கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

2.12.09

பொய்யாய் பழங்கதையாய்

இன்று
காந்திய கிராமங்களின் மீது
கவனம் அற்றுப்போனதால்
இட நெருக்கடியில் இன்னலுறும் நகரங்கள்
ஏர் பிடிக்க மறந்ததால்
சீர் கெட்டுப்போன கிராமமக்கள்

சொந்த ஊரின் ராஜாக்கள்
சொத்து சேர்க்க வெளி நாட்டு வீதிகளில்..
இயந்திரமாய் வேலை செய்து
வியர்வைத்துளிகளை விலை பேசும்
இவர்கள்
சொந்த மண்ணில் சுகமாயிருப்பதால்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறார்கள்
மனித இயந்திரங்களாய்...

எங்கள்
கிராமத்து பிரம்மாண்ட வீடுகளில்
தட்டுத் தடுமாறும் வயோதிகர்கள்
நகரத்தின் தீப்பெட்டி வீடுகளில்
காற்றுக்கும் திண்டாடி
குடிநீருக்கும் அலைந்து
களைத்து நிற்கிறது இந்தத்தலைமுறை

ஆலமரமும் அரசமரக் காற்றும் உடல் தழுவ
கோவில் பிரகாரம் சுற்றி
ஊரணிப்படிக்கட்டில் ஊர்க்கதை பேசிய சுகம்
மழைச்சாரலில் உடல் நனைய
ஓடும்
மழை நீரில் காகிதக்கப்பல் விட்டு
களித்த சுகம்
நட்ட நாற்று வேர்ப்பிடித்து
நல்ல பச்சை நிறம் திரும்பி
காற்றில் சரசரத்து வரப்பில் வழிந்து விழ
நடக்கும் கால்களில் குறுகுறுக்கும் சுகம்
கண்மாய் மடை திறந்து
வாய்க்கால் வழி பாயும் நீரில்
கெண்டையும், கெழுத்தியும் கொஞ்சி விளையாட
விரல்களால் அளைந்து விளையாடும் சுகம்
தூரத்து தொடுவானம் வரை
மேயும் ஆடு மாடுகள்
கண்மாய்க்கரை முழுதும்
நாரையும் கொக்கும்
நடந்து விளையாட
சகதியும் சந்தனமாய்
உடம்பெங்கும் தெளித்திருக்க
கண்மாயில் குளித்து வீடு திரும்பும் சுகம்
வாடகைக் கவலையின்றி
சொந்தவீட்டில் புரண்ட சுகம்
இப்படி
எதுவுமே இல்லை
இந்தத்தலைமுறைக்கு
பாவம்!
முதுகில் சுமக்கும் புத்தகப்பையும்
தினமும் அழுத்தும் பாடச்சுமையுமாய்
பொழுது கழிவதே போதும் என்றாகிவிடுகிறது
மாலை விளையாட்டு மறந்தே போனது
இன்று
வாழ்க்கைப் பயணம்
வரைமுறையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது
குதிரைப்பந்தயமாய்...
பந்தயக்குதிரைகளாய்
பணயம் வைத்தது யார்?
வாழ்க்கையின் இனிமை தெரியாமல்
அந்தந்தப்பருவத்தின் அருமை புரியாமல்
உறவுகளின் நெருக்கம் அறியாமல்
தாயின் மரணத்திற்கும் மின்னஞ்சல் அனுப்பும்
இந்த
வேக வாழ்க்கையின் மீது தான்
எல்லோருக்கும் மோகம்.
வேண்டும் ஒரு புது உலகம்
அதில்
பாரதி கேட்ட
காணி நிலமும் கண் மயக்கும் மரங்களும்
சோலைக்குயிலோசையும்
சொக்கும் தென்றல் காற்றும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக