கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

8.12.09

செட்டிநாட்டு கிராமங்கள்



                         சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களை செட்டிநாட்டு கிராமங்கள் எனக் குறிப்பிடுவர்.நாகரீகத்திலும்,நல்ல பழக்க,வழக்கத்திலும், ஆன்மீக மற்றும் அறிவுத்தேடல் உள்ள ஒரு சமூகம் தான் 'நகரத்தார்' என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சமூகம்.இந்த சமூகத்தாரிடம் மற்ற மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள் ஆயிரம்.செட்டிநாட்டு கிராமங்களில் அரண்மனை போன்ற வீடுகள், கற்பனை செய்ய முடியாத சிற்பச்செல்வங்கள் கொண்ட பிரம்மாண்ட சிவாலயங்கள், ஊரணிகள், கல்விக்கூடங்கள் என கிராமங்களின் அடையாளங்கள் மாறிப்போன, நகரச்சந்தடிகள் அற்றுப்போன ஓர் உன்னதமான,கண்களுக்கு விருந்தான கிராமங்கள் தான் எங்கள் செட்டிநாட்டு கிராமங்கள். 

              இங்குள்ள மக்கள் பகுத்தறிவு மிக்கப் பண்பாளர்கள். வெள்ளந்தி தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் இங்குள்ள மக்களிடம் காணமுடியாது.நடை,உடையில் நாகரீகம்,நல்ல கல்வி,நல்ல உணவுப்பழக்கம்,சிறந்த,தெளிவான ஆன்மீகச்சிந்தனை,அயராத உழைப்பு,முன்னேற்றச்சிந்தனைகள்,வீட்டுப்பராமரிப்பில் ஒரு மேன்மை, உள்ளத்தூய்மை, புறத்தூய்மை பேணுதல்,குழந்தைகளை பேணி அவர்களை கல்வி கேள்விகளில் மேம்படுத்தி எளிமையான வாழ்க்கை வாழும் இந்த மக்களின் தர்ம சிந்தனை போற்றுதலுக்கு உரியது.

            இந்தியாவின் எந்த மூலைக்குப் போனாலும் இப்படி ஒரு கிராமங்களைக்காண முடியாது.இந்த சமூகப் பெண்களின் கைவேலைகள் கலை நயம் மிக்கவை.இவர்களின் பண்பாடு பழக்கவழக்கங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் எல்லா மக்களையும் இவை சென்றடைவதுடன் ஒரு மேன்மையான மக்களை, மேன்மையான சமுதாயத்தை,எல்லோர் மனத்திலும் ஒரு தன் முனைப்பை ஏற்படுத்த இயலும் என்பதுடன், நம்முடன் வாழும் ஒரு பெரிய நாகரீகச்சமுதாயத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் நமது 
அறிவுத்தேடலில் ஒன்றாகிறது.

                   அடியேன் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச்சேர்ந்தவள் அல்லள். அவர்களின் பண்பாட்டில் ஈர்க்கப்பட்ட பாலைய நாட்டில் உதித்தவள். எங்கள் மக்களும் நகரத்தார் மக்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொண்டு உறவு சொல்லி அழைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்த ஒரு மேன்மையான வாழ்க்கையை பதிவுலகிற்கு தெரியப்படுத்த விழைகிறேனே அன்றி விளம்பரத்திற்கோ இரு சாதிகளை உயர்த்தும் எண்ணமோ கிஞ்சித்தும் கிடையாது.

ஒவ்வொரு மக்களையும் பற்றி ஆய்வு செய்பவர்கள், நகரத்தார் சமூகத்தின் பண்பாடுகளை கண்டு அதிசயிக்கிறார்கள். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் புகழ் பெற்றுவிடும் இந்தமக்களின் உயர்ந்த பண்பாட்டு நெறிகள், இந்த மக்களின் வரலாறு, இவர்கள் சமூகத்திற்கு அளித்த கொடைகள் குறித்து வரும் கட்டுரைகளில் பதிவு செய்வோம். 

நன்றி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக