கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

23.9.11

தும்பைப்பூக்கள்


கடைசிக்கால
நிம்மதிக்கனவுகளுடன்,
வானம் தொடும் ஆவலும்,
ஏணி வைக்கும் முயற்சிகளுமாய்,
பெரு நகரச் சமுத்திரத்தில் அமுதம் தேடி
மூழ்கி, எழுந்து, நீந்தி, திளைத்து……

கனவுகளில் வலம் வருகிறது
தட்டான் பிடித்த பொழுதுகளும்
தவளை கத்தும் மழை இரவுகளும்

நட்ட செடிகளில்
முதல் பூவும் முதல் பிஞ்சும்,.
திருவிழாக்கடைகளில் பஞ்சுமிட்டாயும், ரப்பர் கடிகாரமும்,
வயல் வரப்புகளில்,
கண்மாய்க்கரைகளில்
கதிர்க்களங்களில் உண்ட கஞ்சியும், ஊறுகாயும்,
நல்ல நாள் பார்த்து சமைத்த
புது அரிசிச்சோறும், கறிக்குழம்பும்,
தும்பைப்பூக்களில் தேனருந்தும் பட்டாம்பூச்சிகளும், தேன்சிட்டுகளும்,
ஊரணிப்படிக்கட்டுகளில்
அந்தி நேரங்களில் ஒலிக்கும் துணி தப்பும் ஒலியும்,
கலவைக்குரல்களையும் திரித்து, திரித்து,
விரியும் நினைவில் சொன்ன கதைகளில்
மெல்ல இளகும் மனவெளி..
உறங்கிப்போன குழந்தைகள் கனவில்
தும்பைப்பூக்களும், தாமரைகளும்..
.
அரவமற்ற ஊரணிக்கரைகளில் பூத்துக்கிடக்கிறது
பறிக்க ஆளில்லாத தாமரைகள்

2 கருத்துகள்:

  1. அரவமற்ற ஊரணிக்கரைகளில் பூத்துக்கிடக்கிறது
    பறிக்க ஆளில்லாத தாமரைகள்

    அழகான காட்சிகள் ஊர்வலமாய்...

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு