கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

31.8.12

வெம்பும் வேப்பமரம்


வெகு நாட்களுக்கு முன்
வாசலில் கிளைகள் விரித்து பரந்து கிடந்த
அந்த வேப்பமரத்தின் கிளைகளில்
விதவிதமான பறவைகளின் கூடுகள்.
பொழுதடையும் ஒவ்வொரு நாளும்
விதவிதமான கீச்சிடல்கள்
ஒரு நாளும் கூடு மாறி,
குருவிகள் சண்டையிட்டதில்லை
கூடுகளின் அளவு குறித்து
போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வும்
இருந்ததில்லை.
அதனதன் எல்லையில் அமைதியான வாழ்க்கை.

இன்று
பூக்கள் உதிரும் பருவத்தில் பழந்துணி விரித்து
சேகரிக்க யாருமில்லை.
வேம்பின் பழம் சேகரிக்க,
சருகுகள் பெருக்கி சுத்தம் செய்ய,
யாருக்கும் பொறுமையில்லை.
தளத்தில் உரசும் வேம்பின் கிளைகளை
தரித்துக் குறுக்கியதில்
கிளைகளற்று ஒற்றைத்தண்டாய் நீண்ட மரத்தில்
எந்தப்பறவையும் கூடு கட்டுவதுமில்லை.
ஊஞ்சல் கட்ட உற்சாகமான குழந்தைகளுமில்லை.

யாருமற்ற தனிமையில் வெம்பும்
வேம்பின் காற்றிலும் கசப்பு வாடை..

தாலாட்டுப்பாடல்




ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ
மதலை சிறு குழந்தை என் கண்ணே!
உன் மாமன்மார் வீடு எங்கே!
அந்தோ தெரியுது பார் நல்ல கண்ணே!
ஆயிரம் கால் கல் தூணு

வெள்ளி விளக்கெரியும் கண்ணே – உன்
வெண் கொலுசு ஓசையிடும்
தங்க விளக்கெரியும் என் கண்ணே
உன் தாய் மாமன் வாசலுல

தங்கத்தால் கால் நிறுத்தி கண்ணே!
நீ தாமரையால் பந்தலிடு
வெள்ளியில் கால் நிறுத்தி கண்ணே
நீ வெற்றிலையால் பந்தலிடு
உன் பந்தலுக்கே வந்தாராம் என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்

குளிக்கக் கிணறு கட்டி, என் கண்ணே!
நீ கும்பிடவோ சிலையெழுதி
படிக்க மடமோ கட்டி வச்சார்! என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்.

மஞ்ச மணக்குது பார் என் கண்ணே!
உன் மாமன் வயலோரம்
இஞ்சி வச்சா பிஞ்சிறங்கும் என் கண்ணே!
உன் இளைய மாமன் போற வழி.

ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ

18.8.12

புதுயுகப்பெண்மை




புல்லின் நுனி பனித்துளி ஒன்று
மகுடமானதாய் கர்வப்பட்டது.
பூவின் இதழ் பனித்துளி ஒன்று
பூவை அலங்கரிப்பதாய் அகந்தை கொண்டது.
கதிர் வந்ததும் அவை காணாமல் போனது.

சிப்பியில் விழுந்த பனித்துளி
உலகம் அறியாமலே முத்தானது.
மூடி வைத்த பனித்துளி முத்தானதும்
அழிப்பதென்பதும் கதிரால் ஆகாது.

 தன்
புற அழகில் கர்வம் கொண்டு
அக வளர்ச்சி மறந்து
தானே பொறியாகி
தானே விட்டிலாகி
யாரும் பயணிக்காத புதுப்பாதையில்
நடையிடுகிறது புதுயுகப் பெண்மை.

 நாபியில் தோடு போட்டு
நயனங்களில் கல் பொட்டு வைத்து
மழித்து, வளர்த்து, கூட்டிக்கழித்து
நாளொரு புது பாணி.
கவர்வதும்,கவரப்படுவதுமே முனைப்பாய்
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் இங்கே மறந்தே போனது…..

24.1.12

தாயன்பு


சாரல், தூறலாகி
தூறல், பெரு மழையாகி
மழையின் பிரவாகம்
சிற்றாறாய்ப் பயணிக்கிறது.

பயணிக்கும் பாதையெங்கும்
கழிவுகளைக் கழுவி
சுழித்து ஓடுகிறது.
கப்பல் விட்டும்
கால்களை நனைத்து விளையாடியும்
குதூகலிக்கிறது குழந்தை மனது

வெயிலின் தாக்கம் குறைத்து
பூமியின் வன்மம் உடைத்து  
முளைக்கவும், பூக்கவும், குடை பிடிக்கவும்
வீழும் நீர்த்தாரையில் கைகள் விரித்து
தட்டாமாலை சுற்றி சிலிர்க்கவும், பெய்கிறது மழை
காற்றில் பரவுகிறது ஈரம்
கன்னங்களில் ஊடுருவுகிறது குளிர்

சோரப்பெய்த மழையில்
குளிர நனைந்த பூமி
இதழ் விரித்துக் காத்திருக்கிறது
இலைகள் சொட்டும் அன்பின் துளிகளுக்காய்….
அவை சொட்டும் சிறு துளியில் நனைவதான
இலைகளின் பெருமிதத்தை எண்ணி
தாய்மையின் பூரிப்பில் குளிர்கிறது பூமி!