கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

6.2.10

முதுமை - ஒரு பருவம்

முதுமை - பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் சந்திக்கவேண்டிய ஒரு பருவம்.பாவத்தின் சம்பளம் மரணமென்றால்,முதுமை சம்பளம் பெற வேண்டியதற்கான ஒரு உழைப்பு,இலக்கையடைய வேண்டியதற்கான ஒரு பயணம்.குழந்தைப்பருவம்,பெற்றொரின் கரங்களிலும்,அவர்களின் வழிகாட்டலிலும்,இளமைப்பருவம் சமூகத்தின் வழிகாட்டலிலும்,நண்பர்களின் தாக்கத்தாலும்,நடுத்தரவயது வாழ்க்கைத்துணையின் ஆளுமையிலும்,குடும்பத்தின் பாரம் சுமப்பதிலும் கழிய,முதுமையில் ஓய்ந்து மீண்டும் யாருடைய கரங்களிலாவது தஞ்சம் அடையவேண்டிய ஒரு கட்டாயம்.நாடி நரம்புகள் தளர்ந்து,தமது கரங்களில் இருந்த அதிகாரத்தையும்,பொறுப்பையும், நமக்கு அடுத்து பதவிக்கு வரும் யாராவது கவர்ந்து கொள்ள குடும்பம் என்ற அரசாங்கத்தில் அரசன்,அரசி- தலைவன்,தலைவி பட்டம் பறிபோக மனதளவில் முதல் வருத்தம்.அரசாண்ட இடத்தில் தமது அதிகாரங்கள் பறிபோக,அவர்களை ஒரு பொருட்டாக மதியாத மக்களும்,வேகமான வாழ்க்கையினாலும்,முதியவர்கள் இன்று நமது சமுதாயத்தில் ஒரு பெரும் சுமையாக மாறி வருவதுடன்,முதியோர் இல்லங்களும் வெகு வேகமாக அதிகமான 
எண்ணிக்கையில் பெருகி வருகின்றன.இது காலத்தின் கட்டாயம்.இரு பாலரும் பணிக்குச்செல்லத் தொடங்கியதுமே,நமது குடும்பங்கள் புதிய பாதையில் நடையிடத் தொடங்கியுள்ளது.பொறுமையற்ற மனங்கள் யாரையும் குறை நிறையோடு ஏற்றுப் பழக இயலாது, சகிப்புத்தன்மையற்று குடும்பங்களுக்குள் யுத்தம் பெருகத் தலைப்பட சுயமரியாதையை இழக்க விரும்பாதவர்கள் வீட்டை விட்டு வெளியேறத்தீமானிக்கின்றனர்.அவர்கள் இளைய தலைமுறையினராக இருந்தாலும் சரி, முதுமையின் பிடியிலிருப்பவர்களாயிருந்தாலும் சரி! இளைய தலைமுறை வெளியில் சென்றால் அது தனிக்குடித்தனம்.முதியோர் சென்றால் "இல்லங்கள்". எப்படியானாலும் ஆதரவற்றவர்களாவது,அனாதையாக்கப்ப்டுவது முதியவர்கள் தான்.அமெரிக்கா அழைத்துச்செல்வதாய்ச்சொல்லி விமான நிலையத்தில் தாயை விட்டுச்சென்ற மகன்,சாலையில் தந்தையை அனாதரவாக விட்டுச்சென்ற மக்களும் பெருகிவரும் காரணம்,இந்த இளமையும்,வசதிகளும் நிரந்தரம் என்று நினைக்கும் குணங்களால்.வாழ்க்கையின் தாத்பரியங்களை விதைத்து வளர்த்தாலும் கூட சமூகத்தின் பாதிப்பால்,சொந்த குணம் மறந்து,எப்படியோ விட்டு விடுதலையாகிவிடும் மனோபாவம் இன்று இளையோரிடம் வளர்வது தான் காரணம்.எது எப்படியோ,கொஞ்சம் முந்தி,பிந்தி என்றாலும் அந்தி எல்லோருக்கும் நிச்சயம்.யார் எதை விதைக்கிறோமோ,அதைத்தான் அறுவடை செய்வோம்.காலம் எப்படி மாறினாலும் அடிப்படை வாழ்க்கை உண்மைகள்,பிரபஞ்சக் கோட்பாடுகள் மாறுவதில்லை.

ஆனால் முதியோரும் மாறிவரும் காலகட்டங்களுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்வது நலம்.பணிக்காலத்திலேயே தங்களுக்கென ஒரு தொகையை சேமிப்பது முதுமையில் கைகொடுக்கும்.பணமென்பது இன்றைய உலகில் பெரும் பலம்.அது போல் வீடுகளில் நமக்கு கவனிப்பு இல்லையெனில்,மனக்கசப்புகளை வளர்ப்பதைவிட்டு இல்லங்களுக்குச்செல்வது என்வரை சரி.வீட்டுக்குள் மகன்,மருமகள்,பேரக்குழந்தைகள் தங்களுக்கெனத் தனியுலகை சிருஷ்டித்துக் கொண்டு வாழத்தலைப்பட்ட பின்,அவர்களது அன்பிற்கு ஏங்குவதை விட,நமக்கு பேச்சுத்துணைக்குக் கூட யாருமற்ற சூழலில் இருப்பதைவிட,நமக்கான உலகை நாம் சமைத்துக்கொள்வதுதான் சரி.நமக்குப்பிடித்த மாதிரி,நமது கொள்கைகளை யாருடனும் சமரசம் செய்யாது முதுமையில் வாழவேண்டுமெனில்,இல்லங்களோ அல்லது முதியோர் தனியே பணத்திற்கு சேவை செய்வோர் துணையுடன் வாழ்வதிலோ ஒரு தவறுமில்லை.மனிதனைத் தவிர வேறெந்த உயிரும் தமது சந்ததியரை நம்பி இல்லை.மனிதனுக்கு எத்தனை அறிவு வளர்ச்சி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காக அவன் பலவீனமான இறைப்படைப்பே!.ஆகவே,சிறகுகள் முளைத்ததும் பறக்கத் துடிக்கும் இளையோரை,சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள்.அவர்களை சுயமாக வாழ விடுங்கள்.நான் சமீபத்தில் ஒரு இல்லத்திற்குச்சென்றிருந்தேன்.அங்கு முதியோர் அவரவர் வயதிற்கேற்றபடி சின்னச்சின்ன வேலைகள்,பஜனைகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,தமது மலரும் நினைவுகளைப்பகிர்ந்து கொள்ளுதல் என்று சுதந்திரமாக இருக்க,அவர்களுக்கு உணவும் எளிமையாகத் தரப்படுகிறது.அன்பு என்பது விசாலமானது.அதைத்தம் குடும்பத்துக்குள் சிறைப்படுத்தி விடாது எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளும் போது எங்கும் சுபிட்சமாகிறது.காலத்தின் மாறுதல்களை மனதளவில் ஏற்றுக்கொள்பவர்களுக்கும், எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாது,கால ஓட்டத்திற்கேற்ப ஓடத் தலைப்படுபவர்களுக்கும் வாழ்க்கை என்றுமே சுமையில்லை.சில முதியோர்- தங்கள் கடமை முடிந்த பின்னும் தமது சந்ததியர் கடமைகளைச்சுமந்து கொண்டு வாழ்க்கை முழுதும் சுமைதாங்கிகளாகவே இருப்பார்கள்.அந்த மாதிரியானவர்கள் தான் பெரும் வலிகளை அனுபவிக்க நேர்கிறது.முதுமையிலாவது தனக்காக வாழப்பழகுவோம்.யாருக்கும் சுமையாக இல்லாது நம்மால் முடிந்த உதவிகளைப்பிறர்க்கு செய்தால்,நமக்கென உதவிக்கரங்கள் தானே நீளும்.அடுத்தவர் உதவி தேவைப்படாத ஒருவரை இறைவன் இன்னும் படைக்கவில்லை.முன் கை நீண்டால்தான் முழங்கை நீளூம்.நமது கடமைகளை முடித்துவிட்டால், நமக்கு சந்தோசம் தரும் வாழ்வில் ஈடுபட்டு,புதிய பாதையில் நடையிடப்பழகுவோம்.நமது உடலில் கடைசி பலம் உள்ளவரை நம்மால் காரியமாற்ற இயலும்.ஆன்மீகம்,எழுத்து,சமூகசேவை இப்படிப்பயனுள்ள முறையில் முதுமையைக்கழிப்பது சிறப்பு.

அன்பு என்பது எப்போதும் இறங்கு முகத்தில் தான் இருக்குமாம். குழந்தைகள் மீது நாம் செலுத்தும் அந்த அன்பை,அவர்கள் சேமித்துத் தன் குழந்தைகளுக்குத் தருவார்களாம்.எங்கள் செட்டிநாட்டு கிராமங்களில், இளையோர் அனைவரும் பிழைப்பிற்காக வேற்று ஊர்களில்,நாடுகளில் வாழ,பிரம்மாண்ட வீடுகளில் முதியோர் மட்டுமே.அவர்கள் தங்களுக்குள் பேச்சு,உணவுகளைப்பரிமாறிக்கொள்ளல்,ஊடகம்,அதுகுறித்த விவாதம்,மலரும் நினைவுகள்,கோவில்,பக்தி என்று பொழுது கழிய,திருவிழா,திருமணங்கள் என்றால் வீடு நிறையும் போது,அவர்களின் மனமும் நிறைகிறது.அது கடந்ததும் அடுத்த நிகழ்வுகளுக்கும்,சந்திப்புகளுக்கும் காத்திருக்க...காத்திருப்புகள் தொடர்கிறது.வாழ்க்கை வளமாகத் தேடல் அவசியமாகிறது.தேடல்களைத்தொடர இப்படியான சூழ்நிலைகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.இந்தப்பிரிவுகளை அறிவு ஏற்றுக்கொள்ளுமளவு,மனம் ஏற்க மறுப்பதுதான் முதுமையின் துன்பங்களுக்குக் காரணம்.இளையோர் அவர்களது குடும்பம்,நட்பு,வேலை என்று வாழத்தலைப்படும் போது நாமும் நமது வழியில் போக முயல்வது புத்திசாலித்தனம்.நடப்பை ஏற்று அதற்கேற்ப சரிசெய்து வாழ்வது ஒன்றே சரியானது.வாழ்க்கையின் அத்தனை பருவங்களையும் எப்படிக்கடந்து வந்தோமோ,அப்படி முதுமையைக்கடந்து முக்தியடைவோம்.முதுமையில் உடல் தளரும்.உள்ளம் தளர வேண்டியதன் அவசியமென்ன?.யோசிப்போம்.

3 கருத்துகள்:

  1. வர வர பதிவுகள் எல்லாம் கனமா இருக்கு..:))

    யாருமற்ற சூழலில் இருப்பதைவிட,நமக்கான உலகை நாம் சமைத்துக்கொள்வதுதான் சரி.நமக்குப்பிடித்த மாதிரி,நமது கொள்கைகளை யாருடனும் சமரசம் செய்யாது முதுமையில் வாழவேண்டுமெனில்,இல்லங்களோ அல்லது முதியோர் தனியே பணத்திற்கு சேவை செய்வோர் துணையுடன் வாழ்வதிலோ ஒரு தவறுமில்லை.மனிதனைத் தவிர வேறெந்த உயிரும் தமது சந்ததியரை நம்பி இல்லை.மனிதனுக்கு எத்தனை அறிவு வளர்ச்சி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காக அவன் பலவீனமான இறைப்படைப்பே//

    சரிதான் ..:))

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறந்த பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. முதுமையில் சிறிது அளவாவது தனக்கென்று பணம் வைத்துக் கொள்ளவேண்டும்
    நல்ல பகிர்வு ஷாந்தி

    பதிலளிநீக்கு