கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

4.1.10

சிவகங்கை மாவட்ட கிராம சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள்

         பெண்கள் சுய உதவிக்குழுக்கள் இப்போது நாடெங்கிலும் பெருகி வருகிறது. ஒரு மக்கள் நலத்திட்டம் எந்த குறிக்கோளுக்காக உருவாக்கப் பட்டதோ அந்த குறிக்கோளை அது அடைந்து விட்டால் அது அந்தத் திட்டத்தின் வெற்றி! சுய உதவிக்குழுக்களின் மூலம் பயனடைந்த பெண்களைப் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது.திக்கற்ற நிறைய மகளீரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றி வைத்திருக்கிறது இந்தத் திட்டம்.ஆனால் எங்கள் கிராமங்களில் மகளீர் மன்றங்கள் என்ற பெயரால் ஆரம்பிக்கப்படும் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் வங்கிக்கடனுதவிகளை வைத்துத் தொழில் தொடங்குவதில்லை.சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற தொழில் பயிற்சியளித்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.பொம்மைகள் செய்வது,தையல் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்வது போன்றவற்றில் பயிற்சியளித்தனர்.ஆனால் உற்பத்திப் பொருட்களைச்சந்தைப்படுத்தத் தெரியாது,முடியாது தொழிலகளை கைவிட்டனர்.எங்கள் கிராமச்சகோதரிகளின் கைவினைப்பொருட்கள் அனைத்தும் காசாக்க முடியாமல் பரிசுகளாய்ப் போனது.

           சென்னை போன்ற மாநகரங்களில் சுய உதவிக்குழுப்பெண்கள் பலர் சாதனையாளர்களாய் இருப்பதை பல மகளீர் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.கிராம சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் நகர உறுப்பினர்களைப்போல வாய்ப்புகளை தமிழ் நாடு அரசு ஏற்படுத்தித்தரவேண்டும்.கிராமங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த சொல்லித்தர வேண்டும்.அது போல அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப்பொருள் உற்பத்திகளைக் கிராம சுய உதவிக்குழுக்களுக்கு சொல்லித்தந்து அவர்கள் லாபம் ஈட்ட வழி வகை செய்தால் தான் ஒரு பரவலான் வளர்ச்சியை நாடு காண முடியும்.எங்கள் கிராமத்தில் என் உறவினர்கள் அனைவரும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்.ஆனால் சுய உதவிக்குழுக்களின் மூலம் வரும் கடனுதவியைக்கொண்டு குழந்தைகளின் கல்விச்செலவு,மற்ற அத்தியாவசியச்செலவுகளை செய்கின்றனர்.அரசு திட்டங்களை வகுத்தும் அந்தத் திட்டத்தின் பயனை அனுபவிக்க முடியாத மக்கள்.ஏழ்மையில் இருந்து விலக முடியாது நிரந்தரமாகத் துன்பத்தில் உழலுகிறார்கள்.உற்பத்தி என்பது லாபத்தைத் தரமுடியாத போது அதை மேற்கொள்வது மதியீனம்.தங்கள் சுற்று வட்டாரத்தில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்யச்சொல்லிக்கொடுத்தால் நன்மை.அதோடு ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகிற துறையின் தொழில் நுட்பம் சொல்லிக்கொடுத்தால் போட்டிகள் குறையும். லாபம் ஈட்டுவது சுலபம். உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள்,எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்திகளைக் கற்றுத்தந்தால் நலம். இப்போது எங்கள் மக்கள் கூலி வேலைகளுக்கும்,அடிமை வேலைகளுக்கும் போகிறார்கள். கடின உழைப்பிருந்தும்,அறிவுத்திறம் இருந்தும் வாய்ப்புகளின்றி சுருங்கிப்போகும் இவர்களை யார் விடுவிப்பது? இதைப்படிக்கும் நல்ல உள்ளங்கள் யாராவது வழிமுறைகளைத் தெரிவித்தால் பல வீடுகளில் விளக்கேற்றி வைத்த புண்ணியம் கிட்டும்.

          வயல் விளைச்சல் பொய்த்து, கால்நடைகள் வளர்ப்பும் கைகொடுக்காத எங்கள் மக்கள் உற்பத்தியாளர்களாக உயர வேண்டும் என்றால் அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் அவசியம்.அரசு கவனிக்குமா? இல்லை ஓட்டுக் கேட்க வரும்போது கோரிக்கை வைக்க வேண்டுமா? தெரியவில்லை.பார்ப்போம் எப்போதுதான் விடியும் என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக