கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

26.12.09

தாலாட்டு - 2

               என் அம்மா மிக அழகாக தாலாட்டுப் பாடுவார்கள்.என் அம்மாவிற்கு நாங்கள் ஐந்து பெண்கள்,ஒரு ஆண் என்று ஆறு குழந்தைகள்.நாங்கள் எல்லோருமே நல்ல உயரமாக,ஆரோக்கியமாக இருப்போம்.நான் உங்களுக்குத் தந்த உணவும், தாலாட்டும் தான் காரணம்,என்பார் என் அம்மா.தாலாட்டுப் பாடினால் குழந்தைகள் சீக்கிரம் வளர்வார்கள் என்ற நம்பிக்கை எங்கள் மக்களிடம் உண்டு.அதனால் எங்கள் குழந்தைகளுக்கும் தாலாட்டுப் பாடித் தூங்கவைப்பதுடன் எங்களை தாலாட்டு கற்றுக் கொள்ளச்சொல்வார்கள். அப்படி ஒரு சுலபமான தாலாட்டு. இந்தப்பாடலைப் பாடித்தான் என் மகளைத் தூங்க வைத்தேன். இந்தப்பாடலைப் பாடித்தான் என் மகனைத் தூங்கவைத்தேன்.(எங்கோ கேட்ட வசனம் மாதிரி இருக்கிறதா?) அந்தத் தாலாட்டு.

ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே ராராரோ!
யாரடிச்சார் ஏனழுதாய் என் கண்ணே
அடிச்சாரச்சொல்லி அழு
யாரும் அடிக்கவில்லை
அம்மான் மார் (மாமா) காணவில்ல
அத்தை அடிச்சாளோ அல்லிப் பூச்செண்டாலே
மாமா அடிச்சாரோ மல்லிகப்பூக் கையாலே
ஆயா அடிச்சாரோ அமுதூட்டும் கையாலே
ஐயா அடிச்சாரோ தாங்கி வரும் கையாலே
சித்தி அடிச்சாளோ திலகமிடும் கையாலே
அவனாய் அழுகிறான் அதிக முரண்டாலே
தானாய் அழுகிறான் தவத்து முரண்டாலே
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய் நோக
அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் தூங்கான்.
பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு
பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியவார் பேரனுக்கு
மசன்டை அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு
பாலுக்கழுதானோ? பவளவாய் பொன் சொரிய
தேனுக்கழுதானோ? செம்பவள வாய் நோக
கரும்புக்கழுதானோ? கனி மொழிந்த வாயாலே
தாங்கத்தடுக்கு இருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்
ஏந்தத் தடுக்கு இருக்கு உன்னை
ஏந்திழையார் தொட்டிலிட.
அரசோ நவமணியோ உன்
அங்கமெல்லாம் தங்க மயம்
ஆளப்பிறந்தவனே!
அழுகிறதும் உன் முறையோ?
கனிமொழிந்த வாயாலே
கண்ணிலிட்ட மை கரைய
கண்ணும் கமலப்பூ
கண்ணிரண்டும் தாமரைப்பூ
மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ கண் வளராய்..
ஆராரோ! ஆரிரரோ! ஆராரோ! ஆரிரரோ!
என் கண்ணே ராராரோ!

1 கருத்து:

  1. சாந்தி என்னோட தாலாட்டு வலைப்பூவை வந்து பார்த்து சொல்லுங்கள் அப்படியே மேலும் தங்களுக்கு தெரிந்த தாலாட்டையும் தாருங்கள் அங்கு பதிகிறேன் தங்கள் பெயருடன்.

    பதிலளிநீக்கு