கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

7.12.09

எங்கள் கிராமங்கள்

                கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்று அண்ணல் காந்தியடிகள் வர்ணித்தார். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் உயிர்நாடி கிராமமாகத்தான் இருக்க முடியும். இல்லையென்றால் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு கண்டு, உணவுப்பொருளுக்கு உலக அரங்கில் கையேந்தும் நிலை தான். நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. இன்று தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் விளை நிலங்களின் மேலும் கவனம் செலுத்துவது நம் எதிர்காலச்சந்ததியர்க்கு அவசியம் என்பதை மறந்து அவர்களை ஒரு பொறியியல் வல்லுனராகவோ ஒரு மருத்துவராகவோ ஒரு ஆசிரியராகவோ இப்படி தொழில் சார்ந்த உற்பத்தித்துறையில் அல்லது பணிபுரிவோராகவோ ஆக்குவதற்கு முனைகிறோம்.இதில் குழந்தைகளுக்கு அறிவுரை வேறு-நாந்தான் காட்டையும், கழனியையும், ஆட்டையும் மாட்டையும் கட்டிகிட்டு அழுகிறேன்னா நீயாவது படிச்சுப்பெரிய வேலைக்குப் போகணும். சரிதான்.நல்லதுதான். ஆனால் எல்லோரும் வேலைக்குச்சென்றால் சோறு கொடுப்பது யார்?

                  நகரங்களின் ஜரிகை மின்னல்களில் மயங்கி புலம் பெயரும் கிராம மக்களுக்கு இரண்டு தலை முறை கடந்ததும் சொந்த மண் மறந்து போகிறது. அந்த மண்ணின் மீதான அபிமானம் காணாமல் போய் விடுகிறது. வசதியான வாழ்க்கை, வளமான வருமானம் கண்டு பழகிப் போன உள்ளம் கிராமம் திரும்ப விரும்புவதில்லை.திரை கடலோடியும் திரவியம் தேடுபவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.விவசாயி என்றால் கல்யாணச்சந்தையில் வேண்டாத மாப்பிள்ளை. எனவே தான் இளையதலை முறை விவசாயத்தை தேர்ந்தெடுக்க பயம் கொள்கிறது.மேலும் இயற்கை ஏமாற்றும் வேளைகளில் உண்டாகும் நஷ்டங்களும் விவசாயிகளின் தன்னம்பிக்கையை அசைத்துவிட விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விடுபட வைக்கிறது.

                இன்னும் எங்கள் செட்டிநாட்டு கிராமங்களோ மழை வளமற்ற பாலை பூமி. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர்களை கூட்டாக 'பாலைய நாடு' என்பார்கள். இந்தப் பாலைய நாட்டில் பதினாறு ஊர்கள் அடங்கும்.தமிழக அரசு எங்கள் ஊர்கள் அடங்கிய மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தது. வானம் பார்த்த பூமி என்பதால் இளையோர் கிராமங்களை விட்டு
புலம் பெயர்ந்து நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கிறார்கள்.ஆனாலும் எங்கள் ஊர் அமைப்பு, சொந்த ஊரின் மீதான பற்று அவர்களை வெளியிடங்களில் நிரந்தரமாக்கி விடுவதில்லை. இது உண்மை.குல தெய்வப் ப்ரார்த்தனை, குலதெய்வத்திற்குப் படையல் போன்ற காரணங்கள் எங்கள் மக்களை சொந்த கிராமங்களோடு பிணைத்து வைக்கும்.செட்டிநாட்டு கிராம மக்கள் கலாரசனை, கல்வி, கேள்விகளில் தேர்ச்சி, நாகரீக மேம்பாடு, உணவு மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் சிறப்பு, விருந்தோம்பல், உயர்ந்த பண்பாடு,கலாச்சாரம் ஆகிய மேம்பட்ட குண நலங்களுடன் திகழ்பவர்கள்.பழையனக் கழிதலும், புதியனப் புகுதலும், கால மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள்.


         இப்படி எழுதுவதன் நோக்கம் எங்கள் கிராமமக்களைப் பற்றி இந்த பதிவுலகிற்கு ஒரு அறிமுகம் தரும் நோக்கே அன்றி யாரையும் பழிக்கும் நோக்கம் கிடையாது. மக்கள் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை.தமிழ் நாட்டின் அனைத்து கிராம மக்களின் அறியாமை நீக்கும் பொருட்டு எமது மக்களின் பழக்கவழக்கங்களை இங்கு பகிர்ந்து கொள்வோமே!


              ஒவ்வொரு வீடும் ஒளி பெற பெண் கல்வி அவசியம்.அறிவே தெய்வம். அறிவை மேம்படுத்தி நகர மக்களுக்கு இணையாகக் கல்வியில் மேம்பட்டு,தனது உரிமைகளையும், அதிகாரங்களையும் அறிந்து தத்தமது கிராமங்களை மேம்படுத்தினால் தெருக்களில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதோ, இல்லையோ, நமது மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.நமது மக்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு,நமது மாநிலம் ஒரு சமச்சீர் வளர்ச்சியும் பெறும். அது தான் இந்தத தளத்தின் நோக்கமே தவிர வேறு இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக