கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

22.1.10

போன்சாய் மரங்கள்.

வீதியின் அகன்ற முச்சந்தி நாற்சந்திகளில்
உழுதுகிடக்கும் புழுதியின் படிமங்கள்
முழங்கால் வரையிலும்.

காயங்கள்,சிராய்ப்புகள்
காட்டாது மறைக்கப்பட்டு
வீதிச்சண்டையை வீதியில் தொலைத்து
காயும்,பழமும் நூறு முறை.

விருந்துகள் வரவறிந்தால்
கைவிரித்தோடி எதிர்கொண்டு
கைச்சுமை பகிர்ந்து
கண்களில் சிரிக்கும் பிரியமும் பாசமும்.

வறுமையும்,வெறுமையும் அறியா எனது
குழந்தைமையின் காலங்கள்
கடுகு போட்டிசைக்கும் ஒற்றை பலூனில்
எனக்கான உலகம்

ஒற்றை மகளுக்காய்
உலகின் நவீனங்கள்
ஒரு மொத்தமாய் வீட்டிற்குள்.

வாராத விருந்து வலிய வந்தாலும்
சாளரத் திரையகற்றி சின்னதாய்
உதடு விரிப்பாள்.

அல்ஜீப்ராவும்,அளவியலும்
அனிமேஷனும், ஜாவாவும்
வானவியலும்,வடிவியலும்
வசமான அளவு
வசமாகவில்லை வீதி விளையாட்டு

தனித்தனி தீவுகளாய்
சமுதாய சமுத்திரத்தில் குழந்தைகள்
அடித்து,அடிவாங்கி,
சண்டையிட்டு சமரசம் செய்து
இப்படி எதுவுமே இல்லாத பால்ய காலம்.

சூரிய ஒளியும்,சத்தான உணவும் அளந்து
கிளைகள் குறுக்கி,முடக்கி
போன்சாய்ச்செடியாய் மகள்
தொட்டிலில் இருந்து தொட்டியில் வளர்கிறாள்.

எனது கவலை எல்லாம்
இவளின் குழந்தை எப்படி வளரும்?

5 கருத்துகள்:

  1. அடடா!

    இப்பத்தான் என் மனைவியிடம் தொலைபேசியில் பேசும் போது (இந்தியாவில் நேரம் இரவு 10.30 மணி) இன்னும் ஹோம்வொர்க் செய்துக்கொண்டிருக்கிறாள் என்று கூறினாள். வருத்தமாக இருந்தது. ஃபோனை வைத்துவிட்டு தமிழ்மணம் பக்கம் வந்தால் உங்கள் கவிதை. என்ன பொருத்தம்......

    பாவம் குழந்தைகள்.

    ஆம் இவர்களின் குழந்தைகளை நினைத்தால்.......


    வாழ்த்துகள். எழுத்தில் ஆதங்கம் அதிகம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. //சூரிய ஒளியும்,சத்தான உணவும் அளந்து
    கிளைகள் குறுக்கி,முடக்கி
    போன்சாய்ச்செடியாய் மகள்
    தொட்டிலில் இருந்து தொட்டியில் வளர்கிறாள்.//

    இந்த கடைசி வரிகள் ரொம்ப பொருத்தம்.

    //எனது கவலை எல்லாம்
    இவளின் குழந்தை எப்படி வளரும்? //

    ம்...அத்தியாவசியமான யோசனை தான்.

    பதிலளிநீக்கு
  3. /அல்ஜீப்ராவும்,அளவியலும்
    அனிமேஷனும், ஜாவாவும்
    வானவியலும்,வடிவியலும்
    வசமான அளவு
    வசமாகவில்லை வீதி விளையாட்டு

    தனித்தனி தீவுகளாய்
    சமுதாய சமுத்திரத்தில் குழந்தைகள்
    அடித்து,அடிவாங்கி,
    சண்டையிட்டு சமரசம் செய்து
    இப்படி எதுவுமே இல்லாத பால்ய காலம்.

    சூரிய ஒளியும்,சத்தான உணவும் அளந்து
    கிளைகள் குறுக்கி,முடக்கி
    போன்சாய்ச்செடியாய் மகள்
    தொட்டிலில் இருந்து தொட்டியில் வளர்கிறாள்.

    எனது கவலை எல்லாம்
    இவளின் குழந்தை எப்படி வளரும்?/

    உண்மை தான்

    பதிலளிநீக்கு
  4. நண்பர் பலா பட்டறை சொல்லித்தான் இங்கு வந்து பார்த்தேன்... அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். தொடர்கிறேன்....

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு