கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

9.9.11

ஆண் மனம்





ஓயாத வாயும்
ஊமையான மனதுமாய் அவள்.
ஒரு நாளும் விரித்ததில்லை
அவளின் மனதின் பக்கங்களை அவனிடம்.

எத்தனையோ கதைகள் சொல்வாள்
அவளின் நினைவு தெரிந்த நாள் முதலான நடப்புகளை,
பிடித்த உணவு, பிடித்த உடை,
பிடித்த நிறம், பிடித்த பறவை,
பிடித்த, பிடித்த இன்னும் பிடித்தவெல்லாம் சொன்ன அவள்
சொன்னதே இல்லை பிடித்தவன் பெயரை.

புதிரிலும் புதிரானது அவள் புன்னகை
அவளின் அகன்ற விழியின் பாவைக்குள் புகுந்து
மனவெளிகளை ஆராய எத்தனிக்கும் அவன் பார்வையை
எதார்த்தமாய் இமைத்து
மென்மையாய் நிராகரித்தாள்
அவனின் தூண்டில் இரைகளை அவனுக்கும் பகிர்ந்து
புன்னகை மட்டும் பதிலாய்…

அவள் மனதின் அந்தரங்கப்பக்கங்களின்
அவலமோ, ஆனந்தமோ
அறிவதில் அவன் பிரியம் காட்ட
கடந்த காலம் நான் வாழ்ந்த காலம்
நிகழ் காலம் நமக்கான காலம் என்றாள்.

அவளுக்குத்தெரியும்
ஆயிரம் கதைகள் சொன்னாலும்
ஆண் மனது என்னவென்று……

23.1.11

சிலை அள்ளும் திருவிழா


எங்கள் ஊர் பதினாறு பாலைய நாட்டு கிராமங்களிலும் ஊருக்கு வெளியில் வயல், கண்மாய்க்கரை,கண்மாய் இப்படி அமைந்திருக்கும். கண்மாய்க்கரையில் வரிசையாக நிழல் பரப்பும் பெரிய மரங்கள். வயல் வெளியில் வேலை செய்பவர்களும், ஆடு, மாடு மேய்ப்பவர்களும் உணவு உண்ண, மதிய வேளையில் கண்ணயர இந்த கண்மாய்க்கரை உதவும்.வயலுக்கு சற்று முன்னரே அவரவர்க்கு உரிய, சாணி தெளித்து மெழுகிய களத்துமேடுகள், அருகில் குப்பை சேர்த்து வைக்கும் குப்பைக்குழிகள் இருக்கும். வருடம் பூராவும் சேரும் கட்டுத்தரைக் கழிவுகள், இலை, தழைகள் மற்றும் மக்கும் குப்பைகளை அவரவர்க்கான குப்பைக்குழியில் சேர்த்து வருவார்கள். வயல் உழும் போது குப்பையைக் கொட்டி உழுது நாற்று நடுவார்கள். 

எங்கள் ஊரின் ஒவ்வொரு கிராமங்களின் கண்மாய்க்கரையிலும் காவல் தெய்வம் அய்யனாருக்கு கோவில் உண்டு. இந்தக்கோவிலில் அய்யனாரோடு, பரிவார தேவதைகளாய் கருப்பர், காளி, முனி ஐயா, சன்னியாசி ஆகியோரும் இருப்பார்கள். ஊருக்கு ஊர் இருக்கும் கருப்பர், அய்யனார் ஆகியோருக்கு நாமங்களும் வேறுபடும். பதினெட்டாம் படிக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ஜோடிக்கருப்பர், சின்னக்கருப்பர் இப்படி கருப்பருக்கும், மேற்கே பார்த்த அய்யனார், மெய்ய அய்யனார், பால விளத்த அய்யனார், குறும்ப அய்யனார், நெல்லி அய்யனார் என்று அய்யனாருக்கும், கரும்பூரணிக்காளி, கருவேப்பிலைக்காளி, ஓசை மணிகாளி, பாம்புக்காளி இப்படி காளிக்கும் ஊருக்கு ஊர் ஒரு நாமம் உண்டு.

வருடத்திற்கொரு முறை குதிரை எடுப்பு, கிடாய் வெட்டுதல் நடக்கும். கிடாய் வெட்டுமன்று, எறிசோறு வீசுதல் நடைபெறும். அய்யனார் கோவில் கிடாய் வெட்டினாலும் அய்யனாருக்கு படைப்பதில்லை. கருப்பருக்குத்தான் படைப்பார்கள். இந்த பூசை இரவில் தான் இருக்கும்.வெட்டிய கிடாய் ரத்தத்தை புது மண் சட்டியில் ஊற்றி சோறு சேர்த்து பிசைந்து, மூன்று உருண்டைகளாக்கி பூசாரி கொண்டு வர, சாமியாடி ஊருக்கு வெளியில் உள்ள வயல் வெளியில் நடு வயலில் வந்து வயலில் வட்டமிட்டு அதற்குள் பூசாரியை நிற்க வைத்து, சாமியாடி மட்டும் அந்த சோற்று உருண்டைகளை வான் வெளியில் வீச ஒரு சோறு கூட சிந்தாமல் துஷ்ட தேவதைகள் பெற்றுக்கொள்ளுமாம். இப்படிச்செய்வதால் ஊருக்குள் துஷ்ட தேவதை வராது என்பது நம்பிக்கை. இன்றும் எங்கள் ஊரில் சாப்பிடும் போது வாய்க்குள் சோறை வீசி உண்ணும் குழந்தைகளை எறிசோறா வீசுற? என்று கண்டிப்பார்கள். திட்டும் போது எறி சோறு பொறக்கி என்பதும் உண்டு. இதற்கு பேய் என்று அர்த்தம்.

எங்கள் பாலைய நாடு பதினாறு ஊரில் எங்கள் பாலையூர் கிராமத்திலும் அதற்கு அருகில் உள்ள கரியப்பட்டி கிராமத்திலும் சிலை அள்ளும் திருவிழா என்ற ஒரு திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. இந்தத்திருவிழாவில் அய்யனார் கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஐம்பொன் சிலைகளை, சாமியாடி அருள் வந்து, தன்னோடு ஒருவரை கண்களைக்கட்டி கூட்டிச்சென்று புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தோண்டி எடுத்து அள்ளி வந்து கோவில் வாசலில் பெரிய தென்னை ஓலைக் கொட்டகையில் வாழை மரம் கட்டி அலங்கரித்து இந்த சிலைகளை கொலுவில் வைப்பது போல் அடுக்கி வைத்து, ஏழு நாட்கள் பூசை செய்வார்கள். அந்தச்சிலைகளோடு அருளாடிகளும் அமர்ந்து, வரும் பக்தர்களுக்கு விபூதி வழங்குவார்கள். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மக்கள் சிலைகளைக்காண வருவார்கள். ஏழு நாள் திருவிழா முடிந்து அதே போல் கண்களைக் கட்டி கூட்டிச்சென்று சாமியாடி புதைத்து விட்டு வருவார். மறுநாள் காலை தோண்டிய இடத்தை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாத அளவு புல் ஒன்று போல் முளைத்து இருக்குமாம். இந்த ஐம்பொன் சிலைகளில் ஊர் சுத்திப் பிள்ளையார் என்னும் சிறிய கணபதி சிலை ஒன்று உண்டு. தெருவில் கிடைக்குமாம். ஐ! பிள்ளையார் என்று எடுத்துக் கொண்டு போய் மாடத்தில் வைத்தால் அடுத்த நாள் இன்னொருவர் வீட்டு மாடத்தில் இருப்பாராம். இப்படி ஏழு நாளும் ஊர் சுற்றிவிட்டு ஏழாம் நாள் கொலுவிருக்கச்செல்வாராம். 1970 களில் நடந்த இந்தத் திருவிழா இப்போது நடப்பதில்லை. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், அருளாடிகளின் இறப்பு இந்தத் திருவிழாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கரியப்பட்டி கிராமத்தில் இந்த சிலைகளை பல மந்திர பூசைகள் செய்து, கவர்ந்து சென்ற குடும்பம் இன்று இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது என்கிறார்கள். ஆக இரு ஊரிலும் இந்தத்திருவிழா நடப்பதில்லை. இப்படி கால ஓட்டத்தில் காணாமல் போன அதிசயத்திருவிழாக்கள் எத்தனையோ?

இப்போதும் வயலுக்கு காவலுக்குச்செல்லும் ஆண்கள் அய்யனார் கோவில் கண்மாய்க்கரையில் படுத்திருப்பதுண்டு. அப்போதெல்லாம் நடு இரவில் பல்லாக்கு பரிவாரங்ககளோடு , விளக்குகள் ஜொலிக்க சாமி ஊர்வலம் போவது போன்று இருக்குமாம். பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள்,"பார்த்து இருங்கப்பா! ஓட்டம் இருக்க பக்கத்துகள்ல, சாமி போற பாதைகள்ல  படுக்காதீகப்பா" என்று. அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு வேளை புதைக்கப்பட்ட அந்தத் திருவுருக்கள் தான் இரவில் ஊர்வலம் வருகிறதோ என்று!

18.1.11

வரம்

பறவைகள் கூடு திரும்பும்
பொன் மாலைப் பொழுதொன்றில்
தேவதை ஆகும் வரம் கிடைத்தது.

தென்றலில் ஆடும் விரிந்த ஆடை
சிறகுகள் முளைத்தது
தலையைச்சுற்றி ஓளிவட்டம்
மின்னும் கற்களில் சின்ன கிரீடம்

கண்கள் மின்ன
நினைத்துக் குதூகலித்து
உயரப் பறக்கிறேன்.
நிலா, அழைக்கிறது.
நட்சத்திரங்கள் புறம் பேசுகிறது

மழை பொழியத்தொடங்கியது.
வானவில் குடை பிடித்து
வண்ணங்களை குழைத்து
மழைச்சரத்தின் ஊடாய்
பூக்களை அனுப்பியது என் பூமியெங்கும்

புதிதாய் முடிசூடிய அரசியாய்
நகர்வலம் வர
என் ராஜபாட்டை எங்கும் ஒலிக்கும் வாழ்த்தொலிகள்.

காற்றில் கைகளை அசைத்து
எனக்கான உலகை நானே சிருஷ்டித்து
ஆவலும் ஏவலுமாய் நான்
தேவைகள் அற்றுப்போனது.
ஒளிவட்டம் கண்டு மிரண்டனர் மனிதர்கள்

எனது அந்தப்புரத்தோட்டத்தில்
பூக்களுடன், பட்டாம்பூச்சிகளுடன் உறவாடி...
பிரியங்கள் கிடைக்காத வெற்றுவரத்தின் மீதான
வெறுப்பு வளர்ந்த நொடியில்
தூரத்தில் விளையாடும் குழந்தைகளை நோக்கி ஓட..
வழியெங்கும் சிதறின
சிறகில் இருந்த இறகுகளும், கிரீடத்தில் மின்னிய கற்களும்.

16.1.11

வறண்ட நிலத்தின் விளிம்பில்...

வாழ்க்கை ஒரு வறண்ட நிலமாய்
விரிந்து கிடக்கிறது....

நேயம் வறண்டு போன வானிலிருந்து
எப்போதாவது விழும் அன்பின் துளி

துளிர்த்து இலை விட்டு
கிளைத்து வளர்கிறது சுயம்

விதைப்பது நெல்லா? நெருஞ்சியா?
அறியாது விதைத்து விட்டு
விளைந்ததும் அற்றுப்போனது பிடிப்பு

பூக்கும் நம்பிக்கையற்று
வளர்கிறது விரக்தி

ஆருடங்களில் லயித்து
பேராசையில் சிக்கி தோற்று
வளர்கிறது வன்மம்

சூதும் வாதும் ததும்பி வழிய
காலம் குறித்த வேட்கையில்
உறிஞ்சிக் குடிக்கிறது வறண்ட நிலம்

ஈரம் அதிகமான வாழ்க்கை நிலமென்னவோ விரிந்து....
கிளைத்த சுயம் கருகிச் சிதையும் கடைசி நொடிகளில்
திரும்பி வரப்பாதையில்லா விளிம்பில்....

21.9.10

15. அதிரசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
ஏலம், சுக்குப்பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

முதலில் பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து, இடித்து சலித்துக் கொள்ளவும். சலிக்கும் போது பாதி அரிசிக்கு சிறுகண் சல்லடையும், பாதி அரிசிக்கு பெருங்கண் சல்லடையும் உபயோகித்து சலித்தெடுக்கவும். வெல்லத்தை பொடித்து, 150 மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாகாகக் காய்ச்சவும். பாகு கம்பிப் பதம் வந்ததும் அதாவது தண்ணீரில் போட்டு, சிறிது நேரத்தில் உருட்ட வரவேண்டும். அந்தப்பதத்தில், மாவை சிறிது, சிறிதாகப் போட்டு, கட்டியின்றிக் கிளறி விடவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து, கையில் ஒட்டாத பதம் வந்ததும், அல்லது மாவை எடுத்து கை முறுக்கிற்கு சுற்றுவது போல் சுற்றினால் அறுந்து விடாமல் வர வேண்டும். அந்தப் பதத்தில் இறக்கி வைத்து. ஏலம் சுக்குப்பொடி கலந்து, பருத்தித் துணியால் வேடு கட்டி, மூடி வைக்கவும். மறுநாள், அல்லது இரண்டு நாட்களில் இந்த மாவில் அதிரசம் செய்யலாம். சிறு உருண்டை மாவை எடுத்து, மெல்லியதாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த அதிரசம் கைகளால் பிய்க்கும் போதே உதிரும். சீர்ப்பலகாரங்களில் ஒன்று.

எங்கே போகிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, ஒரு லட்சியம், ஒரு இலக்கு நிச்சயம் இருக்கும். அது நிறைவேறியதும் இன்னொன்று. இப்படித்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் காலம் காலமாக. இப்படித்தான் நமது வாழ்க்கைப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக நமது பயணங்களில் போகும் வழியில் இடரென்றால் புறப்பட்ட இடத்திற்கே, அதே புள்ளிக்கே திரும்பி வர இயலும். ஆனால் வாழ்க்கைப்பயணத்தில், நாம் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை, தடைகளை, தடங்கல்களைக்கண்டு பயந்து புறப்பட்ட இடத்தில், அதாவது தாயின் கர்ப்பத்தில் தங்கிவிட முடியாது. வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்வதையும் ஆனந்தமாக வாழ வேண்டும். நமது வாழ்க்கையை வென்றெடுக்க வேண்டும்.இப்படியான ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. எல்லோருக்கும் இலக்குகள் வெவ்வேறு. ஆனால் வாழ்க்கை நிலைப்பாடு ஒன்று தான். பாதைகள் வேறு. ஆனால் பயணம் ஒன்று தான்.இந்தியாவில் காதல் தோல்வியிலும், தேர்வுத் தோல்வியிலும் அதிகமான இளைஞர்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் எனில், இளம்பெண்கள் பேராசையாலும், கலாச்சாரப் புரிதலின்றியும், அவசர முடிவுகளாலும் நம்பிக்கை இழக்கிறார்கள். வெற்றியின் அளவுகோல் இன்று, பணமாக உடமையாக இருக்கிறது. யாருக்கும் அமைதியான, நேயம் நிறைந்த வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.அமைதியான வாழ்க்கையை விரும்பும் இளைஞன் சோம்பேறி என்று இகழப்படுவது தான் உண்மை. டாலர் கனவுகள், வெளிநாட்டு மோகம் இளைஞர்களை மட்டுமல்ல, நடுத்தர வயதினரையும் பிடித்தாட்டுகிறது.போதுமென்ற மனம் இல்லாத காரணத்தால் எப்படியாவது, எதை அடகு வைத்தாவது, எதை இழந்தாவது வெளிநாடு சென்று, பொருளீட்டி குவித்து விடத்துடிக்கிறார்கள். எல்லா வெற்றிடத்தையும், எல்லா வெறுமையையும் பணம் ஒன்றே இட்டு நிரப்பி விடுமென்று எண்ணும் மனோபாவம் பெருகி வருகிறது.வெளிநாட்டு வேலையில் பொருளீட்டுபவர்களும், அவர்கள் குடும்பத்தினரின் அலட்டல் மிகுந்த நடவடிக்கைகளும் ஏனையோரையும் அந்தப் பாதையில் பயணிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

போர்க்காலங்களில் வீட்டுக்கொரு ஆண் படையில் சேர வேன்டுமென்பார்கள். எங்கள் ஊரில் வீட்டுக்கொரு இளைஞர் வெளிநாட்டு வேலைக்கு உருவாகித் தயாராவது இன்றைய நிலை. நிறைய வீடுகளில், வீட்டுக்கொருவர் வெளிநாடு சென்று வறுமை துடைத்து, தாரிசு வீடும், வீட்டுப்பெண்களுக்கு நகை, வசதியான வாழ்க்கை என்று வருவதைப் பார்த்து, உள்ளூரில் நிரந்தர வேலை, வசதி என்று இருப்பவர்களும் அதை விட்டு, வெளிநாடு செல்லும் கனவுகளில் இருப்பதை விட்டுப் பறந்து சிறகொடிந்து, வீடு திரும்ப வெட்கப்பட்டு காடோ, கதியோ என்று போகும் அவலத்தை நினைத்தால் மனம் வெதும்புகிறது. வெளிநாட்டு வீதிகளில் தங்கமும், வைரமும் கொட்டிக்கிடக்கிறதா என்ன? நம்மவர்களைத் தவறாக வழி நடத்தும் சக்தி எது? குடும்பத்தின் அண்மை, பாசம், நல்ல உணவு இதெல்லாம் இல்லாவிட்டாலும் கூட பணமிருந்தால் போதும் என்ற மனநிலைக்கு, இவர்கள் தள்ளப்படும் காரணம் என்ன? இந்தக்கேள்விகளுக்கு வெளிநாடு வாழ் சகோதரர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

என் மாமா ஒரு நூற்பாலையில் நிரந்தர வேலை. வசதியான வீடு, தோட்டம், நிச்சயம் வருடம் தோறும் விளையும் வயல் இப்படி அனைத்தும் இருந்தும் வெளிநாட்டு மோகம் எப்படி அவர் மனதில் நுழைந்ததோ தெரியாது. முதலில் அமெரிக்காவிற்கு ஆள் எடுக்கும் பேர்வழியிடம் பணம் கொடுத்து, பாதி போய், பாதி மீண்டது. அப்போதே நாங்கள் எச்சரித்தோம். சிறிது காலம் அடங்கி இருந்து, பின் மலேசியாவிற்கு ஆள் எடுப்பவரிடம் பணம் கட்டி, மலேசியா சென்றும் விட்டார். அங்கு போனதும் தான் தெரிந்தது விசாவில் மோசடி என்று.கையிருப்பெல்லாம் ஏஜண்டிடம் கட்டியாயிற்று. வெறும் கையோடு ஊருக்குத் திரும்ப சங்கடப்பட்டு,அங்கிருந்த ஒரு நண்பர் ஒளிந்து வாழ்ந்து சம்பாதிக்கலாம் என்று கூற, அதற்கு உடன்பட்டு, கொஞ்ச நாளில் பிடிபட்டார். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் துக்கம் என்றால் அப்படி ஒரு துக்கம். இந்த அவமானத்தில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்ற கேள்வி எங்களை அரித்தெடுக்க, தெரிந்தவரைத் தொடர்பு கொண்டால், அவர், "வழக்கு முடிந்ததும் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் பயப்படவேண்டாம்" என்று ஆறுதல் கூறினார்.வழக்கு முடிந்து ஊர் திரும்பியவரை அழைத்து வரப்போனவர்களுக்கு பெரிய அதிர்ச்சி. ராஜா போல் இருந்தவர் அழுக்குச்சட்டையும், பரிதாபமான கோலமும். அவர் தங்கி இருந்த அறை நண்பர்கள் அவரது உடைமைகளைப் பங்கு வைத்துக் கொண்டார்களாம். மாற்றுத் துணி வாங்கிக்கொடுத்து அழைத்து வந்து ஒரு மாதம் வீடு வராமல், உடலும், மனமும் தேறி வந்ததும் பிறகு சொந்த வீடு திரும்பினார். இப்போது வெளிநாடு குறித்து எதுவும் பேசுவதில்லை. அவர் முகத்தில் களை மறைந்து, புன்னகை மறைந்து, துக்கம் நடந்த வீட்டின் மனிதர் போல் நடமாடும் அவர் பழைய மாதிரி எப்போது மீண்டு வருவார் என்ற எதிபார்ப்பில் எங்கள் குடும்பம் மொத்தமும்.

24.8.10

குடியினால் கெட்ட குடிகள்.

சொந்த ஊர் போகும் போது, உறவினர் வீட்டுத்திருமணங்கள், இறப்பு,பிறப்பு, சடங்கு ஆகியவற்றை முறை கேட்டு வருவது வழக்கம். அதிலும் துக்கம் கேட்கப் போகும் நாளில் சந்தோசமான முறை கேட்கப் போகும் பழக்கமில்லை. துக்கம் கேட்க ஒரு நாள் குறித்துக்கொண்டோம். அப்படி நேமத்தான் பட்டியில் உறவினர் வீட்டில் முறை கேட்டுவிட்டு, திரும்பி வரும் போது பேருந்து நடத்துநர், இந்தப்பேருந்து கோட்டையூர் வழியாகப்போகாது என்றும், எங்களை பள்ளத்தூரில் இறங்கிக்கொள்ளும்படியும் கூற நாங்களும் பள்ளத்தூரில் இறங்கினோம். பள்ளத்தூரில் இறங்கியதும் நகரப்பேருந்து வர தாமதமாகும் என்றார்கள்." ரொம்ப நாளாச்சு நடந்து. நடப்போமா! என்று நடக்கத்தொடங்கினோம். வழியில் மணச்சை. மணச்சையில் முறை கேட்டு வேலங்குடி. வேலங்குடியில் முறை கேட்டு கோட்டையூர் செல்ல வேண்டும். கண்மாய் ஒரு புறமும், வயல்வெளிகள் ஒரு புறமும், உச்சியில் அக்னி நட்சத்திர வெயிலும் எங்களைக் கடந்து போவோரின் ஏளனப்பார்வையும் சுகம் தான். வழியில் நுங்கு சுளை விற்றுக்கொண்டிருக்க அதையும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம்.எங்களின் குழந்தைப்பருவம் திரும்பக் கிடைத்தது போல் இருந்தது.

வேலங்குடி கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த போது எனது கணவரின் பெயர் சொல்லி அழைப்பு. திரும்பிப் பார்த்தால் அந்தமானில் நெடுநாள் வசித்த நண்பர். அவர் தந்த குளிர்பானத்தை பருகியபடி அவரை நலம் விசாரித்துப்பேசிக்கொண்டிருக்க, ஒரு பெண் வந்து பணத்தை நீட்டினார். வட்டியொன்றும் வேண்டாம். எடுத்துக்கொண்டு போ!. என்று வட்டிப்பணத்தை திருப்பிக் கொடுத்து, அவர் அடமானம் வைத்த பொருளைத் திருப்பிகொடுத்தார். அந்தப்பொருள் அடுப்பு, கேஸ் சிலிண்டர். குடிப்பழக்கம் உள்ள அந்தப்பெண்ணின் கணவர், குடிப்பதற்கு பணமில்லை என்றதும், அடுப்பை விட்டு சிலிண்டரைக் கழற்றத் தெரியாது, இரண்டையும் கொண்டு வந்து 1500/ ரூபாய்க்கு அடகு வைத்து குடித்துக் கும்மாளம். நான் அவரிடம் இனிமேல் வாங்காதீர்கள் இது தரித்திரம் என்று கூற அந்தப் பெண் ஐயோ! இந்த அண்ணன் வாங்காவிட்டால் எங்காவது கொண்டு போய் விற்று விடுவார் என்றழுதார்.

அரை மணி நேரம் அந்தம்மா சொந்தக்கதை, சோகக்கதை கூற ஏற்கனவே துக்கம் கேட்டு வந்த சோகம்.கண்கள் ஈரமாகின. இப்படி நிறைய வீடுகளில் நித்தம் இதே கதை. குடிப்பதற்குப் பணமில்லை என்றால் வடித்த சோற்றைத் தூக்கி கொட்டிவிட்டு, சோற்றுப் பானையை விற்றுக் குடிப்பார்களாம். தரவில்லை என்றால் மனைவி, மக்களை அடிப்பது, பானை சோற்றில் சிறுநீர் கழித்து வைப்பது போன்ற கொடூரங்கள். இதனால் தான் ஏழைகள் ஏழைகளாகவே! எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. குடித்து சீரழியும் மாக்கள் குடியை விட மட்டும் மருந்தே இல்லையா?����