கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.9.11

கடிதங்கள்



இப்போதெல்லாம்
 யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லை

தேரோட்டமா? திருவிழாவா?
நாற்றுப்பறிப்பா? நடவா?
களையெடுத்தலா? கதிர் அறுப்பா?
செய்தி கொண்டு வரும் அந்த மஞ்சள் நிற அஞ்சலட்டை.

நலம் நலமறிய எழுதவும்
உப்புக்கண்டம் போடவும்
ஓடுடைத்து புளி வாங்கவும்
தூதாகப் போகும் இன்லண்ட் கடிதம்

படித்த கடிதங்களை,
பொத்திப் பாதுகாத்து
காலம் கடந்து குப்பையான ஒரு பொழுதில்
கிழித்தெறிய களைந்த போது
ஒவ்வொரு வார்த்தையிலும்
உறைந்து கிடந்தது கடந்த காலம்

23.9.11

தும்பைப்பூக்கள்


கடைசிக்கால
நிம்மதிக்கனவுகளுடன்,
வானம் தொடும் ஆவலும்,
ஏணி வைக்கும் முயற்சிகளுமாய்,
பெரு நகரச் சமுத்திரத்தில் அமுதம் தேடி
மூழ்கி, எழுந்து, நீந்தி, திளைத்து……

கனவுகளில் வலம் வருகிறது
தட்டான் பிடித்த பொழுதுகளும்
தவளை கத்தும் மழை இரவுகளும்

நட்ட செடிகளில்
முதல் பூவும் முதல் பிஞ்சும்,.
திருவிழாக்கடைகளில் பஞ்சுமிட்டாயும், ரப்பர் கடிகாரமும்,
வயல் வரப்புகளில்,
கண்மாய்க்கரைகளில்
கதிர்க்களங்களில் உண்ட கஞ்சியும், ஊறுகாயும்,
நல்ல நாள் பார்த்து சமைத்த
புது அரிசிச்சோறும், கறிக்குழம்பும்,
தும்பைப்பூக்களில் தேனருந்தும் பட்டாம்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்,
ஊரணிப்படிக்கட்டுகளில்
அந்தி நேரங்களில் ஒலிக்கும் துணி தப்பும் ஒலியும்,
கலவைக்குரல்களையும் திரித்து, திரித்து,
விரியும் நினைவில் சொன்ன கதைகளில்
மெல்ல இளகும் மனவெளி..
உறங்கிப்போன குழந்தைகள் கனவில்
தும்பைப்பூக்களும், தாமரைகளும்..
.
அரவமற்ற ஊரணிக்கரைகளில் பூத்துக்கிடக்கிறது
பறிக்க ஆளில்லாத தாமரைகள்

13.9.11

எங்கள் கொற்றவை




ஒரு நெடுங்கனவின் நீட்சியாய்
துரத்திக்கொண்டே இருக்கிறது அவள் குறித்த காட்சிகள்.
மறக்க நினைத்தாலும் உள்ளத்தில்
தைத்துக்கொள்கிறது அவளின் துயரங்கள்

வாழ்க்கை வஞ்சித்த வனதேவதை அவள்.
நாகரீகத்தின் சாயல் அறியாத கிராமத்துக்கொற்றவை.
அன்பும், கற்பும் மட்டுமே அவளின் ஆயுதங்கள்
கஞ்சிக்கலயத்தில் கதிரவனையும் சுமந்து
கழனி, காடெல்லாம் பண்படுத்தி
கதிர் வளர்த்தாள்
வனம் பெருக்கினாள்
மாலை சூரியனை மலை முகட்டில் விட்டு
நிலவைக்கூட்டி வீடு வருவாள்.
காலம் அவளின் முந்தானையில்.
பொறுக்கிவந்த சுள்ளியில் சுடர் வளர்த்து
வயிற்றின் பசித்தீ போக்கி,
மீத உணவில்
காலை காக்கைக்கு ஒரு பிடி அன்னம்
இரவு பைரவருக்கு ஒரு பிடி என்று ஒதுக்கிவைப்பாள்.
ஆலை அரிசி உண்டதுமில்லை.
ஆகாத உணவை தின்றதுமில்லை.
மருந்தும், விருந்தும் அறிந்ததுமில்லை.
.உதவி என்போருக்கு உயிர் தருவாள்.
அன்பைக்கூட அதட்டலாய்க்காட்டுவாள்.
சுற்றத்தின் துயர் தீர்ப்பாள்
முந்தையத் தலைமுறைப்பெண்களின்
பிறவிக்கலி தீர்க்கும் சுமைதாங்கியாய் அவள்.

அவள் உடலின் உயிர்க்கடிகாரம்
அவளை உட்கார ஒட்டாமல் விரட்டிக்கொண்டேயிருக்க
எப்போதும் இயற்கையோடு உறவாடியபடி இருந்தாள்.
மனிதர்களிடம் மட்டும் விலகியே இருந்தாள்.
தேவைகளை அவசியத்தேவைகளாக மட்டுறுத்தி
ஆசைகளைப்பொசுக்கி அறம் வளர்த்தாள்.
யுகம் யுகமாய் வாழ்ந்த பெண்களின்
துயர் படிந்த குறியீடாய் அவள்.

அவளது இல்லில்
அவளின் தனிமைக்குத் துணையாய்
தெய்வங்கள் குடியிருந்தன.
கழனிகளிலும் காடுகளிலும்
மைனாக்களும், மயில்களும்.
காற்றின் திசை பார்த்து மழையின் வரவு சொல்வாள்.
தவளையின் மொழி, முட்டையுடன் எறும்புகள்
பல்லியின் ஒலி, பசுவின் கதறல்
அத்தனைக்கும் அர்த்தம் சொல்லும்
இயற்கையின் அகராதி அவள்.
மண் பயனுற வாழ்ந்த மகளீரின்
மங்காத அடையாளமாய் அவள்

முந்தையத் தலைமுறைப்பெண்கள்
இறக்கித்தந்த தோள் சுமை விட்டு, விடுதலையாகி
பூட்டுகள் விலக்கி புதிதாய்ப்பிறந்த எங்களுக்கு
வியப்பின் வடிவம் அவள்.
பொல்லாப்பொழுதாய் விடிந்த
பனிமூடிய காலைப்பொழுதொன்றில்
நெட்டுயிர்த்துப் பிரிந்தது
எங்கள் குலக்கொற்றவையின் உயிர்க்காற்று.
கண்ணீர்த் துளிகளைத்தவிர கொடுப்பதற்கு எதுவுமில்லாத
யாசகர்களாய் நானும், இந்த பூமியும்.

12.9.11

என் இரவு



இரவின் மடியில்
சூரியன் உறங்க
பூமியின் வெளியில் பாடித்திரிகிறது மௌனம்

இருள் சூழ் வெளியில்
காலத்தின் விரல் பிடித்து நான்.
என் வானத்து நிலா
பால் நிற ஒளியூற்றி இருளை அழிக்க
இருட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

வனாந்தரத்தின் ஒற்றையடிப்பாதையாய்
வானில் நீண்டு கிடக்கிறது ராக்கெட் புகை.
நட்சத்திரம் மின்னும் வானில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காற்றாய்ப்போன என் உறவுகளை.

நித்திரையற்ற இரவினில்
தூங்காத கண்களின் கருப்பு வெள்ளைக்கனவாய்
விரிந்து கிடக்கிறது இரவு.
சலனமற்ற நிசப்தத்தில் உலவுகிறது
என் முன்னோரின் தாலாட்டுகள்.

இலையுதிரும் சப்தத்தில்
நடுங்கும் குருவிகளின் சிறகசைப்பு.
எல்லோரும் உறங்கும் இந்த நடு நிசியின்
ஏகாந்தம்.
தூரத்து ஊர்களின் சந்தைகளுக்கு
ஒற்றை மணி அசைய
ஊர்வலம் போகும் மாட்டு வண்டிகளில்
அசையும் லாந்தர் வெளிச்சம்.

ஏவலாய், எடுபிடியாய்,
காத்துக்கிடந்து, காக்க வைத்து
நிர்ப்பந்தங்களைச் சுமக்கும் கட்டிடக்காடுகளில்
மூச்சடைக்கும் பகலை விடவும் இனிமையானது இரவு.
அதுவும் விடுமுறைக்கு முதல் நாள் இரவு.


எனக்குப்பிடித்திருக்கிறது இந்த இரவு.
வாழ்க்கையை நகர்த்தும் பகலை விட
நான்
வாழும் இந்த இரவு.

9.9.11

ஆண் மனம்





ஓயாத வாயும்
ஊமையான மனதுமாய் அவள்.
ஒரு நாளும் விரித்ததில்லை
அவளின் மனதின் பக்கங்களை அவனிடம்.

எத்தனையோ கதைகள் சொல்வாள்
அவளின் நினைவு தெரிந்த நாள் முதலான நடப்புகளை,
பிடித்த உணவு, பிடித்த உடை,
பிடித்த நிறம், பிடித்த பறவை,
பிடித்த, பிடித்த இன்னும் பிடித்தவெல்லாம் சொன்ன அவள்
சொன்னதே இல்லை பிடித்தவன் பெயரை.

புதிரிலும் புதிரானது அவள் புன்னகை
அவளின் அகன்ற விழியின் பாவைக்குள் புகுந்து
மனவெளிகளை ஆராய எத்தனிக்கும் அவன் பார்வையை
எதார்த்தமாய் இமைத்து
மென்மையாய் நிராகரித்தாள்
அவனின் தூண்டில் இரைகளை அவனுக்கும் பகிர்ந்து
புன்னகை மட்டும் பதிலாய்…

அவள் மனதின் அந்தரங்கப்பக்கங்களின்
அவலமோ, ஆனந்தமோ
அறிவதில் அவன் பிரியம் காட்ட
கடந்த காலம் நான் வாழ்ந்த காலம்
நிகழ் காலம் நமக்கான காலம் என்றாள்.

அவளுக்குத்தெரியும்
ஆயிரம் கதைகள் சொன்னாலும்
ஆண் மனது என்னவென்று……