கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

11.1.10

மனித நேயம்

பஞ்சம் பிழைக்க வேண்டி
பரதேசம் போன போதும்
கூட வந்த உறவுகளும்
கூடாத போதுகளில்
கை கொடுக்கும்
ஆடுகளும், மாடுகளும்
வியாபாரச்சரக்குகளாய்...
உயிரைப்பொருளாக்கி
ஊரானுக்கு விற்றுவந்த
குடியானவன் மனது
குமையும் இயலாமையால்.

கொட்டகை வெறுமை கண்டு
கொண்டவள் முகம் கறுக்க
கொஞ்சி வளர்த்த பிள்ளை அழுது முகம் சிவக்க
விற்றவன் மனதோ விம்மி அழும்
காலத்தின் கொடுமை என்று.
ஐந்தறிவு ஜீவனையே
அணைத்து வளர்த்த மக்கள்
"அறியாமை கொண்ட பட்டிக்காட்டான்"
பகரும் நகர அகராதி.

அழுக்கு வேட்டி கிராமத்தான்
அறியாது கேட்கிறான்
பெரிய மனிதர்களே சொல்லுங்கள்.
"மனித நேயம்"சொல்லுக்கு
அர்த்தமுண்டா உங்கள் அகராதியில்.
சந்தி சிரிக்கிறது.
சாண் வயிறு எரிகிறது.
ஊடகப் படம் கண்டு
உலகே சிரிக்கிறது
போங்கய்யா! நீங்களும்,உங்கள் நாகரீகமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக