கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

3.4.10

விளந்தானை பாட்டு


தானானே தானானே தானானே தானானே
தானானே தானானே தானானே தானானே 

பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானை
சூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானை
சூரியனே சந்திரனே சுவாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே )

அய்யனாரை நோக்கி அடித்தோம் விளந்தானை
வெண்கலத்தைக் கீறியே விளக்கெரம்ப நெய் வார்த்து
நானாட நீயாட நடுவே சிலம்பாட
வேப்பங்க் கொழுந்தாட வேடிக்கை பாக்குறா மாரியாத்தா (தானானே )

கண்குளிரப் பாக்குறாடா காரியக்கார மாரியாத்தா
மனங்குளிரப் பாக்குறாடா மகமாயி மாரியாத்தா
அஞ்சிலம்பு கொஞ்சிவர மணிச்சிலம்பு ஓசை கேட்க
காற்சிலம்பு கொஞ்சிவர காவல் காக்குறா மாரியாத்தா (தானானே)

ஆந்தையும் கூகையும் அலறும் அந்தக்காட்டிலே
ஆகாசத் தண்ணிப்பந்தல் வைக்கிறாராம் சோலைமலை
ஊசி நுழையாத உடைவேளங்காட்டுக்குள்ளே
ஒத்தக்குதிரை ஓட்டி வாராராம் கருப்பண்ணே (தானானே )

குடுகுடுப்பைத் தேங்காய் அடிமடியிலே கட்டிக்கிட்டு
கூத்தியா வீடு தேடிப் போராராம் பெரியண்ணே
கூத்தியாட்டக் குடுக்கிற பணத்தை குளத்த வெட்டுடா பெரியண்ணே
அள்ளிக் குடிக்கலாம் ஆவல் தெளியலாம் (தானானே )

நாவெடுத்து நான் பாட நல்ல மழை பெற
பூவெடுத்துச்சாத்துங்களே பூமலை நாயகி அம்மனுக்கு
திருமயத்து மெய்யனோட பாதம் மறையவே
திட்டக்கிண்றும் சிறு ஊரணியும் பெருகவே (தானானே )

வயல்நாச்சியம்மனோட பாதம் மறையவே
வட்டக்கிண்றும் வாய்க்காலும் பெருகவே

பட்டான் பட்டான் பன்னாங்கு படையலப் பட்டான் பன்னாங்கு
நெத்தியில துண்டப்போட்டு நேரே போட்டான் பன்னாங்கு (தானானே)

வாந்த மணலில ஊர்ந்து போகும் ஊமாச்சி
அதுவைப் பிடிப்பானேன் கூரைக்கடிப்பானேன்
கோட்டையப்பிடிக்கபோய் கோயில் மாட்டை மேய்க்கப்போய்
வீட்டுக்கு வந்தா விளக்கேத்தல சோத்தப் போடுடா சுப்பையா (தானானே)

ஆத்திக்குச்சியும் பொன்னாலே ஆவரங்குச்சியும் பொன்னாலே
காது வளர்த்த மாரியாத்தாளுக்கு காது ரெண்டும் பொன்னாலே
சித்தாடை கொஞ்சுடுத்தி சிறுக மடிகோலி
செம்பருத்திப் பூப்பறிக்கப் போறாளே மாரியாத்தா (தானானே)

ஆடை உடுத்தி அகல மடி கோலி
ஆவாரம் பூப்பறிக்க போறாளே மாரியாத்தா
போதுமாடி மாரியாத்தா பொறுமையுள்ள கொண்டைக்கு
போதாட்டி என் செய்வேன் பொலுப்பி முடியலாம் (தானானே)

பத்துமாடி மாரியாத்தா பத்தினியார் கொண்டைக்கு
பத்தாட்டி என் செய்வேன் பரப்பி முடிக்கலாம்
கதிரறுத்து சேறுகட்டி களஞ்சியத்தின் மேலேறி
வருஷக்கணக்கெழுத வாராளாம் மாரியாத்தா (தானானே)

சோமணத்தான் தாராயோ தோளில் போட்டு ஆடேனோ
கடுக்கனைத்தான் தாராயோ காதில் போட்டு ஆடேனோ
மகராசி பெரியவ வயல் வழியே வந்தாளே
சம்பா விளையுமே தரிசு பொறையேறுமே (தானானே)

மூலையில நின்னுக்கிட்டு மூக்கைச்சிந்தி அழுதாலும்
முத்து வர்ணக்கண்டாங்கி தந்தாவுல்ல நான் போவேன்
கதவு இடுக்குல நின்னுக்கிட்டு கண்ணப்பினைஞ்சு அழுதாலும்
காரைக்கால் துப்பட்டா தந்தாவுல்ல நான் போவேன் (தானானே)

காட்டுக்குச்சிய வெட்டிக்கிட்டு கறியுஞ்சோறு தின்னுப்புட்டு
வீலவயித்தக் காட்டிக்கிட்டு வீட்டுக்கொருத்தன் வந்தானா

மாரியாத்தா வந்தாளாம் ஒரு மாக்கொழுக்கட்டை தந்தாளாம்
பூமாத்தா வந்தாளாம் ஒரு பூக்கொழுக்கட்டை தந்தாளாம் (தானானே)

பெரியநாயகி வந்தாளாம் ஒரு மொக்கட்டை எழும்பு தந்தாளாம்
தானானே தானானே தானானே தானானே தானானே 

கம்பே உளறுதே எம்பாட்டு ஏறல
ஆடத்தெரியாதவன் ஆட வந்து நிக்கிறான்
பாடத்தெரியாதவன் பாடவந்து நிக்கிறான்
தூங்கப்பயலே பாடுடா சவங்கப்பயலே ஆடுடா (தானானே)

மூணு முக்கூடு வீதியில மூணு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி
நாலு முக்கூடு வீதியில நாலு கோழி அடவச்சேன்
கோழி போனா மயிறு போச்சு கூடைய எடுத்தவ தாங்கடி (தானானே)

அவிச்ச கறியத் தின்னுப்புட்டு ஆமக்கமாரையும் ஏச்சுப்புட்டு
திருவாரூர் தேர்போல சிரிச்சு நிக்குறா பாருங்களே
நாட்டமான கொத்தரிக்கு யார்யாரு அம்பலம்
கண்ணப்பன் சேருவை காளையப்பன் அம்பலம் (தானானே)

கொத்துக்கொத்து வீரப்பன் கோடாரி வீரப்பன்
நரியன் பிலியனும், நல்லதொரு மாமாலன் 
வாழ்த்துறோம் வாழ்த்துறோம் மனம் மகிழ வாழ்த்துறோம்
அண்ணனும் தம்பியும் அதிபதியா வாழவே
மாமனும் மச்சினனும் மலைபோல வாழவே
கொண்ட இடம் கொடுத்த இடம் கோத்திரமா வாழவே
தென்னை வச்சு பயிரேத்துர சேருவாரர் வாழவே
அகத்திவச்சு பயிரேத்துர அம்பலகாரரும் வாழவே
முருங்கை வச்சு பயிரேத்துர முத்தஞ்சேர்வை வாழவே
கும்பஞ்சுமந்து வரும் குயவனாரும் வாழவே
குட்டி புடிச்சு வரும் கோனாரும் வாழவே
ஏத்தாப்பு போட்டுவரும் ஏகாளி வாழவே
சாஞ்ச பனையேறும் சாணானும் வாழவே
கொட்டி முழக்கி வரும் வெட்டியானும் வாழவே
எம்பாட்டுக் கேட்டவர்கள் எல்லோரும் வாழவே (தானானே)

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் தழைத்து முசியாமல் தான் வாழ்வாரே (தானானே)

1 கருத்து: