கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

13.2.10

கனவுகளின் தொடர்ச்சி

சில நாட்கள்
நிலவில் பசியாறி
நீலவானில் நட்சத்திரம் பொறுக்கி
சூரியனின் ரதத்தில் பயணித்து
கதிர்களின் வழி பூமிக்கு வந்த
புனைவுகளில்
மூழ்கும் குழந்தைமையின் மிச்சம்

சில நாட்கள்
அடர் கானகத்தில்
இரவின் இருளில்
மூழ்கிக்கிடக்கும்
பாழடைந்த அரண்மனை மிச்சத்தில்
பயத்தில் ஒளிந்து கிடக்க
புரவிகளின் அரவத்தில் பரவும் ஒளியில்
இருள் விலக,மீட்டுவரும் ராஜகுமாரன்
இது இளமையின் மிச்சம்

உறக்கத்திற்கும்
விழிப்பிற்குமிடையிலான நேரங்களில்
கனவுகளிலிருந்து விடுபடாது
நனவு வெளியில் பிரவேசிக்கும் கணங்களில்
நெற்றி தேய்த்து
மீட்டெடுக்க நினைக்கிறேன்
மீண்டும் அந்தக்கனவுகளை

திருவிழாத்திடலில் காட்டப்படும்
திரைப்படத்தின் அறுந்த படச்சுருளாய்
இணைய மறுக்கிறது கனவுகளின் தொடர்.
இனியேனும் என்னை எழுப்புபவர்கள்
கொஞ்சம் காத்திருங்கள்
கனவுகள் முடியும் வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக