கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

28.2.10

தாய்

நீ தந்த
நேசத்தின் மிச்சத்தை
அடைகாத்ததில்
உயிர் பெற்று நிற்கிறது என் இல்லம்.

பேருந்துப் பயணங்களில்
சன்னல் இருக்கையில் அமர்ந்து
ஓடும் மரங்களை
சாலை கடக்கும் மயில்களை
வானில் இறக்கை அசைக்காது மிதக்கும் ஒற்றை கருடனை
விரல் நீட்டி குதூகலிக்கையில்
முந்தானைப்போர்வையில் மூடி
மூக்குச்சிந்தி
நீயும் குதூகலிப்பதாய் போக்குக்காட்டி...
என்னை உன்னோடு அணைத்துக்கொண்டு,
உன் உடல் சூட்டின் வெம்மையில் குளிர் காய்ந்து
உறக்கம் தழுவ மடியில் கிடத்தி
என் நாசியுணரும் உனது மஞ்சள் மணம்.
பயண அனுபவத்தை நினைவடுக்கில் சேமித்தாய்.
பயணிக்கும் போதுகளில் மலர வைத்தாய்

எந்த வயதில் எந்த உடை
என் முகத்திற்கு ஏற்ற அலங்காரம்
எனக்குப்பிடித்த பலகாரம்
எனக்குத்தெரியாத என் தேவைகள்
மயக்கங்கள்,தயக்கங்கள் உடைத்து
மனதின் வக்கிரங்கள் இயல்பெனத் தேற்றி
அறியாமை துடைத்து
ஆளுமை வளர்த்து
திட்டி,குட்டி,தட்டிக்கொடுத்து,
சன்னல்கள் திறந்து
கதவுகள் திறந்து
வெளிச்சம் புகுந்ததும்
அதன் வழி இன்னும்
பல அடைத்த கதவுகள் புலப்பட
திறக்கும் முயற்சி தொடர.....
என்னை மனிதனாக்கும் முயற்சியில் இன்னும் நீ

எனது கேள்வி இது தான் தாயே உன்னிடம்.
என்னைச்செதுக்க இத்தனை நாள் உனக்கு!
இன்னும் நான் முழுமை பெறாமல்...
உனக்குள்
இத்தனை வித்தைகளை விதைத்து
எங்களுக்காய் அனுப்பிய இறை யார்?

1 கருத்து:

  1. எனது கேள்வி இது தான் தாயே உன்னிடம்.
    என்னைச்செதுக்க இத்தனை நாள் உனக்கு!
    இன்னும் நான் முழுமை பெறாமல்...
    உனக்குள்
    இத்தனை வித்தைகளை விதைத்து
    எங்களுக்காய் அனுப்பிய இறை யார்?///

    மிக்க நன்று!!

    பதிலளிநீக்கு