கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

5.1.10

பாலைய நாட்டுப் பெண்களின் முந்தையத்தலைமுறைகள்

 என் பாட்டி காலத்தில் அதாவது அறுபது,எழுபது வருடங்களுக்கு முன் எங்கள் சமூகப்பெண்கள் வீட்டு முகப்பிற்கு வரக்கூட அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.அடுப்படியும்,வயலும்,மாட்டுக்கொட்டகையும் தான் கதி.மிஞ்சினால் வீட்டின் இரண்டாம் கட்டு வரை வரலாம்.அந்த கால கட்டத்தில் எங்கள் கிராமங்களில் எங்கள் சமூக ஆண்கள் பர்மா,சிங்கப்பூர்,மலேயா,ரங்கூன் என்று வெளிநாடுகளில் கொண்டு விற்கப்போன நகரத்தார் சமூக மக்களின் காசுக்கடைகளில் கணக்குப் பிள்ளையாக,சமையற்காரர்களாக,சிப்பந்திகளாக அவரவர் கல்வித் தகுதிகளுக்கேற்ப பதவிகள்.அவர்களுடன் வெளிநாடு வாசம் அந்த கால கட்டத்தில் பெண்கள் மாமனார்,மாமியாரின் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு,குழந்தைகளை வளர்த்துக்கொண்டு,வயல் வரப்புகளைக் கவனித்துக்கொண்டு,ஆடுமாடு,கோழிகளை வளர்த்துக்கொண்டு குடும்ப மேன்மையே தங்களது குறிக்கோளாய் இருந்தார்களாம்.நகரத்தார் பெண்கள் சிறந்த பழக்க வழக்கமுடையவர்கள் என்பதால் எங்கள் சமூகத்தின் பெரும்பாலான பெண்குழந்தைகளுக்கு நகரத்தார் வீடுகளே பள்ளிக்கூடமாக,அந்தப் பெண்களே ஆசிரியப்பெருமக்களாக இருந்திருக்கிறார்கள்.ஆண்கள் விருந்தாளிகளைப்போல வருவதும் இரண்டு மாதம் தங்குவதும்,திரும்பிப் போவதும் வழக்கமாகிப்போனது.பணம் அனுப்புவதும் வீட்டின் மூத்தவர்களுக்குத் தான் வரும்.அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட அவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கவேண்டும். குழந்தைகளின் விருப்பத்திற்குக்கூட தாயானவர்கள் எதுவும் வாங்கித்தரமுடியாத நிர்ப்பந்தம்.கணவனின் சம்பாத்தியத்தில் உரிமை கோரக்கூட தைரியமற்று வெறும் வேலைக்காரிகளைப்போல இளம் பெண்கள்.ஆண்களில் நிறையப்பேர் அன்னிய பூமியில் வேற்றுப் பெண்களை சட்டத்திற்குப் புறம்பாக மணந்து அங்கேயே தங்கி மாண்டவர்களும் உண்டு.அன்றி அந்த அந்தப்புரப்  பெண்களை அங்கேயே விட்டுவிட்டு வயதான காலத்தில் திரும்பிவரும் தன் கணவருக்குத் தாதிகளாய் மட்டும் வாழ்ந்த பெண்களும் உண்டு.அந்த அந்தப்புரப் பெண்களை குழந்தை குட்டிகளுடன் கூட்டிவந்து சொத்துப் பிரித்த கதைகளும் எங்கள் சமூகத்தில் நிறைய உண்டு.ஐம்பது வருடங்களுக்கு முன் எங்கள் பெண்களின் நிலையை என் அப்பத்தா கூறும் போது அழுகை வரும்.நீங்க இப்புடி கத சொல்றீங்களே? உங்களுக்கு அழுக வரல, என்றால் கண்மாய்க் கரை,வய வரப்புன்னு கண்ணீர சிந்திச்சிந்தி கண்ணீரே வத்திப்போச்சு என்பார்.

        எப்போதாவது வரும் கடிதங்களில் மட்டுமே தங்கள் அன்பைப்பரிமாறி வாழ்ந்த அவர்களது வாழ்க்கை எனக்கு வியப்பளிக்கும்.என் அப்பத்தா, என் மாமியார் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.அந்தக்கடிதத்திலும் அன்பே,ஆருயிரே என்று உருகியிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்.உடல் நிலையைக்கவனித்துக்கொள்ளவும்.குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளவும்.என் தாய், தந்தையிடம் அவர்கள் மனம் கோணாமல் நடந்துக்கொள்ளவும் என்றுதான் எழுதியிருப்பார்களாம்.வெறும் கனவுகளில் குடும்பம் நடத்தி,கற்பனையில் கொஞ்சிக் குலவி வாழ்ந்த அந்தப்பெண்களுக்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்.அவர்களுக்கு வாழ்க்கை குறித்த மதிப்பீடு
என்னவாக இருந்திருக்கும்.நெல் அவிப்பது முதல்,மசாலா அரைத்து குழம்பு வைப்பது என வீட்டு வேலைகள் சுலபமாகாத காலகட்டம்.வீட்டின் கடைக்குட்டி வரை அத்தனை பேருக்கும் வேலைகள் காத்திருக்கும்.அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் இரவு எட்டு மணி வரை வேலை தான். இதற்கிடையில் நாத்தனார்,மாமியாரின் குத்தல் குசும்பல் வேறு.தலை சீவி பூச்சூட மாட்டார்களாம்.வெளிநாட்டிலிருந்து கணவன்மார் வந்திருக்கும் போது தான் நல்ல சேலை உடுத்தி நகை அணிவது,பூச்சூடுவது எல்லாம்.ஆண்கள் வரும்போது கப்பல் நிறையக் கொண்டு வந்தாலும் மாமனார்,மாமியார் பார்த்து எது கொடுக்கிறார்களோ அதுதான். மனைவிக்கு.ஒளித்து மறைத்து ஏதாவது கொடுத்து விட்டால் கண்ணீரும் கம்பலையும் வீடே மிதக்கும் படி ஆகுமாம்.அவர்கள் பதவிக்கு வந்த போது பாவம் காலம் மாறிவிட்டது.அவர்கள் அந்திமக்காலம் வரை அடிமைகளாவே இருந்து போன தலைமுறை கடந்த மூன்றாம் தலைமுறை.எந்தச்சமூகத்திலும் இனி ஒரு தலை முறை அப்படி ஒரு வாழ்க்கை வாழும் விதி வரவே கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக