பன்னாங்கு (தானானே)

வாந்த மணலில ஊர்ந்து போகும் ஊமாச்சி
அதுவைப் பிடிப்பானேன் கூரைக்கடிப்பானேன்
கோட்டையப்பிடிக்கபோய் கோயில் மாட்டை மேய்க்கப்போய்
வீட்டுக்கு வந்தா விளக்கேத்தல சோத்தப் போடுடா சுப்பையா (தானானே)

ஆத்திக்குச்சியும் பொன்னாலே ஆவரங்குச்சியும் பொன்னாலே
காது வளர்த்த மாரியாத்தாளுக்கு காது ரெண்டும் பொன்னாலே
சித்தாடை கொஞ்சுடுத்தி சிறுக மடிகோலி
செம்பருத்திப் பூப்பறிக்கப் போறாளே மாரியாத்தா (தானானே)

ஆடை உடுத்தி அகல மடி கோலி
ஆவாரம் பூப்பறிக்க போறாளே மாரியாத்தா
போதுமாடி மாரியாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கு
போதாட்டி என் செய்வேன் பொலுப்பி முடியலாம் (தானானே)

பத்துமாடி மாரியாத்தா பத்தினியார் கொண்டைக்கு
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
கதிரறுத்து சேறுகட்டி களஞ்சியத்தின் மேலேறி
வருஷக்கணக்கெழுத வாராளாம் மாரியாத்தா (தானானே)

சோமணத்தான் தாராயோ தோளில் போட்டு ஆடேனோ
கடுக்கனைத்தான் தாராயோ காதில் போட்டு ஆடேனோ
மகராசி பெரியவ வயல் வழியே வந்தாளே
சம்பா விளையுமே தரிசு பொறையேறுமே (தானானே)

மூலையில நின்னுக்கிட்டு மூக்கைச்சிந்தி அழுதாலும்
முத்து வர்ணக்கண்டாங்கி தந்தாவுல்ல நான் போவேன்
கதவு இடுக்குல நின்னுக்கிட்டு கண்ணப்பினைஞ்சு அழுதாலும்
காரைக்கால் துப்பட்டா தந்தாவுல்ல நான் போவேன் (தானானே)

காட்டுக்குச்சிய வெட்டிக்கிட்டு கறியுஞ்சோறு தின்னுப்புட்டு
வீலவயித்தக் காட்டிக்கிட்டு வீட்டுக்கொருத்தன் வந்தானா

மாரியாத்தா வந்தாளாம் ஒரு மாக்கொழுக்கட்டை தந்தாளாம்
பூமாத்தா வந்தாளாம் ஒரு பூக்கொழுக்கட்டை தந்தாளாம் (தானானே)

பெரியநாயகி வந்தாளாம் ஒரு மொக்கட்டை எழும்பு தந்தாளாம்
தானானே தானானே தானானே தானானே தானானே 

கம்பே உளறுதே எம்பாட்டு ஏறல
ஆடத்தெரியாதவன் ஆட வந்து நிக்கிறான்
பாடத்தெரியாதவன் பாடவந்து நிக்கிறான்
தூங்கப்பயலே பாடுடா சவங்கப்பயலே ஆடுடா (தானானே)

மூணு முக்கூடு வீதியில மூணு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி
நாலு முக்கூடு வீதியில நாலு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி (தானானே)

அவிச்ச கறியத் தின்னுப்புட்டு ஆமக்கமாரையும் ஏச்சுப்புட்டு
திருவாரூர் தேர்போல சிரிச்சு நிக்குறா பாருங்களே
நாட்டமான கொத்தரிக்கு யார்யாரு அம்பலம்
கண்ணப்பன் சேருவை காளையப்பன் அம்பலம் (தானானே)

கொத்துக்கொத்து வீரப்பன் கோடாரி வீரப்பன்
நரியன் பிலியனும், நல்லதொரு மாமாலன் 
வாழ்த்துறோம் வாழ்த்துறோம் மனம் மகிழ வாழ்த்துறோம்
அண்ணனும் தம்பியும் அதிபதியா வாழவே
மாமனும் மச்சினனும் மலைபோல வாழவே
கொண்ட இடம் கொடுத்த இடம் கோத்திரமா வாழவே
தென்னை வச்சு பயிரேத்துர சேருவாரர் வாழவே
அகத்திவச்சு பயிரேத்துர அம்பலகாரரும் வாழவே
முருங்கை வச்சு பயிரேத்துர முத்தஞ்சேர்வை வாழவே
கும்பஞ்சுமந்து வரும் குயவனாரும் வாழவே
குட்டி புடிச்சு வரும் கோனாரும் வாழவே
ஏத்தாப்பு போட்டுவரும் ஏகாளி வாழவே
சாஞ்ச பனையேறும் சாணானும் வாழவே
கொட்டி முழக்கி வரும் வெட்டியானும் வாழவே
எம்பாட்டுக் கேட்டவர்கள் எல்லோரும் வாழவே (தானானே)

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் தழைத்து முசியாமல் தான் வாழ்வாரே (தானானே)

மாரியம்மன் பொங்கலும், முளைப்பாரியும்

எங்கள் பாலைய நாடு பதினாறு கிராமங்களிலும் பங்குனி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பொங்கல் விமரிசையாக நடக்கும்.ஏதாவது ஒரு திங்கட் கிழமையில் காப்புக்கட்டி, அடுத்து வரும் ஒன்பதாவது நாள் செவ்வாய்க்கிழமையில் பொங்கல் வைத்து திருவிழா முடியும். பெரும்பாலும் பங்குனி மாதத்தின் அனைத்து செவ்வாய்க்கிழமைகளுமே ஏதாவது ஒரு ஊரில் மாரியம்மன் பொங்கலாகத்தான் இருக்கும்.எட்டு நாள் காப்புக்கட்டி, ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமைகளில் ஊர் ஒன்று கூடி மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, கோழி,ஆடு வெட்டி பலியிட்டு சமைத்து,மாவிளக்கு,அரியரிசி,துள்ளுமாவு,இளநீர்,பானகம், நீர்மோர், வேப்பிலைக்கரகம் வைத்துப்படைப்பது வழக்கம்.கோடையின் வெக்கையில் அம்மை போன்ற நோய்கள் தாக்காமலிருக்க கொண்டாடப்படும் இந்த எட்டு நாட்களும் வீடுகளின் முகப்பில் வேப்பிலை செருகப்பட்டிருக்கும்.ஊர் கூடி முளைப்பாரி போட்டு ஊர்ப்பொது இடமான பிள்ளையார் கூடத்தில் கொண்டுவந்து வைத்து விடிய விடிய முளைக்கொட்டுவதும் (கும்மி கொட்டுவது) உண்டு.முளைப்பாரி போடும் வீடுகளில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். வெளியார் யாரையும் வீடுகளின் உள்ளே விட மாட்டார்கள்.



முளைப்பாரி போடும் முறை.

பங்குனி மாதத்தில் ஒரு திங்கட்கிழமை காப்புக்கட்டி, அடுத்துவரும் வியாழனன்று முளைப்பாரி போடுவார்கள். முளைப்பாரி போடுவதற்கு ஓடுகள் மண்,பளிங்கு,மங்கு,எவர்சில்வர் என்று அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து,கழுவி,காய வைப்பார்கள்.அந்த ஓடுகள் ஒரு குடத்தை பாதியில் வெட்டிய வடிவில் இருக்கும். அதன் வாய்ப்பகுதி தரையில் படும்படி வைத்து முளைப்பாரி போடுவார்கள். முளைப்பாரி போடுவதற்கு காய்ந்த மாட்டுச்சாணம் சேகரிப்பார்கள்.முதலில் முளைப்பாரி ஓட்டில் பெரிய மாட்டுச்சாணக்கட்டிகளை பரப்பி,அதன் மேல் சிறிய கட்டிகளைப்பரப்பி, அதன் மேல் மாட்டுச்சாணத்தை உடைத்து, சல்லடை கொண்டு சலித்து, அந்த சலித்த மணல் போன்ற சாணத்தை பரப்பி அதன் மீது முளைப்பாரிக்கு போடவேண்டிய விதைகளைப்பரப்புவார்கள். பெரும்பாலும் முளைப்பாரிக்கு நடுவில் சோளம்,மொச்சை, தட்டைப்பயறு விதைகளும், ஓரத்தில் சுற்றிப்போட கேப்பை (கேழ்வரகு) போடுவார்கள்.சிலர் அழகுக்காக நெருஞ்சி,கொழுஞ்சி விதைகளைப்போடுவார்கள்.பிறகு அதன் மேல் மறுபடி சலித்த சாணத்தைப்போட்டு, சல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவார்கள்.பிறகு கூடையைக் குப்புறப்போட்டு மூடி வைப்பார்கள். தினமும் இரு வேளையும் குளித்து, முளைப்பாரிக்கு தண்ணீர் காட்டுவார்கள். மாலை நேரம் விளக்கேற்றி சாமி கும்பிட்டு, முளைப்பாரிக்கும் தீப,தூபம் காட்டுவார்கள். பிறகு மாரியம்மன் பொங்கலன்று வீட்டில், கோவில் வாசலில் அவரவர் வழக்கப்படி பொங்கல் மற்றும் சம்பிரதாயங்கள் முடித்து பள்ளயம் போட்டு பூஜை செய்வார்கள். பிறகு, முளைப்பாரி ஓடுகளை சுற்றித்துடைத்து முளைப்பாரிக்கு பூ சுற்றி, எடுத்து வருவார்கள். முளைப்பாரி சரியாக வளராமல் இருந்தாலோ, அழுகிப்போயிருந்தாலோ அபசகுனமாகக் கருதுவார்கள்.

பாலைய நாட்டின் பள்ளத்தூர் என்ற ஊரில் மட்டும் முளைப்பாரி போட்டு முளைக்கொட்டாமல், (கும்மி) மாரியம்மன் பொங்கல் திருவிழாவின் போது, விளந்தானை அடிப்பார்கள்.ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விளையாட்டின் போது ஆண்கள் வேட்டி கட்டி இருகாலில் கண்ணகி சிலம்பு எனப்படும் சிலம்பு அணிந்து,இரு வரிசையாக நின்று கொண்டு,கோலாட்டக்குச்சிகள் வைத்து விளையாடுவார்கள்.ஒருவர் விளந்தானைப்பாட்டுப் பாட மற்றவர்கள் அதைத்திரும்பப் பாடி ஆடுவார்கள்.மற்ற ஊர்களில் இந்த விளந்தானை கிடையாது.

விளந்தானை பாட்டு

தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே 

பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானை
சூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானை
சூரியனே சந்திரனே சுவாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே )

அய்யனாரை நோக்கி அடித்தோம் விளந்தானை
வெண்கலத்தைக் கீறியே விளக்கெரம்ப நெய் வார்த்து
நானாட நீயாட நடுவே சிலம்பாட
வேப்பங்க் கொழுந்தாட வேடிக்கை பாக்குறா மாரியாத்தா (தானானே )

கண்குளிரப் பாக்குறாடா காரியக்கார மாரியாத்தா
மனங்குளிரப் பாக்குறாடா மகமாயி மாரியாத்தா
அஞ்சிலம்பு கொஞ்சிவர மணிச்சிலம்பு ஓசை கேட்க
காற்சிலம்பு கொஞ்சிவர காவல் காக்குறா மாரியாத்தா (தானானே)

ஆந்தையும் கூகையும் அலறும் அந்தக்காட்டிலே
ஆகாசத் தண்ணிப்பந்தல் வைக்கிறாராம் சோலைமலை
ஊசி நுழையாத உடைவேளங்காட்டுக்குள்ளே
ஒத்தக்குதிரை ஓட்டி வாராராம் கருப்பண்ணே (தானானே )

குடுகுடுப்பைத் தேங்காய் அடிமடியிலே கட்டிக்கிட்டு
கூத்தியா வீடு தேடிப் போராராம் பெரியண்ணே
கூத்தியாட்டக் குடுக்கிற பணத்தை குளத்த வெட்டுடா பெரியண்ணே
அள்ளிக் குடிக்கலாம் ஆவல் தெளியலாம் (தானானே )

நாவெடுத்து நான் பாட நல்ல மழை பெற
பூவெடுத்துச்சாத்துங்களே பூமலை நாயகி அம்மனுக்கு
திருமயத்து மெய்யனோட பாதம் மறையவே
திட்டக்கிண்றும் சிறு ஊரணியும் பெருகவே (தானானே )

வயல்நாச்சியம்மனோட பாதம் மறையவே
வட்டக்கிண்றும் வாய்க்காலும் பெருகவே

பட்டான் பட்டான் பன்னாங்கு படையலப் பட்டான் பன்னாங்கு
நெத்தியில துண்டப்போட்டு நேரே போட்டான் பன்னாங்கு (தானானே)

வாந்த மணலில ஊர்ந்து போகும் ஊமாச்சி
அதுவைப் பிடிப்பானேன் கூரைக்கடிப்பானேன்
கோட்டையப்பிடிக்கபோய் கோயில் மாட்டை மேய்க்கப்போய்
வீட்டுக்கு வந்தா விளக்கேத்தல சோத்தப் போடுடா சுப்பையா (தானானே)

ஆத்திக்குச்சியும் பொன்னாலே ஆவரங்குச்சியும் பொன்னாலே
காது வளர்த்த மாரியாத்தாளுக்கு காது ரெண்டும் பொன்னாலே
சித்தாடை கொஞ்சுடுத்தி சிறுக மடிகோலி
செம்பருத்திப் பூப்பறிக்கப் போறாளே மாரியாத்தா (தானானே)

ஆடை உடுத்தி அகல மடி கோலி
ஆவாரம் பூப்பறிக்க போறாளே மாரியாத்தா
போதுமாடி மாரியாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கு
போதாட்டி என் செய்வேன் பொலுப்பி முடியலாம் (தானானே)

பத்துமாடி மாரியாத்தா பத்தினியார் கொண்டைக்கு
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
கதிரறுத்து சேறுகட்டி களஞ்சியத்தின் மேலேறி
வருஷக்கணக்கெழுத வாராளாம் மாரியாத்தா (தானானே)

சோமணத்தான் தாராயோ தோளில் போட்டு ஆடேனோ
கடுக்கனைத்தான் தாராயோ காதில் போட்டு ஆடேனோ
மகராசி பெரியவ வயல் வழியே வந்தாளே
சம்பா விளையுமே தரிசு பொறையேறுமே (தானானே)

மூலையில நின்னுக்கிட்டு மூக்கைச்சிந்தி அழுதாலும்
முத்து வர்ணக்கண்டாங்கி தந்தாவுல்ல நான் போவேன்
கதவு இடுக்குல நின்னுக்கிட்டு கண்ணப்பினைஞ்சு அழுதாலும்
காரைக்கால் துப்பட்டா தந்தாவுல்ல நான் போவேன் (தானானே)

காட்டுக்குச்சிய வெட்டிக்கிட்டு கறியுஞ்சோறு தின்னுப்புட்டு
வீலவயித்தக் காட்டிக்கிட்டு வீட்டுக்கொருத்தன் வந்தானா

மாரியாத்தா வந்தாளாம் ஒரு மாக்கொழுக்கட்டை தந்தாளாம்
பூமாத்தா வந்தாளாம் ஒரு பூக்கொழுக்கட்டை தந்தாளாம் (தானானே)

பெரியநாயகி வந்தாளாம் ஒரு மொக்கட்டை எழும்பு தந்தாளாம்
தானானே தானானே தானானே தானானே தானானே 

கம்பே உளறுதே எம்பாட்டு ஏறல
ஆடத்தெரியாதவன் ஆட வந்து நிக்கிறான்
பாடத்தெரியாதவன் பாடவந்து நிக்கிறான்
தூங்கப்பயலே பாடுடா சவங்கப்பயலே ஆடுடா (தானானே)

மூணு முக்கூடு வீதியில மூணு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி
நாலு முக்கூடு வீதியில நாலு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி (தானானே)

அவிச்ச கறியத் தின்னுப்புட்டு ஆமக்கமாரையும் ஏச்சுப்புட்டு
திருவாரூர் தேர்போல சிரிச்சு நிக்குறா பாருங்களே
நாட்டமான கொத்தரிக்கு யார்யாரு அம்பலம்
கண்ணப்பன் சேருவை காளையப்பன் அம்பலம் (தானானே)

கொத்துக்கொத்து வீரப்பன் கோடாரி வீரப்பன்
நரியன் பிலியனும், நல்லதொரு மாமாலன் 
வாழ்த்துறோம் வாழ்த்துறோம் மனம் மகிழ வாழ்த்துறோம்
அண்ணனும் தம்பியும் அதிபதியா வாழவே
மாமனும் மச்சினனும் மலைபோல வாழவே
கொண்ட இடம் கொடுத்த இடம் கோத்திரமா வாழவே
தென்னை வச்சு பயிரேத்துர சேருவாரர் வாழவே
அகத்திவச்சு பயிரேத்துர அம்பலகாரரும் வாழவே
முருங்கை வச்சு பயிரேத்துர முத்தஞ்சேர்வை வாழவே
கும்பஞ்சுமந்து வரும் குயவனாரும் வாழவே
குட்டி புடிச்சு வரும் கோனாரும் வாழவே
ஏத்தாப்பு போட்டுவரும் ஏகாளி வாழவே
சாஞ்ச பனையேறும் சாணானும் வாழவே
கொட்டி முழக்கி வரும் வெட்டியானும் வாழவே
எம்பாட்டுக் கேட்டவர்கள் எல்லோரும் வாழவே (தானானே)

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் தழைத்து முசியாமல் தான் வாழ்வாரே (தானானே)

எல்லா மக்களும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, நோயின்றி ஆரோக்கியமாக நீடுழி வாழ எங்க ஊர் மாரியாத்தாவை வேண்டுகிறேன். எங்க ஊர் (பாலையூர் - கண்டனூர்) மாரியம்மன் பொங்கல் வரும் செவ்வாய்க்கிழமை (06.04.10) அன்று நடை பெற உள்ளது.புதன் கிழமை காலை பால்குடம்,காவடி,தேர்க்காவடி,பழக்காவடி எடுப்பதும் நடைபெறும்.

24.3.10

கிராமங்கள் ஒளிர்கிறது

பிரம்மாண்டமாய் முன்மொழிந்து
பிதற்றி,பிதற்றி வழிமொழிந்து
ஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்
மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கி
சட்டமும்,சமத்துவமும் பேசும் ஆட்சியாளர்கள்.
எல்லாத்திட்டமும்
எங்களூர் கோவில் பிரதிமைகளின்
உள்ளீடற்ற உருவக்கவசங்களாய், வெற்றுருவாய்...

கண்மாய்க்கரைகளின் இலையுதிர்த்த
மொட்டை மரங்களின் நிழல்களில்
சூரிய வெம்மை.
தோல் சுருங்கி
நாவின் ஈரம் காய்ந்து
மடைகளின் குழிகளில்
தண்ணீர் தேடும் கால்நடைகள்.

நீண்ட கண்மாயின் நீர்பரப்பு வற்றி
வறண்டு வெடித்துக்கிடக்கும் வெடிப்புகளுக்குக்கீழ்
உயிரை ஒளித்துக்கிடக்கும் மீன் சினைகள்
முப்போகம் விளைத்து
பொன்நெல் கொழித்த வயல் வெளிகள்
வெட்ட வெளிப்பொட்டல்களாய் மேய்ச்சலுக்கும் தகுதியற்று.

காணிக்கை விதைப்பு நெல்லில்
நிறைந்து கிடக்கும்
அய்யனார் கோவில் குதிர்களும்
மாரியம்மன் கோவில் மடப்பள்ளிகளும்
வெறுமையாய்க்கிடக்க,
சம்பிரதாயச்சடங்குகளாய்
தேரோட்டமும்,திருவிழாவும்.

வள்ளிதிருமணமும்,பவளக்கொடியும்
அரிச்சந்திரனும்,அல்லி தர்பாரும்
அரசாண்ட கூத்து மேடைகளில்
முளைப்பாரி மிச்சங்கள்.
தாரிசு வீடுகளும், கேபிள் டிஷ்களும்
சுடிதார்,ஜீன்ஸ்கள் உலரும் கொடிகளும்...
அம்மிகளும்,ஆட்டுரல்களும்
கொல்லையில் குப்பையாய்...
அடுப்படிகள் நிறைந்து கிடக்கிறது நவீனங்களால்...

அந்நியச்செலாவணியை அள்ளி இறைத்து
சந்தோச வெளிச்சத்தைக் கடன் வாங்கிய
சந்திரபிம்பங்களாய் முகங்கள்
அயல்நாட்டு பிரதாபங்கள் ஒலிக்கும் திண்ணைகள்
வெள்ளந்தித்தனம் விடைபெற்றது போக
எல்லாமும் இருக்கிறது!
ஆனாலும்,ஏதோ ஒன்று இல்லையென
சதா அழும் மனதை
சமாதானப்படுத்தும் அறிவு!
அட! எங்கள் கிராமங்கள் ஒளிர்கிறது!.

12.3.10

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள்


அன்பு நிறை சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் அழைப்புக்கிணங்க இந்த இடுகை ..அழைப்பிற்கு நன்றி!



நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,வரிசை முக்கியம் இல்லை.,ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்குபிடித்தவர்களாக இருக்கும்,இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்துநபர்கள்...சரியா..? சரிங்க!

எகிப்தியப்பேரழகி கிளியோபாட் ரா (அழகு,வீரம்,தைரியம்,சாமர்த்தியம்)
மேனாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் (தெளிவு)
விடுதலைப்போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமி பாய் (வீரம்)
பி.சுசீலா அம்மா (இசை)
அன்னை தெரசா (பொறுமை,தியாகம்,சேவை)
பாண்டிச்சேரி அன்னை (தெய்வீகம்)
அன்னை சாரதா (தூய்மை)
கிரண் பேடி (துணிவு)
மேனாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா (தன்னம்பிக்கை)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா(விடா முயற்சி)


நமக்கு உறவா இருக்கக்கூடாது என்ற நிபந்தனையால் இவர்கள் இடம் பெற்றனர்.

10.3.10

ஒப்பாரிப்பாடல்

(ஒரு ஆண் இறந்தால் வைக்கப்படும் ஒப்பாரி)

யாரைச்சரியிடலாம்,யார்யாரை ஒப்பிடலாம்
வெள்ளி சரியிடலாம் விடிமீனை ஒப்பிடலாம்
தங்கம் சரியிடலாம் சர்ச்சிமாரை ஒப்பிடலாம்
பொன்னைச்சரியிடலாம் பிள்ளையாரை ஒப்பிடலாம்
அலைகடலில் பள்ளிகொள்ளும் அச்சுதரை ஒப்பிடலாம்
நிலைகடலில் பள்ளிகொள்ளும் நீலவண்ணரை ஒப்பிடலாம்
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பச்சைவண்ணரை ஒப்பிடலாம்

அக்கம் கதவும் எங்கள் அரண்மனைக்குக் காவல்
பூட்டுங்கதவும் புதுமனைக்குக்காவல்
ஆனைப்பலம் போச்சே அதிகாரச்சொல் போச்சே
குதிரைப்பலம் போச்சே கூசாத சொல் போச்சே
ஆனையான் வந்தாலும் அஞ்சுவான் வாய் திறக்க
ஆனைவிட்டுக்கீழிறங்கி ஐயா சரணமென்பார்
குதிரையான் வந்தாலும் கூசுவான் வாய் திறக்க
குதிரை விட்டுக்கீழிறங்கி ஐயா கோடி சரண்மென்பார்
வீரர் சமத்து வெல்ல முடியாது
கர்ணர் சமத்து காண முடியாது

கடையாம்,கடைத்தெருவாம் காணவருவோமின்னா
கைலாசப் பூநாடு காணவர ஏலாது
தேராம்,திருவிழாவாம் தேடிவருவோமின்னா
சிவலோகப் பூநாடு தேடி வர ஏலாது
கப்பல் விட்டுக்கீழிறங்கி கடைக் கணக்கப் பாக்கலையே
தோணிவிட்டுக் கீழிறங்கி தொலைக்கணக்கப் பாக்கலையே
பூமி வந்து சேரையில பெரிய கிடை வந்ததே
வளவு வந்து சேரையில மிகுந்த கிடை வந்ததே

மகுந்த கிடை பாக்க மச்சமில்லா நேரமின்னு
மனசோ திகைச்சழுதா வாங்க வந்தான் கேக்கலையே
வார்த்த சொல்லப்போகலையே
பெரிய கிடை பாக்க பொன்னில்லா நேரமின்னு
புத்தி திகைச்சழுதா புடிக்க வந்தான் கேக்கலையே
கொடுக்கா முறையின்னு கூவினால் கூற்றுவனும் போகலையே
தேற வழியுமில்ல,தேற்றுவார் யாருமில்ல.

(ஒரு பெண் இறந்தால் வைக்கப்படும் ஒப்பாரி)

எக்கோடி சேனை தளம் இறந்த இடம் கண்டாயா!
மட்டற்ற கோடி சனம் மடிந்த இடம் கண்டாயா!
சேர மடிந்த தீ வெளிச்சம் கண்டாயா!
ஐவர் மடிந்த அனல் வெளிச்சம் கண்டாயா!
மக்களை அழுவைத்து,மன்னரையும் சோம்ப வைத்து
வாவரசி ஆனாயோ,வளவு வரக் காண்போமோ!
புள்ளைய அழுகவைத்து,பெருமாளச்சோம்ப வைத்து
பேரழகி ஆனாயோ,பொழுது வரக் காண்போமோ!

கஞ்சிக்கு மஞ்சன் களைக்க வைத்துப்போனாயா
சோத்துக்கு மஞ்சன் சோம்ப விட்டுப்போனாயா
அமுதுக்கு மஞ்சன் அழுக வைத்துப்போனாயா
பாலுக்கு மஞ்சன் பறக்க வைத்துப்போனாயா
காடு மண மணங்க கண்டாங்கி தீப்பறக்க
மஞ்ச,மணமணங்க மங்கிலியந்தீப்பறக்க

மையோட பொட்டோட கயிலாயம் போன செல்வி
பொட்டோட பூவோட பரலோகம் போன செல்வி
வைகையில நீர் மோந்து வாசலிலே நீராடி
மரவையில பொன் கழட்டி மட்ட மன்னர் கை கொடுத்து
மலரோட தீக்கலக்க மாதவத்தைச்செய்தாயோ
பொய்கையில நீர் மோந்து பூமியில நீராடி
பொட்டியில பொன் கழட்டி பிஞ்சு மன்னர் கைகொடுக்க
பூவோடு தீக்கலக்க புண்ணியத்தச்செய்தாயோ

மச்சம் வெட்டி மாத்துரைக்கும் மந்திரிக்கி வாழ்ந்திருந்தாள்
தங்கம் வெட்டி தரமுரைக்கும் சமர்த்தருக்கு வாழ்ந்திருந்தாள்
சானகியும் ராமருமா நெடுங்காலம் வாழ்ந்திருந்தாள்
பார்வதியும்,பரமனுமா பலகாலம் வாழ்ந்திருந்தாள்
பெருமாளும் தேவியுமா பிரியாமல் வாழ்ந்திருந்தாள்
கூடாத நேரம் வந்து கூட்டி போன துயரமென்ன?
போதாத நேரம் வந்து பிரிச்சு போன துயரமென்ன?

9.3.10

ஒப்பாரி

மரணம் பூமியில் பிறந்த அத்தனை உயிருக்கும் உண்டு.ஏன் பூமிக்கே கூட உண்டு.என்றாலும் அறிவிற்குத் தெரிந்த இந்த உண்மையை மனம் ஏற்றுக்கொள்ளாது.சிலரின் மரணம் சிலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறது.அதிலும் அகால மரணங்கள் தருகிற வலி,அந்த இழப்பு சொல்லில் வடிக்கக்கூடியதன்று. எங்கள் ஊர்களில் இறந்தவர்களின் வீடுகளில்,இறந்தவரின் உறவுகளைக் கட்டியழும் சம்பிரதாயம் உண்டு.இறந்தவர்கள் மிகவும் வயதானவர்களாக இருந்தாலும்,எப்பப்போவார் இடமொழியும் என்ற நிலையில் இருந்து விடைபெற்றுப்போனவராக இருந்தாலும் கூட கட்டியழும் சம்பிரதாயம் உண்டு.முறைப்பாடு,சண்டை என்று இருப்பவர்கள் இறப்புக்கு வருவார்கள்.ஆனால் கட்டியழ மாட்டார்கள்.சம்பந்தப்பட்டவர்கள் இதை ஒரு குறையாகச்சொல்லி வருந்துவதும் உண்டு.இப்போதெல்லாம் ஒப்பாரிப்பாடல்கள் அருகிவருவதோடு இளையோர் கட்டியழ சங்கடப்பட்டு,ஏதோ சம்பிரதாயத்திற்கு தொட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதுண்டு.முன் நாட்களில் இறந்தவரின் உறவுகள் பேருந்து நிலையத்திலிருந்து ஒப்பாரியுடன் அழுதபடி வருவார்கள்.

திருமணம் ஆகும் வரை அம்மாவின் அப்பா,அப்பாவின் அப்பா,அத்தையின் கணவர் இறந்த அந்த மூன்று இறப்பு வீடுகளின் அனுபவம் மட்டுமே.திருமணம் ஆகிவிட்டால் ஒரே நாளில் பெரியோராகிவிடும் நம் சமுதாய சம்பிரதாயத்தில் திருமணமாகி முப்பதாம் நாளுக்குள் என் கணவரின் மூத்த பெரியப்பாக்கள் இருவர் அடுத்தடுத்த நாளில் இறந்து விட,நான் யாரையும் கட்டியழாது இருக்க பெரிய குற்றச்சாட்டு,விசாரணைகள்.எனக்கு ஒரே வியப்பு.காரணம் அவர்கள் இருவரும் 90 வயதிற்கு மேற்பட்டு,போனால் போதும் என்று இருந்தவர்கள்.சோறு ஊட்டிவிட்டு,நீராட்டி,துணி மாற்றி,மல,ஜலமெடுத்து அத்தனையும் செய்ய வேண்டி இருந்ததால் "நீ பாரு,நா பாரு,நா ஒரு மாசம் பாத்தேன்,நீ எத்தன நா பாத்தே!" இப்படியான சர்ச்சைகள் மகள்கள்,மருமக்களிடையே! ஜீவன் போனதும் அவர்கள் அழுத அழுகையிலும்,வைத்த ஒப்பாரியிலும்,"ஆத்தா! அவுகள யாராச்சும் அமத்துங்க! (அமத்துங்க என்றால் தீவிரமாக,வெகுநேரமாக ஒப்பாரியுடன் அழும் உறவுகளின் தாவாங்கொட்டை(chin)யைப்பிடித்து விடுங்க,விடுங்க என்று தேற்றுவது,இதுவும் ஒரு முறையாம்)" என்ற சப்தங்களும் எனது சப்த நாடியையும் ஒடுக்க நான் எங்கே கட்டியழ!

அதன் பிறகு ஒரு நாத்தனாரின் மாமனார் இறந்துவிட துக்கம் விசாரிக்கப் போனபோது அவரின் உடலருகே அந்த மூதாட்டி அழுது கொண்டிருக்கிறார்.கட்டியழப் போய் உட்கார்ந்ததும் அவரின் ஒப்பாரி,"ஐயா நா வாழ்ந்த ராசா! நீங்க நண்டு புடுச்சாருவீகளே! அப்புடி வப்ப,வப்பையா! இன்னி யாரு புடிச்சாருவா? நீங்க தோட்டத்துல பறங்கி வெதச்சி பறிச்சாருவீகளே,அப்புடி தொப்ப,தொப்பையா! இன்னி யாரு பறிச்சாருவா?கம்மாயழிச்சு கனக்கெண்டை புடிச்சாருவீகளே! அப்புடி புள்ள,புள்ளையா! இன்னி யாருய்யா! புடிச்சாருவாக? நா வாழ்ந்த ராசா!" இப்படியாக இன்னும் நீள நான் வாயில் சேலையை வைத்து அடைத்தாலும் சிரிப்பு சப்தம் வெளியில் வந்துவிட என் அம்மா ,"எந்திரிடீ,அடி,எந்திரிச்சு அங்கிட்டுப்போ" என்று அதட்ட,"ஐயோ! மாட்டிக்கிட்டோமா?" என்று நிமிர்ந்தால் என் அம்மா,மற்றும் என் உறவினர் கண்கள் சிரிக்க,சிரிப்பு சப்தம் வெளியில் வராமலிருக்க முந்தானையை வாயில் வைத்து இருகப் பொத்தி அமர்ந்திருந்தார்கள்.இப்படி சில நேரங்களில் மரணங்களில் வைக்கப்படும் ஒப்பாரி கூட நகைச்சுவையாகிவிடும் போலும்.இப்படி அடுத்தவரின் மரணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத அந்த நாட்களில் என்னை பாதித்த,இன்றும் எங்களை உருக்கும் திடீர் மரணம் என் தந்தையின் மரணம்.அப்போது என் தாயின் தாய் வைத்த ஒப்பாரி,இன்னும் என் ஞாபக அடுக்கில் சுழல்கிறது.

மண்ணில் பொறந்தவுக மாளுறது நிச்சயந்தான்
என் மஞ்சன் மக சானகையா மையழிய சம்மதமா?
பூமிப்பொறந்தவுக போகுறது நிச்சயந்தான்
என் பொன்னான சின்ன மக பொட்டழிய சம்மதமா?

தங்கத்த உருக்கி தரையில் வார்த்து தரித்தரராப் போனோமே!
வெள்ளிய உருக்கி வீதியில வார்த்து நாங்க வீணராப்போனோமே!
மஞ்சனப்பொட்டி நா மாளுமட்டும் வேணுமின்னேன்.
சந்தனப்பொட்டி நா சாகுமட்டும் வேணுமின்னேன்.

கும்பிட்ட தெய்வமெல்லாம் கூட்டிக்கொடுத்திருச்சே!
கையெடுத்த தெய்வமெல்லாம் காட்டிக்கொடுத்திருச்சே!
சம்மதமா,சம்மதமா,சாமிக்கெல்லாம் சம்மதமா!
அசராமக் கும்பிட்ட அம்மனுக்கும் சம்மதமா!

என் சின்ன மக கொஞ்சுடுத்த சீரான கண்டாங்கி
என் கட்டி மக கொஞ்சுடுத்த காஞ்சிபுரக் கண்டாங்கி
வீட்டுக்குடுத்த விதவிதமா கண்டாங்கி
வெளிய உடுத்த விலை உசந்த கண்டாங்கி

நித்தியமும் சத்தியமா நிறைவாக வாழ்ந்த மகன்
வரன் பொரும் சத்தியமும் வழியாக பிழைச்ச மகன்
இன்னொருவர் சொத்துக்கு இச்சையும் வச்சதில்ல!
மற்றொருவர் சொத்துக்கு மனசும் வச்சதில்ல!

காணுவமா,காணுவமா இன்னிக்கண்ணாரக் காணுவமா!
அணைய சனத்தோட அருக வரக்காணுவமா!
மக்க,சனத்தோட மன்றம் வரக்காணுவமா!
ராஜாக்களோடு நடுவிருக்கக்காணுவமா!

போதும்.இதற்கு மேல் எழுத முடியாமல் கண்ணீர் திரையிடுகிறது.துக்கம் விசாரிக்க வந்த அத்தனை ஆட்களும் இந்த ஒப்பாரிகளைக்கேட்டு குலுங்கிக்குலுங்கி அழுதனர்.ஒரு படிக்காத பெண்ணிற்கு இப்படிப்பாடும் திறமை எப்படி வந்தது என்பது பெரும் வியப்பு.ஒவ்வொரு நாளும் துக்கம் கேட்டு வரும் ஒவ்வொருவரிடமும் ஒரு நாள் பாடிய ஒப்பாரியை என் ஆயா பாடமாட்டார்.இன்றும் எந்த இறந்த வீடு போனாலும் இந்த ஒப்பாரிகள் நினைவில் வந்து, அழுகை வந்துவிடும்.என் தந்தை இறந்து 19 வருடங்கள் ஆகிறது.இருந்தாலும் அந்த இறப்பின் வலி இன்னும் அப்படியே தான் இருக்கிறது.அதனால் என் தாய் வைத்த ஒப்பாரியை எழுத இன்னும் கொஞ்ச நாள் போகவேண்டும்.

6.3.10

விகடனின் "சக்தி,2010",சர்வ தேச மகளீர் தின ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை. வெளியிட்டுச்சிறப்பித்த விகடனுக்கு நன்றி!


எது அர்ப்பணிப்பு? : அனுபவம்
- கே.என். சாந்தி லக்ஷமணன்
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! என்றான் மகாக்கவி. ஒரு பெண்ணின் உழைப்பால்,தியாகத்தால்,பொறுப்புணர்வால்,சிறந்த அறிவால் சிறக்கிறது அவளின் குடும்பம்,பரம்பரை,சமூகம்.இதை வழி வழியாகக்கண்டும்,அனுபவித்தும் வந்திருக்கிறது நம்நாடு. சிந்தனை,எண்ணங்கள்,அறிவுவளர்ச்சி,பெண் சுதந்திரம்,சுயம் உணர்த்தும் - இருப்பை உணர்த்தும் ஆங்காரமற்ற,கேள்விகள் அற்ற,குடும்பம் ஒன்றையே தன் அடையாளமாக,கணவரைத் தன் உயிராக,குழந்தைகளைத் தன் அங்கமாக,அதுவே தனது நிலைப்பாடாக,பெருமையாக,தன்னைத் தனியே அடையாளமாக்கிக்கொள்ள விழையாத, பாரம்பர்ய பண்பாடாகக் கொள்ளும் பெண்களால்,தியாகத்தின் பிம்பங்களால் ஒளிர்கிறது நமது குடும்பங்கள்.அறியாமையால் கிடந்தவர்களென பெண்ணுரிமை வாதிகள் இவர்களை விமர்சித்தாலும் பொறுப்புகளை ஏற்று,கடமைகளைச்செய்து, அளவுகடந்த குடும்பப்பற்றுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தெய்வத்தாய்களுக்கு நாம் பெரிதாக என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்.ஒவ்வொருவருக்கும் தாய் என்பவள் உறவுகளில் முதல்வி. அவளை எண்ணிய மாத்திரத்தில் மனக்கண் கசியும். இதயத்தில் ஈரம் சுரந்து,கர்வம் வடியும்.அப்படி ஒரு ஈரம் கசிய வைக்கும் பெண் என் தாய்.

போராட்டங்களே வாழ்க்கையாய்க்கொண்ட என் தாய் போர்களைக்கண்டு அஞ்சியதுமில்லை.தன்னை நொந்துகொண்டதுமில்லை.அலுப்பு,சலிப்பு எதுவும் இருந்ததில்லை.என்ன அனுபவித்தோம் என்று கடந்த கசப்புகளை நினையாது,இனிப்புகளை மட்டுமே பரிமாறத்தெரிந்த பெண்.தன் வீட்டுப்பெண்களை மறந்து விட்டு கற்புக்கரசிகளின் பட்டியல் போடும் பண்டிதர்கள் நிறைந்த நம் நாட்டில் சர்வதேச மகளீர் தினத்தில் என் தாயைப்பற்றி எழுதுவதில் பெருமை எனக்கு.அதிகம் படிக்காத,ஆனால் வாழ்க்கையைப் படித்த அனுபவசாலி.ஐந்து பெண்குழந்தைகள்,ஒரு ஆணைப்பெற்றும் சற்றும் தாழ்வு மனப்பான்மையோ, குறுகிய எண்ணங்களோ அற்று எங்களுக்கு வாழ்க்கையில் போராடி வெல்லும் வாழ்க்கையே சிறப்பு என்று கற்றுக்கொடுத்தவர்.கல்வியோடு,வீட்டு வேலை,கைவேலை,எந்த வேலையையும் பார்த்து மலைக்காது,'செஞ்சுட்டாப்போச்சு' என்ற மனப்பான்மை என்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்து இன்று கழனி வேலையானாலும்,கணிப்பொறி வேலையானாலும் நாங்கள் பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல,அதில் முத்திரை பதிக்கும் அளவு எங்களை வளர்த்து விட்டதும் எங்கள் தாய்.செட்டிநாட்டுப்பகுதியில் பெண்குழந்தைகளுக்கு அதிகமான சீர் வரிசை செய்வது வழக்கம்.பால் விற்ற காசு,மற்ற உபரி வருமானங்களால் வரும் வரவுகளை பாத்திரச்சீட்டுக்கட்டுவது,சில்லறைகளை உண்டியலில் சேர்த்து,நிறைந்ததும் உண்டியலை அதிக சேதமில்லாது உடைத்து (பிறகு ஃபெவிக்கால் வைத்து ஒட்டி பின் அதில் மறுபடி சேமிப்பது) அந்தப்பணத்தில் பாத்திரங்கள் வாங்கி சேர்ப்பது என்று எங்கள் அம்மா மிகவும் சமர்த்து.சினிமா முதல் பூ வாங்குவது வரை திட்டம் போட்டுத்தான் செய்வார்கள்.தங்க நகைகளை வெளியில் செல்லும் போது அணிந்து சென்று வீடு வந்ததும் கழட்டி வைத்து,இன்று வரை மெருகு மாறாது வைத்திருக்கும் அவர்களின் கட்டுப்பாடு,ஆசைகளை சீரமைத்து, போதுமென்ற மனதோடு நிறைவாய் வாழவும்,பழிகளுக்கு அஞ்சி கௌரவம் பேணவும்,சிக்கனம்,சோம்பலற்று இல்லம் பேணவும் கற்றுக்கொடுத்து,யதார்த்தங்களை ஏற்று அதற்குத்தகுந்தார் போல் வாழச்சொல்லிக்கொடுத்து,விரும்பியது கிடைக்காவிட்டால்,கிடைத்ததை விரும்பி வாழவும்,புகுந்தவீடு போற்ற எங்களை வாழ்விப்பதும் எங்கள் தாய் என்ற ஆலமரம்தான்.

ஒருமுறை எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.அவரைப்பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தாராம்.அவருக்கு மூன்று பெண்குழந்தைகளாம்.இரு பெண்களை நல்லமுறையில் திருமணம் செய்வித்து மூன்றாவது பெண்ணுக்கும் வரன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும்,போதியளவு சேமிப்பு இருப்பதாகவும் சொன்னாராம்.உடனே எழுத்துச்சித்தர் அவர்கள் எழுந்து அவரை வணங்கினாராம்.ஒரு மனிதனுக்கு இதைவிட என்ன வேண்டும்.இரு பெண்களைக்கரை சேர்த்து மூன்றாவது பெண்ணுக்கு வழி தேடிக்கொண்டிருக்கும் இவர் தான் வணங்கப்பட வேண்டியவர் என்று முடித்திருந்தார்.அப்படியானால் இரு பெண்களுக்கு மணம் செய்வித்து என் தந்தை இறந்ததும்,என் தந்தை விட்டுச்சென்ற சொத்தை அழிக்காது வளர்த்து,மற்ற மூன்று பெண்களைப்படிக்கவைத்து,திருமணம் முடித்து,மகனைப்படிக்கவைத்து,மணமுடித்து,இன்றும் உறுதுணையாக இருக்கும் எங்கள் தாய் என்றும் எங்கள் வணக்கத்திற்கும்,வாழ்த்துக்களுக்கும் உரியவர்.ஒளிரும் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பின்னும், உருகும் மெழுவர்த்தியாய் ஒரு பெண் இருக்கிறாள்.பெண் என்னும் பிறவியின் தியாகங்களால் நிரப்பப்பட்டது நம் புண்ணிய பூமி."அவளின் தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் தேவையில்லை.அவள் அவளுக்காக வாழவேண்டும்" என்று பெண்ணீயவாதிகள் போர்க்கொடி தூக்கினாலும் குடும்பம் என்ற கோவில் உருவாக அவளின் அர்ப்பணிப்புகள் தேவையாயிருக்கிறது.நம் சமூகத்தில் பெண் என்பவளின் பரிமாணங்கள் பன்முகம் கொண்டது.குடும்பங்கள் என்னும் கோவிலில் ஒளி தீபமேற்றும் பெண்கள் வாழ்க! வளர்க!

3.3.10

கிராமத்து மணம்

எங்கள் கிராமங்களில் அவல், பனங்கிழங்கு, நவாப்பழம் (நாவல் பழம்) நெல்லிக்காய்,மா வத்தல்,புளியங்காய்,ஈச்சங்காய் - பழம்,கொட்டிக்கிழங்கு,பாலப்பழம்,வீரப்பழம் இவையெல்லாம் எங்கள் பால்ய பருவத்தின் ஈர்ப்புகள்.

ஆடி மாதம் நாற்றுப்பாவுவதற்கு விதை நெல் கொண்டு போய்,நாற்றங்காலில் பாவியது போக மீந்த மீத நெல்லில் அவல் இடிப்பார்கள்.நெல்லை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து,மறுநாள் காலை தண்ணீரை வடித்து,ஒரு சணல் சாக்கில் கொட்டி இறுகக் கட்டி,அந்த மூட்டையின் மீது ஒரு பாரத்தை வைத்து ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள்.மூன்று நாள் கழித்துப்பார்த்தால் அந்த நெல் முளை விட்டு வந்திருக்கும்.முளைவிட்ட நெல்லை நன்றாகக் கொதிக்கும் நீரில் கொட்டி,தட்டுப்போட்டு மூடி ஒரு இரவு வைத்து மறுநாள் காலை வடி கூடையில் கொட்டி,தண்ணீர் வடிந்ததும்,பழைய மண்சட்டியில் சிறிது,சிறிதாகப் போட்டு படபடவென,பொரியும் வரை,வறுத்து நேரடியாக உரலில் கொட்டி,தாமதிக்காமல் உலக்கையால் இடிப்பார்கள்.நன்றாக வறுபட்டு விட்டால் அது அவலாக மாறாது.நெற் பொரியாகிவிடும்.வறுபடாவிட்டாலும் அவல் சரியான பக்குவமாக இராது.வறுத்தது ஆறிவிட்டாலும்,உரலில் இடிக்கும் போது நுணுங்கிவிடும்.சரியான பக்குவத்தில் வறுத்து,அடுப்புக்கு அருகிலேயே உரல் வைத்து இடித்து,சொளகிலிட்டு (முறம்) புடைத்து உமி நீக்கி அவலைத் தனியாகப் பிரிப்பார்கள்.இப்படித் தயாரிக்கப்படும் அவல் உடலுக்கு சத்து.ருசியும் கூட.குறுவை நெல்லில் தயாரிக்கப்படும் அவல் சிவப்பு நிறமாக இருக்கும்.

பனம்பழம் கிடைக்கும் காலத்தில் பனம்பழம் சாப்பிட்டு கொட்டைகளை தூர எறியாமல்,மண்,மாட்டுச்சாணம் காய்ந்து உதிர்த்தது கலந்து பாத்திபோல் செய்து அதில் பனங்கொட்டைகளைப்பதித்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைத்தெளித்து விடுவார்கள்.சித்திரை,வைகாசியில் பதிக்கப்படும் பனங்கொட்டைகள் மார்கழி மாதவாக்கில் கிழங்கு இறங்கியிருக்கும்.பாத்திகளை பொறுமையாகத் தோண்டி எடுத்து கிழங்குகளைப்பிரித்து எடுப்பார்கள்.

நாவல்பழம் பறிக்கப்போய் வந்தால் என்ன காரணமோ காய்ச்சல் வந்துவிடும்.நவ மரத்தில் பேய் இருக்கும் அதான்! என்று பயமுறுத்துவார்கள்.பாலப்பழம் சாப்பிட்டால் சூயிங்கம் போன்று இருக்கும்.நுங்கு,பதனீர்,சீம்பால்,கண்மாய் அழித்து கடைசியாய்ப் பிடித்து வரப்படும் கெண்டைக்குஞ்சு,கெழுத்தி மீன்,கண்மாய் விராமீன்,உரம் போடாமல் பயிரிடப்படும் சோளக்கருது (கதிர்),கீரைத்தண்டு,தோட்டத்துக்கத்திரிக்காய் இப்படி கிராமத்து ஸ்பெஷல் ஐட்டங்கள் ம்.ம்.. இப்போது நினைத்தாலும் மனமும்,நாவும் இனிக்கிறது.ஆனால் இவையெல்லாம் இப்போதும் கிடைக்கிறது.ருசிதான் மாறிவிட்டது.இதற்குக்காரணம்,மண்ணின் மணம் மாறிவிட்டதா?,காலம் மாறியதன் விளைவா? நமக்கு வயதானதன் காரணமா? எதுவாக இருந்தாலும் அந்தக்காலம் மீண்டு வருமா? ஏக்கத்துடன்...

28.2.10

தாய்

நீ தந்த
நேசத்தின் மிச்சத்தை
அடைகாத்ததில்
உயிர் பெற்று நிற்கிறது என் இல்லம்.

பேருந்துப் பயணங்களில்
சன்னல் இருக்கையில் அமர்ந்து
ஓடும் மரங்களை
சாலை கடக்கும் மயில்களை
வானில் இறக்கை அசைக்காது மிதக்கும் ஒற்றை கருடனை
விரல் நீட்டி குதூகலிக்கையில்
முந்தானைப்போர்வையில் மூடி
மூக்குச்சிந்தி
நீயும் குதூகலிப்பதாய் போக்குக்காட்டி...
என்னை உன்னோடு அணைத்துக்கொண்டு,
உன் உடல் சூட்டின் வெம்மையில் குளிர் காய்ந்து
உறக்கம் தழுவ மடியில் கிடத்தி
என் நாசியுணரும் உனது மஞ்சள் மணம்.
பயண அனுபவத்தை நினைவடுக்கில் சேமித்தாய்.
பயணிக்கும் போதுகளில் மலர வைத்தாய்

எந்த வயதில் எந்த உடை
என் முகத்திற்கு ஏற்ற அலங்காரம்
எனக்குப்பிடித்த பலகாரம்
எனக்குத்தெரியாத என் தேவைகள்
மயக்கங்கள்,தயக்கங்கள் உடைத்து
மனதின் வக்கிரங்கள் இயல்பெனத் தேற்றி
அறியாமை துடைத்து
ஆளுமை வளர்த்து
திட்டி,குட்டி,தட்டிக்கொடுத்து,
சன்னல்கள் திறந்து
கதவுகள் திறந்து
வெளிச்சம் புகுந்ததும்
அதன் வழி இன்னும்
பல அடைத்த கதவுகள் புலப்பட
திறக்கும் முயற்சி தொடர.....
என்னை மனிதனாக்கும் முயற்சியில் இன்னும் நீ

எனது கேள்வி இது தான் தாயே உன்னிடம்.
என்னைச்செதுக்க இத்தனை நாள் உனக்கு!
இன்னும் நான் முழுமை பெறாமல்...
உனக்குள்
இத்தனை வித்தைகளை விதைத்து
எங்களுக்காய் அனுப்பிய இறை யார்?

பெண்ணின் பெருமை

பெண்கள் நாட்டின் கண்கள்!,மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்! இப்படி எத்தனை கவிஞர்கள் எப்படிப் பாடி என்ன?பெண் குழந்தைகள் என்றால் இன்னும் நம் சமூகத்தில் ஒரு கசப்பு இருக்கத்தான் இருக்கிறது.என் தாயும்,தந்தையும் ஒரு ஆண் மகவிற்கென ஐந்து பெண் குழந்தைகளை பெற்றுக்கொண்ட போது உறவுகளின் மத்தியில் ஏளனப் புன்னகை,நட்பு வட்டாரத்திலோ பரிதாப நோக்கு,கேள்விப்படுபவர்களோ ஐந்து பெண்ணா அரசனே ஆண்டி,நீங்கள் எம்மாத்திரம் இப்படியான மொழிகளைக்கேட்டுக்கேட்டு என் பெற்றோர் பயந்து,பின் துணிந்து தெளிவு பெற்றது தனிக்கதை.எங்கள் வீட்டில் தான் ஐந்து பெண்கள் என்றால் அந்த காலகட்டத்தில் நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து பெண்குழந்தைகள்.பெண்குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது வீட்டில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் கொலுசுச்சத்தம்,சலங்கைச்சிரிப்பொலி,வாசலில் விரியும் வண்ணக்கோலங்கள்,கைவேலைகள்,பின்னல்கள்,சித்திர வேலைகள்,புதுப்புது சமையல் மணக்கும் அடுப்படி இப்படி வீடே நிறைந்து கிடக்கும்.இதை அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் அருமை புரியும்.எங்கள் ஊரில் ஒரு பொன் மொழி கூறுவார்கள்."பெண் கிளைதான் பெரும் கிளை" அதாவது பென் குழந்தையால் வரும் சொந்தம்,சுற்றம் பெரிது.பெண்களுக்குள்ள பாசமும்,பரிவும்,அன்பும்,நேசமும் அலாதியானது.ஆனால் சீருக்கும்,வரதட்சணைக்கும் பயந்து பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததும் இந்த பூமியில் தான்.

நாங்கள் சிறுவயதில் விளையாடப்போகும் இடங்களில் சிறுசண்டைகள் வந்துவிட்டால் வந்து விழும் முதல் வார்த்தை,"சீ போ! அது தான் உங்க அம்மா வெறும் பொட்டக்குட்டியா போட்டுவச்சிருக்கா" எனக்குள் ஆத்திரம் பொங்க என் அம்மாவிடம் கூறினால் என் அம்மாவும் அப்பாவும் சாதரணமாக,"போகுதுக விடு! பெரியவுக அப்புடிப்பேசிக்குவாக போலருக்கு.அதக்கேட்டு இதுகளும் பேசுதுக" என்பார்கள்.ஒரு குழந்தை பெற்றவர்கள் சந்தடிச்சாக்கில் ,"ம். நா சிங்கம் குட்டிப்போட்ட மாதிரி ஒண்ணு பெத்து வச்சிருக்கேன்.பன்னி குட்டிபோட்ட மாதிரியா பெத்துப் போட்டிருக்கேன்" என்று சம்பந்தமின்றி சாடை பேசுவார்கள்.ஒரு பெண் குழந்தை வைத்திருப்பவர்களோ," நா என்ன ஒண்ணு வச்சிருக்கேன்.உங்கள மாதிரியா அஞ்சு வச்சிருக்கேன். அதுனால நீங்க கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.அப்பத்தான் இதுகள கரை சேக்க முடியும்" போகிற போக்கில் வெடியை வீசிவிட்டுப்போவார்கள்.என் அத்தைக்கு ஒரு பெண்,என் சித்தப்பாவிற்கு ஒரு பெண்,என் அம்மா,என் பாட்டி ஒரு பெண் இப்படியான பரம்பரையில் ஐந்து பெண்களாய் நாங்கள்.ஆனால் இதே என் தந்தைக்கும்,தாய்க்கும் உழைக்கும்,சேமிக்கும் தன்முனைப்பையும்,எங்களை அருமையாக உருவாக்குவதிலும் முனைந்தார்கள்.இன்று எங்கள் வீடுகளில் ஒரு விழா,பண்டிகை என்றால் மகள்கள்,மருமகன் கள்,பேரக்குழந்தைகள் என்று வீடும் மனதும் நிறைந்து போகிறது.பெண்குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக அம்மா,அப்பா,தம்பிகுடும்பம் என்று கொண்டாடி இருக்க,நான்கு ஆண்குழந்தைகள் உள்ள வீட்டில் மருமக்கள் தனித்தனியே உலை வைக்க ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாரமாக பங்கில் கழிகிறது ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாடு.இன்று என் அம்மாவிற்கு ஒரு நோய்,ஒரு நலிவு என்றாலோ,வீட்டில் அதிக வேலை என்றாலோ ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக்கொள்கிறோம்.சிங்கங்களும்,ஒண்ணு வச்சிருந்தவுகளும் அனாதைகளைப்போல.ஒண்ணு வச்சிருந்த மிதப்பில் இருந்தவர்கள் ஒரு குழந்தையைக்கரை ஏற்ற வீட்டின் நாதாங்கியைக் கூட விற்றாக வேண்டிய நிலை.இன்னும் சொன்னால் சோகக்கதை இன்னும் நீளும்.

இன்று ஒரு தோழிக்கு ஏற்கனவே இரு பெண்கள்.மூன்றாவதாய் கர்ப்பம் தரித்ததும் அவரின் கணவர் அவரை கருக்கலைப்பு செய்யும் படி வற்புறுத்த அவரோ இது கண்டிப்பாக ஆண்குழந்தை தான் அதனால் கருக்கலைப்பு செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க,உடனே கணவர் அப்படி இது ஆண்குழந்தையாக இல்லாத பட்சத்தில் அந்தக்குழந்தையோடு நீயும் போய்விட வேண்டும் என்று மிரட்ட,அவர் தினம்தினம் கவலையோடும்,கண்ணீரோடும் காலம் கடத்தி அவரது பிரசவ நாளனறு இதே நினைவில் ரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிற மருத்துவர்களோ செய்வதறியாது திகைக்க,நாங்களனைவரும் வேண்டாத தெய்வமெல்லாம் வேண்டி கடைசியாய் அவருக்குப்பிறந்தது,"ஆண் குழந்தை" அவரது கணவர் விசயமறிந்து இனிப்போடு வர நாங்கள் ஒருவரும் இனிப்பு எடுத்துக்கொள்ளவுமில்லை,அவரோடு இன்று வரை முகம் கொடுத்துப்பேசுவதுமில்லை.நாம் தான் இப்படியென்றால் வங்காளத்தவரும் அப்படியே! இரு வங்காளத்தோழியருக்கு இரண்டாவது பெண்குழந்தை பிறந்து இருவரும் வேலைக்கு வந்த அன்று வாழ்த்துச்சொன்ன போது இருவரும் தலைகுனிந்து வடித்த கண்ணீரில் ஒலிபரப்புக்கூடமே ஈரமாகிப்போனது.அவர்களின் மாமியார் ஏதாவது வாக்குவாதம் வந்தால்,"ஒரு ஆண்பிள்ளை பெற்றுக்கொடுக்க வழியில்லை,பேசுகிறாயா" என்பார்களாம்.இவர்களுக்கெல்லாம் நான் எங்கள் வீட்டுக்கதையைச்சொல்லித்தான் தேற்றுவது.வேறென்ன செய்வது? நான் சந்திக்கும் நபர்கள்,என் நட்பு வட்டம் எல்லோரும் அனைவரிடமும் சந்தோசத்தை மட்டும் பகிர்ந்து,என்னிடம் மட்டும் சந்தோசம்,துக்கம் இரண்டையும் பகிரும் போது இப்படியெல்லாம் சொல்லித்தான் தேற்ற வேண்டியிருக்கிறது.

குடும்ப நண்பர் ஒருவரின் மகனுக்கு மூன்று வருடமாகப் பெண் பார்க்கிறார்கள். நினைத்தமாதிரி பெண் அமையவில்லை.இன்று எல்லா சமூகத்திலும் பெண் குழந்தைகள் குறைந்து விட்டதால் மாப்பிள்ளைகள் நிறைந்து பெண் பற்றாக்குறை.இந்த நிலை நீடித்தால் வரும் நாட்களில் ஆண்,பெண் விகிதாச்சாரம் மாறுபட்டு,சமூகக்குற்றங்கள் பெருகும் அபாயம் உண்டு.இப்போதே எங்கள் சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு நகை போடுவதும்,நல்ல பெண்ணாக இருந்தால் போதும்,"போடுறதப்போடுங்க" என்ற நிலைக்கு இறங்கிவந்துவிட்டார்கள்.பெண்குழந்தைகள் பிறக்கும் போது வெறும் கையோடா பிறக்கிறார்கள்.கையில் பத்துவிரலோடு பிறக்கிறார்கள்.அவர்களை வளர்த்து ஆளாக்கிவிட்டுவிட்டால் போதும்.அவர்களும் சம்பாதிப்பார்கள்.அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக்கொள்வதோடு நம்மையும் பொறுமையோடு பராமரிக்கும் அன்பும் நேசமும் அவர்களுக்குண்டு.பெண் குழந்தைகள் வீட்டிற்கு அழகு.ஆகவே பெண்களே ஆணென்ன?,பெண்ணென்ன? நாமிருவர்,நமக்கிருவர்! ஆரோக்கியமான,அறிவான,அழகான குழந்தைகளாய் இருந்தால் போதும். "பொண்ணைப்பெத்த அப்பா வந்தார் ஓட்ட வண்டியிலே" இது பழைய பாட்டு.பெண்ணுக்கும் கல்வியையும்,தைரியத்தையும்,தன்னம்பிக்கையும் கொடுத்து வளர்த்தால் கண்டிப்பாக சாதிப்பார்கள்.ஆன்ம பலமும்,புத்திசாலித்தனமும்,சிறந்த உள்ளுணர்வும் இயற்கையிலேயே கொண்டவர்கள் பெண்கள்.கொஞ்சம் தூண்டினால் போதும் துலங்குவார்கள்.நல்ல மக்களாக வெற்றிக்கொடி நாட்டி விளங்குவார்கள்.

20.2.10

உப்புக்கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி அல்லது குருணை - 2 உழக்கு
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - சிறிது
தாளிக்க - எண்ணெய்,கடுகு,உளுந்து,வர மிளகாய் -4

அரிசி அல்லது குருணையை ஊற வைத்து ரவையை விட சற்று பெரிதாக அரைத்து எடுத்து,அதோடு பாசிப்பருப்பை ஊறவைத்துக்கலந்து,தேவையான உப்பும் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.தேங்காயைத்துருவி வைத்துக்கொண்டு,சின்ன வெங்காயத்தை உரித்து,சன்னமாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து,காய்ந்ததும் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து,மிளகாயைக்கிள்ளிப் போடவும்.கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப்போட்டு,வாசம் வரும் வரை வதக்கி,பின் தேங்காய்த்துருவல் போட்டு வதக்கி,மாவையும் சேர்த்து,பின் கொழுக்கட்டைகளாய் பிடிக்கும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.தேவைப்பட்டால்,சிறிது சீனி சேர்க்கலாம்.பிறகு,இட்லிச்சட்டியின் குழித்தட்டில் எண்ணெய் தடவி,கிளறிய மாவை விருப்பமான வடிவில் பிடித்து வேக வைக்கவும்.இந்தக்கொழுக்கட்டை சூடாக,தக்காளிச்சட்டினியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

18.2.10

இப்படித்தான் சிலரின் பால்ய காலம்

சொப்புவைத்து விளையாடும்
சின்னஞ்சிறு வயதிலும்
இடுப்பில் பாப்பாவோடு
வீதிக்குழந்தைகளின்
விளையாடல்களின் பார்வையாளராய் நான்

கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தில்
மண் பாத்தியில்
ஒளிக்கப்படும் ஈர்க்குச்சி தேடி எடுப்பதற்குள்
அடுப்படி உதவிக்கு
ஆயிரம் முறை அழைக்கும் அம்மா!

நொண்டி,காசிக்குப்போறேன் - நானும் வாரேன்
ஐஸ் பாய்,பூப்பறிக்க வருகிறோம்,
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
இப்படி
எத்தனை விளையாட்டு என் பால்யத்தில்.
எதுவும் வாய்க்கவில்லை எனக்கு முழுதாய்.
தவணை முறையில் விளையாடும் என்னால்
தப்பிப் போகிறது அவர்களின் விளையாட்டு என்று
பார்வையாளனாய் மட்டும் அங்கீகரித்த பால்ய சினேகிதர்கள்.

மூத்தபிள்ளையாய்ப்பிறந்து
இளையோரைச்சுமந்து என்
இடுப்பே வளைந்ததாய்
என் தாயைப்புறம் பேசும் சொந்தங்கள்.
எதுவும் புரியாத வயதில்
என் தாயின் கண்ணீரும் புரியாது போனது.
புரிந்த போது
காலம் என்னை வேறிடத்தில் நட்டுப்போக,
உடன்பிறப்பை சுமப்பதற்கும்
உதவியாய் இருப்பதற்கும்
இன்னொரு பால்யம் வேண்டும் மனது

இன்று
எனக்காய் என் உடன்பிறப்புகள்
என் பாரங்களைப்பகிர்ந்து கொள்கையில்
வெட்கமாய் இருக்கிறது.
நான் அடித்தது வலிக்கிறதா?
அன்பு நிறை உடன்பிறப்புகளே!

17.2.10

நிலாவாண்டைப்பாடல்.(நிலவினை வாழ்த்திப்பாடும் பாடல்)

மாசிப்பிறையிலயும் வட்டங்கொண்ட லாவிலயும்
போட்டாப்பொழியுமின்னு பெரியோர்க சம்மதிச்சு
இட்டாப்பெருமையின்னு இளவட்டங்க சம்மதிச்சு
சின்னங்க கூடி சேர்ந்து மணக்கொண்டுவந்து
மட்டங்க கூடி வரிக்கல்லு கொண்டு வந்து
கொத்தனழைச்சு குறிப்பான இடம் பாத்து
தச்சனழைச்சு சரியான இடம் பாத்து
சித்திரமா வீடு கட்டி சிறுமச்சு ஒண்ணு போட்டு
எட்டடிக்குள்ளாக எதவா மனை போட்டு
கூட்டி மொழுகியவர்க்கு கோலங்கள் இட்டார்க்கு
குழந்த வரம் கொடுப்பா கோப்பான லாவாத்தா!
மாவரைச்சுக்கோலமிட்டு,மகிழ்ந்து விளையாண்டவர்க்கு
மஞ்சன் வரம் கொடுப்பா மகிமையுள்ள லாவாத்தா!
போடுங்க பொண்டுகளா,பொன்னாதிருக்குலவை.

லாவாத்தா, லாவாத்த எங்க எங்க நீ போன
கல்லாதிருக்குடிக்கு கல்யாணம் சொல்லப்போனேன்
கல்லத்துளைச்சு கடற்கரையில் முட்டையிட்டு
இட்டது மூனு முட்டை பொறிச்சது ரெண்டு குஞ்சு
இளைய குஞ்சுக்கிரை தேடி இரு காதம் போய்விழுந்து
மூத்த குஞ்சுக்கிரை தேடி முக்காதம் போய் விழுந்து
மாயக்குறத்தி மகன் வழிமறிச்சான் கண்ணி கட்டி
காலு ரெண்டும் கண்ணியில இறகு ரெண்டும் பந்தடிக்க
அன்னழுத கண்ணீரு ஆறு பெருகி ஆனை குளிப்பாட்டி
குண்டு பெருகி குதிர குளிப்பாடி
ஏரி பெருகி எருது குளிப்பாட்டி

இஞ்சிக்குப்பாய்ஞ்சு எழுமிச்சைக்கு வேரோடி
நஞ்சைக்கு பாய்ஞ்சு நார்த்தைக்கு வேரோடி
மஞ்சளுக்குப்பாய்ஞ்சு மாதுளைக்கு வேரோடி
இஞ்சிக்குக்கீழே இருக்கிறா லாவாத்தா
மஞ்சளுக்குக் கீழே மறையுறா லாவாத்தா
நஞ்சைக்குக் கீழே நடக்குறா லாவாத்தா
சேங்கை பெருகி செம்பன் விளையாண்டு
வாய்க்கா பெருகி மஞ்சன் விளையாண்டு
பள்லம் பெருகி பாலர் விளையாண்டு
ஐந்நூறு பாப்பசுவ அவுத்து விட்டே நீராடி
தொண்ணூறு பாப்பசுவ தொறந்து விட்டே நீராடி
அஞ்சு விரளி மஞ்ச அரைச்ச உருண்டை சேர்த்து
மூனு விரளி மஞ்ச முணுக்கி உருண்டை சேர்த்து
பூசிக்குளிப்பாளாம் பூப்படர்ந்த பொய்கையில
முழுகிக்குளிப்பாளாம் முத்துக்கரைகளில

அல்லியும் தாமரையும் அழகழகா பூத்திருக்க
வெங்காயத் தாமரையும் விதவிதமா பூத்திருக்க
கொட்டியும் தாமரையும் கொடிக்கொடியாய் பூத்திருக்க
அள்ளி ஒதுக்கி அழகாத் தலை முழுகி
பாசி ஒதுக்கி பாங்காத் தலை முழுகி
நாக்காலி மேலிருந்து நல்ல மயிருணத்தி (கூந்தலைக் காய வைப்பது)
கோக்காலி மேலிருந்து கோரை மயிருணத்தி
முக்காலி மேலிருந்து முத்து மயிருணத்தி
நாக்காலிக்காலொடிஞ்சு நல்ல மயிர் அறுந்ததென்ன?

அறந்தாங்கி நந்தவனம் அரும்பா சொரிந்தாலும்
அருமையுள்ள லாவுக்கு அரும்பெடுப்பார் எத்தனையோ
புதுக்கோட்டை நந்தவனம் பூவா சொரிந்தாலும்
பொறுமையுள்ள லாவுக்கு பூவெடுப்பார் எத்தனையோ
மதுரை நந்தவனம் மலராஸ் சொரிந்தாலும்
மகிழ்ச்சியுள்ள லாவுக்கு மலரெடுப்பார் எத்தனையோ
போதுமாடி லாவாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கி
போதாடி என் செய்வேன் பொலுப்பி முடிக்கலாம்
பத்துமாடி லாவாத்தா பத்தினியார் கொண்டைக்கி
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
காணுமாடி லாவாத்தா கணிசமுள்ள கொண்டைக்கி
காணாட்டி என் செய்வேன் கலந்து முடிக்கலாம்

பாசித்துறைகளிலே பதுங்குறா லாவாத்தா
பவளமல்லிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
முத்துத் துறைகளிலே முகம் பாக்குறா லாவாத்தா
முத்தரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா
தண்ணீர்த் துறைகளிலே தவக்கிறா லாவாத்தா
தங்கரளிப் பூவெடுத்து முடிக்கிறா லாவாத்தா

வாங்கருவா போல வட்டஞ்சேர்ந்த லாவாத்தா
கருக்கருவா போல கண் துறந்த லாவாத்தா
வெட்டருவா போல வெளிச்சரிச்ச லாவாத்தா
சித்தருவா போல சிரிக்கிறா லாவாத்தா

ஆலஞ்சருகினிலே அன்னங்க மேய்ஞ்சாப்போல்
ஆராய்ந்தெளிஞ்சுருச்சு வாராளே லாவாத்தா
வாழை இலைகளிலே வனத்துளிய மேய்ஞ்சாபோல்
வாலுருவி அம்பு கொண்டு வாராளே லாவாத்தா
புங்கஞ்சருகினிலே பொய்க்கோழி மேஞ்சாப்போல்
பூரிச்செழுந்திருச்சு வாராளே லாவாத்தா
தென்ன இலைகளிலே சிறுதுளிய மேய்ஞ்சாப்போல்
சிங்காரக் கொட்டோட வாராளே லாவாத்தா
போடுங்கடி பொண்டுகளா பொன்னாதிருக்குலவை