கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

28.2.10

பெண்ணின் பெருமை

பெண்கள் நாட்டின் கண்கள்!,மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,பட்டங்கள் ஆள்வதும்,சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்! இப்படி எத்தனை கவிஞர்கள் எப்படிப் பாடி என்ன?பெண் குழந்தைகள் என்றால் இன்னும் நம் சமூகத்தில் ஒரு கசப்பு இருக்கத்தான் இருக்கிறது.என் தாயும்,தந்தையும் ஒரு ஆண் மகவிற்கென ஐந்து பெண் குழந்தைகளை பெற்றுக்கொண்ட போது உறவுகளின் மத்தியில் ஏளனப் புன்னகை,நட்பு வட்டாரத்திலோ பரிதாப நோக்கு,கேள்விப்படுபவர்களோ ஐந்து பெண்ணா அரசனே ஆண்டி,நீங்கள் எம்மாத்திரம் இப்படியான மொழிகளைக்கேட்டுக்கேட்டு என் பெற்றோர் பயந்து,பின் துணிந்து தெளிவு பெற்றது தனிக்கதை.எங்கள் வீட்டில் தான் ஐந்து பெண்கள் என்றால் அந்த காலகட்டத்தில் நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நண்பர்கள் வீட்டிலும் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து பெண்குழந்தைகள்.பெண்குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது வீட்டில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் கொலுசுச்சத்தம்,சலங்கைச்சிரிப்பொலி,வாசலில் விரியும் வண்ணக்கோலங்கள்,கைவேலைகள்,பின்னல்கள்,சித்திர வேலைகள்,புதுப்புது சமையல் மணக்கும் அடுப்படி இப்படி வீடே நிறைந்து கிடக்கும்.இதை அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் அருமை புரியும்.எங்கள் ஊரில் ஒரு பொன் மொழி கூறுவார்கள்."பெண் கிளைதான் பெரும் கிளை" அதாவது பென் குழந்தையால் வரும் சொந்தம்,சுற்றம் பெரிது.பெண்களுக்குள்ள பாசமும்,பரிவும்,அன்பும்,நேசமும் அலாதியானது.ஆனால் சீருக்கும்,வரதட்சணைக்கும் பயந்து பெண்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததும் இந்த பூமியில் தான்.

நாங்கள் சிறுவயதில் விளையாடப்போகும் இடங்களில் சிறுசண்டைகள் வந்துவிட்டால் வந்து விழும் முதல் வார்த்தை,"சீ போ! அது தான் உங்க அம்மா வெறும் பொட்டக்குட்டியா போட்டுவச்சிருக்கா" எனக்குள் ஆத்திரம் பொங்க என் அம்மாவிடம் கூறினால் என் அம்மாவும் அப்பாவும் சாதரணமாக,"போகுதுக விடு! பெரியவுக அப்புடிப்பேசிக்குவாக போலருக்கு.அதக்கேட்டு இதுகளும் பேசுதுக" என்பார்கள்.ஒரு குழந்தை பெற்றவர்கள் சந்தடிச்சாக்கில் ,"ம். நா சிங்கம் குட்டிப்போட்ட மாதிரி ஒண்ணு பெத்து வச்சிருக்கேன்.பன்னி குட்டிபோட்ட மாதிரியா பெத்துப் போட்டிருக்கேன்" என்று சம்பந்தமின்றி சாடை பேசுவார்கள்.ஒரு பெண் குழந்தை வைத்திருப்பவர்களோ," நா என்ன ஒண்ணு வச்சிருக்கேன்.உங்கள மாதிரியா அஞ்சு வச்சிருக்கேன். அதுனால நீங்க கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.அப்பத்தான் இதுகள கரை சேக்க முடியும்" போகிற போக்கில் வெடியை வீசிவிட்டுப்போவார்கள்.என் அத்தைக்கு ஒரு பெண்,என் சித்தப்பாவிற்கு ஒரு பெண்,என் அம்மா,என் பாட்டி ஒரு பெண் இப்படியான பரம்பரையில் ஐந்து பெண்களாய் நாங்கள்.ஆனால் இதே என் தந்தைக்கும்,தாய்க்கும் உழைக்கும்,சேமிக்கும் தன்முனைப்பையும்,எங்களை அருமையாக உருவாக்குவதிலும் முனைந்தார்கள்.இன்று எங்கள் வீடுகளில் ஒரு விழா,பண்டிகை என்றால் மகள்கள்,மருமகன் கள்,பேரக்குழந்தைகள் என்று வீடும் மனதும் நிறைந்து போகிறது.பெண்குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக அம்மா,அப்பா,தம்பிகுடும்பம் என்று கொண்டாடி இருக்க,நான்கு ஆண்குழந்தைகள் உள்ள வீட்டில் மருமக்கள் தனித்தனியே உலை வைக்க ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாரமாக பங்கில் கழிகிறது ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாடு.இன்று என் அம்மாவிற்கு ஒரு நோய்,ஒரு நலிவு என்றாலோ,வீட்டில் அதிக வேலை என்றாலோ ஒருவர் மாற்றி ஒருவர் கவனித்துக்கொள்கிறோம்.சிங்கங்களும்,ஒண்ணு வச்சிருந்தவுகளும் அனாதைகளைப்போல.ஒண்ணு வச்சிருந்த மிதப்பில் இருந்தவர்கள் ஒரு குழந்தையைக்கரை ஏற்ற வீட்டின் நாதாங்கியைக் கூட விற்றாக வேண்டிய நிலை.இன்னும் சொன்னால் சோகக்கதை இன்னும் நீளும்.

இன்று ஒரு தோழிக்கு ஏற்கனவே இரு பெண்கள்.மூன்றாவதாய் கர்ப்பம் தரித்ததும் அவரின் கணவர் அவரை கருக்கலைப்பு செய்யும் படி வற்புறுத்த அவரோ இது கண்டிப்பாக ஆண்குழந்தை தான் அதனால் கருக்கலைப்பு செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க,உடனே கணவர் அப்படி இது ஆண்குழந்தையாக இல்லாத பட்சத்தில் அந்தக்குழந்தையோடு நீயும் போய்விட வேண்டும் என்று மிரட்ட,அவர் தினம்தினம் கவலையோடும்,கண்ணீரோடும் காலம் கடத்தி அவரது பிரசவ நாளனறு இதே நினைவில் ரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிற மருத்துவர்களோ செய்வதறியாது திகைக்க,நாங்களனைவரும் வேண்டாத தெய்வமெல்லாம் வேண்டி கடைசியாய் அவருக்குப்பிறந்தது,"ஆண் குழந்தை" அவரது கணவர் விசயமறிந்து இனிப்போடு வர நாங்கள் ஒருவரும் இனிப்பு எடுத்துக்கொள்ளவுமில்லை,அவரோடு இன்று வரை முகம் கொடுத்துப்பேசுவதுமில்லை.நாம் தான் இப்படியென்றால் வங்காளத்தவரும் அப்படியே! இரு வங்காளத்தோழியருக்கு இரண்டாவது பெண்குழந்தை பிறந்து இருவரும் வேலைக்கு வந்த அன்று வாழ்த்துச்சொன்ன போது இருவரும் தலைகுனிந்து வடித்த கண்ணீரில் ஒலிபரப்புக்கூடமே ஈரமாகிப்போனது.அவர்களின் மாமியார் ஏதாவது வாக்குவாதம் வந்தால்,"ஒரு ஆண்பிள்ளை பெற்றுக்கொடுக்க வழியில்லை,பேசுகிறாயா" என்பார்களாம்.இவர்களுக்கெல்லாம் நான் எங்கள் வீட்டுக்கதையைச்சொல்லித்தான் தேற்றுவது.வேறென்ன செய்வது? நான் சந்திக்கும் நபர்கள்,என் நட்பு வட்டம் எல்லோரும் அனைவரிடமும் சந்தோசத்தை மட்டும் பகிர்ந்து,என்னிடம் மட்டும் சந்தோசம்,துக்கம் இரண்டையும் பகிரும் போது இப்படியெல்லாம் சொல்லித்தான் தேற்ற வேண்டியிருக்கிறது.

குடும்ப நண்பர் ஒருவரின் மகனுக்கு மூன்று வருடமாகப் பெண் பார்க்கிறார்கள். நினைத்தமாதிரி பெண் அமையவில்லை.இன்று எல்லா சமூகத்திலும் பெண் குழந்தைகள் குறைந்து விட்டதால் மாப்பிள்ளைகள் நிறைந்து பெண் பற்றாக்குறை.இந்த நிலை நீடித்தால் வரும் நாட்களில் ஆண்,பெண் விகிதாச்சாரம் மாறுபட்டு,சமூகக்குற்றங்கள் பெருகும் அபாயம் உண்டு.இப்போதே எங்கள் சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு நகை போடுவதும்,நல்ல பெண்ணாக இருந்தால் போதும்,"போடுறதப்போடுங்க" என்ற நிலைக்கு இறங்கிவந்துவிட்டார்கள்.பெண்குழந்தைகள் பிறக்கும் போது வெறும் கையோடா பிறக்கிறார்கள்.கையில் பத்துவிரலோடு பிறக்கிறார்கள்.அவர்களை வளர்த்து ஆளாக்கிவிட்டுவிட்டால் போதும்.அவர்களும் சம்பாதிப்பார்கள்.அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக்கொள்வதோடு நம்மையும் பொறுமையோடு பராமரிக்கும் அன்பும் நேசமும் அவர்களுக்குண்டு.பெண் குழந்தைகள் வீட்டிற்கு அழகு.ஆகவே பெண்களே ஆணென்ன?,பெண்ணென்ன? நாமிருவர்,நமக்கிருவர்! ஆரோக்கியமான,அறிவான,அழகான குழந்தைகளாய் இருந்தால் போதும். "பொண்ணைப்பெத்த அப்பா வந்தார் ஓட்ட வண்டியிலே" இது பழைய பாட்டு.பெண்ணுக்கும் கல்வியையும்,தைரியத்தையும்,தன்னம்பிக்கையும் கொடுத்து வளர்த்தால் கண்டிப்பாக சாதிப்பார்கள்.ஆன்ம பலமும்,புத்திசாலித்தனமும்,சிறந்த உள்ளுணர்வும் இயற்கையிலேயே கொண்டவர்கள் பெண்கள்.கொஞ்சம் தூண்டினால் போதும் துலங்குவார்கள்.நல்ல மக்களாக வெற்றிக்கொடி நாட்டி விளங்குவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக