கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

31.8.12

வெம்பும் வேப்பமரம்


வெகு நாட்களுக்கு முன்
வாசலில் கிளைகள் விரித்து பரந்து கிடந்த
அந்த வேப்பமரத்தின் கிளைகளில்
விதவிதமான பறவைகளின் கூடுகள்.
பொழுதடையும் ஒவ்வொரு நாளும்
விதவிதமான கீச்சிடல்கள்
ஒரு நாளும் கூடு மாறி,
குருவிகள் சண்டையிட்டதில்லை
கூடுகளின் அளவு குறித்து
போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வும்
இருந்ததில்லை.
அதனதன் எல்லையில் அமைதியான வாழ்க்கை.

இன்று
பூக்கள் உதிரும் பருவத்தில் பழந்துணி விரித்து
சேகரிக்க யாருமில்லை.
வேம்பின் பழம் சேகரிக்க,
சருகுகள் பெருக்கி சுத்தம் செய்ய,
யாருக்கும் பொறுமையில்லை.
தளத்தில் உரசும் வேம்பின் கிளைகளை
தரித்துக் குறுக்கியதில்
கிளைகளற்று ஒற்றைத்தண்டாய் நீண்ட மரத்தில்
எந்தப்பறவையும் கூடு கட்டுவதுமில்லை.
ஊஞ்சல் கட்ட உற்சாகமான குழந்தைகளுமில்லை.

யாருமற்ற தனிமையில் வெம்பும்
வேம்பின் காற்றிலும் கசப்பு வாடை..

தாலாட்டுப்பாடல்




ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ
மதலை சிறு குழந்தை என் கண்ணே!
உன் மாமன்மார் வீடு எங்கே!
அந்தோ தெரியுது பார் நல்ல கண்ணே!
ஆயிரம் கால் கல் தூணு

வெள்ளி விளக்கெரியும் கண்ணே – உன்
வெண் கொலுசு ஓசையிடும்
தங்க விளக்கெரியும் என் கண்ணே
உன் தாய் மாமன் வாசலுல

தங்கத்தால் கால் நிறுத்தி கண்ணே!
நீ தாமரையால் பந்தலிடு
வெள்ளியில் கால் நிறுத்தி கண்ணே
நீ வெற்றிலையால் பந்தலிடு
உன் பந்தலுக்கே வந்தாராம் என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்

குளிக்கக் கிணறு கட்டி, என் கண்ணே!
நீ கும்பிடவோ சிலையெழுதி
படிக்க மடமோ கட்டி வச்சார்! என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்.

மஞ்ச மணக்குது பார் என் கண்ணே!
உன் மாமன் வயலோரம்
இஞ்சி வச்சா பிஞ்சிறங்கும் என் கண்ணே!
உன் இளைய மாமன் போற வழி.

ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோ

18.8.12

புதுயுகப்பெண்மை




புல்லின் நுனி பனித்துளி ஒன்று
மகுடமானதாய் கர்வப்பட்டது.
பூவின் இதழ் பனித்துளி ஒன்று
பூவை அலங்கரிப்பதாய் அகந்தை கொண்டது.
கதிர் வந்ததும் அவை காணாமல் போனது.

சிப்பியில் விழுந்த பனித்துளி
உலகம் அறியாமலே முத்தானது.
மூடி வைத்த பனித்துளி முத்தானதும்
அழிப்பதென்பதும் கதிரால் ஆகாது.

 தன்
புற அழகில் கர்வம் கொண்டு
அக வளர்ச்சி மறந்து
தானே பொறியாகி
தானே விட்டிலாகி
யாரும் பயணிக்காத புதுப்பாதையில்
நடையிடுகிறது புதுயுகப் பெண்மை.

 நாபியில் தோடு போட்டு
நயனங்களில் கல் பொட்டு வைத்து
மழித்து, வளர்த்து, கூட்டிக்கழித்து
நாளொரு புது பாணி.
கவர்வதும்,கவரப்படுவதுமே முனைப்பாய்
நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் இங்கே மறந்தே போனது…..

24.1.12

தாயன்பு


சாரல், தூறலாகி
தூறல், பெரு மழையாகி
மழையின் பிரவாகம்
சிற்றாறாய்ப் பயணிக்கிறது.

பயணிக்கும் பாதையெங்கும்
கழிவுகளைக் கழுவி
சுழித்து ஓடுகிறது.
கப்பல் விட்டும்
கால்களை நனைத்து விளையாடியும்
குதூகலிக்கிறது குழந்தை மனது

வெயிலின் தாக்கம் குறைத்து
பூமியின் வன்மம் உடைத்து  
முளைக்கவும், பூக்கவும், குடை பிடிக்கவும்
வீழும் நீர்த்தாரையில் கைகள் விரித்து
தட்டாமாலை சுற்றி சிலிர்க்கவும், பெய்கிறது மழை
காற்றில் பரவுகிறது ஈரம்
கன்னங்களில் ஊடுருவுகிறது குளிர்

சோரப்பெய்த மழையில்
குளிர நனைந்த பூமி
இதழ் விரித்துக் காத்திருக்கிறது
இலைகள் சொட்டும் அன்பின் துளிகளுக்காய்….
அவை சொட்டும் சிறு துளியில் நனைவதான
இலைகளின் பெருமிதத்தை எண்ணி
தாய்மையின் பூரிப்பில் குளிர்கிறது பூமி!

24.9.11

கடிதங்கள்



இப்போதெல்லாம்
 யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லை

தேரோட்டமா? திருவிழாவா?
நாற்றுப்பறிப்பா? நடவா?
களையெடுத்தலா? கதிர் அறுப்பா?
செய்தி கொண்டு வரும் அந்த மஞ்சள் நிற அஞ்சலட்டை.

நலம் நலமறிய எழுதவும்
உப்புக்கண்டம் போடவும்
ஓடுடைத்து புளி வாங்கவும்
தூதாகப் போகும் இன்லண்ட் கடிதம்

படித்த கடிதங்களை,
பொத்திப் பாதுகாத்து
காலம் கடந்து குப்பையான ஒரு பொழுதில்
கிழித்தெறிய களைந்த போது
ஒவ்வொரு வார்த்தையிலும்
உறைந்து கிடந்தது கடந்த காலம்

23.9.11

தும்பைப்பூக்கள்


கடைசிக்கால
நிம்மதிக்கனவுகளுடன்,
வானம் தொடும் ஆவலும்,
ஏணி வைக்கும் முயற்சிகளுமாய்,
பெரு நகரச் சமுத்திரத்தில் அமுதம் தேடி
மூழ்கி, எழுந்து, நீந்தி, திளைத்து……

கனவுகளில் வலம் வருகிறது
தட்டான் பிடித்த பொழுதுகளும்
தவளை கத்தும் மழை இரவுகளும்

நட்ட செடிகளில்
முதல் பூவும் முதல் பிஞ்சும்,.
திருவிழாக்கடைகளில் பஞ்சுமிட்டாயும், ரப்பர் கடிகாரமும்,
வயல் வரப்புகளில்,
கண்மாய்க்கரைகளில்
கதிர்க்களங்களில் உண்ட கஞ்சியும், ஊறுகாயும்,
நல்ல நாள் பார்த்து சமைத்த
புது அரிசிச்சோறும், கறிக்குழம்பும்,
தும்பைப்பூக்களில் தேனருந்தும் பட்டாம்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்,
ஊரணிப்படிக்கட்டுகளில்
அந்தி நேரங்களில் ஒலிக்கும் துணி தப்பும் ஒலியும்,
கலவைக்குரல்களையும் திரித்து, திரித்து,
விரியும் நினைவில் சொன்ன கதைகளில்
மெல்ல இளகும் மனவெளி..
உறங்கிப்போன குழந்தைகள் கனவில்
தும்பைப்பூக்களும், தாமரைகளும்..
.
அரவமற்ற ஊரணிக்கரைகளில் பூத்துக்கிடக்கிறது
பறிக்க ஆளில்லாத தாமரைகள்

13.9.11

எங்கள் கொற்றவை




ஒரு நெடுங்கனவின் நீட்சியாய்
துரத்திக்கொண்டே இருக்கிறது அவள் குறித்த காட்சிகள்.
மறக்க நினைத்தாலும் உள்ளத்தில்
தைத்துக்கொள்கிறது அவளின் துயரங்கள்

வாழ்க்கை வஞ்சித்த வனதேவதை அவள்.
நாகரீகத்தின் சாயல் அறியாத கிராமத்துக்கொற்றவை.
அன்பும், கற்பும் மட்டுமே அவளின் ஆயுதங்கள்
கஞ்சிக்கலயத்தில் கதிரவனையும் சுமந்து
கழனி, காடெல்லாம் பண்படுத்தி
கதிர் வளர்த்தாள்
வனம் பெருக்கினாள்
மாலை சூரியனை மலை முகட்டில் விட்டு
நிலவைக்கூட்டி வீடு வருவாள்.
காலம் அவளின் முந்தானையில்.
பொறுக்கிவந்த சுள்ளியில் சுடர் வளர்த்து
வயிற்றின் பசித்தீ போக்கி,
மீத உணவில்
காலை காக்கைக்கு ஒரு பிடி அன்னம்
இரவு பைரவருக்கு ஒரு பிடி என்று ஒதுக்கிவைப்பாள்.
ஆலை அரிசி உண்டதுமில்லை.
ஆகாத உணவை தின்றதுமில்லை.
மருந்தும், விருந்தும் அறிந்ததுமில்லை.
.உதவி என்போருக்கு உயிர் தருவாள்.
அன்பைக்கூட அதட்டலாய்க்காட்டுவாள்.
சுற்றத்தின் துயர் தீர்ப்பாள்
முந்தையத் தலைமுறைப்பெண்களின்
பிறவிக்கலி தீர்க்கும் சுமைதாங்கியாய் அவள்.

அவள் உடலின் உயிர்க்கடிகாரம்
அவளை உட்கார ஒட்டாமல் விரட்டிக்கொண்டேயிருக்க
எப்போதும் இயற்கையோடு உறவாடியபடி இருந்தாள்.
மனிதர்களிடம் மட்டும் விலகியே இருந்தாள்.
தேவைகளை அவசியத்தேவைகளாக மட்டுறுத்தி
ஆசைகளைப்பொசுக்கி அறம் வளர்த்தாள்.
யுகம் யுகமாய் வாழ்ந்த பெண்களின்
துயர் படிந்த குறியீடாய் அவள்.

அவளது இல்லில்
அவளின் தனிமைக்குத் துணையாய்
தெய்வங்கள் குடியிருந்தன.
கழனிகளிலும் காடுகளிலும்
மைனாக்களும், மயில்களும்.
காற்றின் திசை பார்த்து மழையின் வரவு சொல்வாள்.
தவளையின் மொழி, முட்டையுடன் எறும்புகள்
பல்லியின் ஒலி, பசுவின் கதறல்
அத்தனைக்கும் அர்த்தம் சொல்லும்
இயற்கையின் அகராதி அவள்.
மண் பயனுற வாழ்ந்த மகளீரின்
மங்காத அடையாளமாய் அவள்

முந்தையத் தலைமுறைப்பெண்கள்
இறக்கித்தந்த தோள் சுமை விட்டு, விடுதலையாகி
பூட்டுகள் விலக்கி புதிதாய்ப்பிறந்த எங்களுக்கு
வியப்பின் வடிவம் அவள்.
பொல்லாப்பொழுதாய் விடிந்த
பனிமூடிய காலைப்பொழுதொன்றில்
நெட்டுயிர்த்துப் பிரிந்தது
எங்கள் குலக்கொற்றவையின் உயிர்க்காற்று.
கண்ணீர்த் துளிகளைத்தவிர கொடுப்பதற்கு எதுவுமில்லாத
யாசகர்களாய் நானும், இந்த பூமியும்.