கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

6.3.10

விகடனின் "சக்தி,2010",சர்வ தேச மகளீர் தின ஸ்பெஷலில் வெளிவந்த கட்டுரை. வெளியிட்டுச்சிறப்பித்த விகடனுக்கு நன்றி!


எது அர்ப்பணிப்பு? : அனுபவம்
- கே.என். சாந்தி லக்ஷமணன்
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! என்றான் மகாக்கவி. ஒரு பெண்ணின் உழைப்பால்,தியாகத்தால்,பொறுப்புணர்வால்,சிறந்த அறிவால் சிறக்கிறது அவளின் குடும்பம்,பரம்பரை,சமூகம்.இதை வழி வழியாகக்கண்டும்,அனுபவித்தும் வந்திருக்கிறது நம்நாடு. சிந்தனை,எண்ணங்கள்,அறிவுவளர்ச்சி,பெண் சுதந்திரம்,சுயம் உணர்த்தும் - இருப்பை உணர்த்தும் ஆங்காரமற்ற,கேள்விகள் அற்ற,குடும்பம் ஒன்றையே தன் அடையாளமாக,கணவரைத் தன் உயிராக,குழந்தைகளைத் தன் அங்கமாக,அதுவே தனது நிலைப்பாடாக,பெருமையாக,தன்னைத் தனியே அடையாளமாக்கிக்கொள்ள விழையாத, பாரம்பர்ய பண்பாடாகக் கொள்ளும் பெண்களால்,தியாகத்தின் பிம்பங்களால் ஒளிர்கிறது நமது குடும்பங்கள்.அறியாமையால் கிடந்தவர்களென பெண்ணுரிமை வாதிகள் இவர்களை விமர்சித்தாலும் பொறுப்புகளை ஏற்று,கடமைகளைச்செய்து, அளவுகடந்த குடும்பப்பற்றுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தெய்வத்தாய்களுக்கு நாம் பெரிதாக என்ன கைம்மாறு செய்துவிடமுடியும்.ஒவ்வொருவருக்கும் தாய் என்பவள் உறவுகளில் முதல்வி. அவளை எண்ணிய மாத்திரத்தில் மனக்கண் கசியும். இதயத்தில் ஈரம் சுரந்து,கர்வம் வடியும்.அப்படி ஒரு ஈரம் கசிய வைக்கும் பெண் என் தாய்.

போராட்டங்களே வாழ்க்கையாய்க்கொண்ட என் தாய் போர்களைக்கண்டு அஞ்சியதுமில்லை.தன்னை நொந்துகொண்டதுமில்லை.அலுப்பு,சலிப்பு எதுவும் இருந்ததில்லை.என்ன அனுபவித்தோம் என்று கடந்த கசப்புகளை நினையாது,இனிப்புகளை மட்டுமே பரிமாறத்தெரிந்த பெண்.தன் வீட்டுப்பெண்களை மறந்து விட்டு கற்புக்கரசிகளின் பட்டியல் போடும் பண்டிதர்கள் நிறைந்த நம் நாட்டில் சர்வதேச மகளீர் தினத்தில் என் தாயைப்பற்றி எழுதுவதில் பெருமை எனக்கு.அதிகம் படிக்காத,ஆனால் வாழ்க்கையைப் படித்த அனுபவசாலி.ஐந்து பெண்குழந்தைகள்,ஒரு ஆணைப்பெற்றும் சற்றும் தாழ்வு மனப்பான்மையோ, குறுகிய எண்ணங்களோ அற்று எங்களுக்கு வாழ்க்கையில் போராடி வெல்லும் வாழ்க்கையே சிறப்பு என்று கற்றுக்கொடுத்தவர்.கல்வியோடு,வீட்டு வேலை,கைவேலை,எந்த வேலையையும் பார்த்து மலைக்காது,'செஞ்சுட்டாப்போச்சு' என்ற மனப்பான்மை என்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்து இன்று கழனி வேலையானாலும்,கணிப்பொறி வேலையானாலும் நாங்கள் பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல,அதில் முத்திரை பதிக்கும் அளவு எங்களை வளர்த்து விட்டதும் எங்கள் தாய்.செட்டிநாட்டுப்பகுதியில் பெண்குழந்தைகளுக்கு அதிகமான சீர் வரிசை செய்வது வழக்கம்.பால் விற்ற காசு,மற்ற உபரி வருமானங்களால் வரும் வரவுகளை பாத்திரச்சீட்டுக்கட்டுவது,சில்லறைகளை உண்டியலில் சேர்த்து,நிறைந்ததும் உண்டியலை அதிக சேதமில்லாது உடைத்து (பிறகு ஃபெவிக்கால் வைத்து ஒட்டி பின் அதில் மறுபடி சேமிப்பது) அந்தப்பணத்தில் பாத்திரங்கள் வாங்கி சேர்ப்பது என்று எங்கள் அம்மா மிகவும் சமர்த்து.சினிமா முதல் பூ வாங்குவது வரை திட்டம் போட்டுத்தான் செய்வார்கள்.தங்க நகைகளை வெளியில் செல்லும் போது அணிந்து சென்று வீடு வந்ததும் கழட்டி வைத்து,இன்று வரை மெருகு மாறாது வைத்திருக்கும் அவர்களின் கட்டுப்பாடு,ஆசைகளை சீரமைத்து, போதுமென்ற மனதோடு நிறைவாய் வாழவும்,பழிகளுக்கு அஞ்சி கௌரவம் பேணவும்,சிக்கனம்,சோம்பலற்று இல்லம் பேணவும் கற்றுக்கொடுத்து,யதார்த்தங்களை ஏற்று அதற்குத்தகுந்தார் போல் வாழச்சொல்லிக்கொடுத்து,விரும்பியது கிடைக்காவிட்டால்,கிடைத்ததை விரும்பி வாழவும்,புகுந்தவீடு போற்ற எங்களை வாழ்விப்பதும் எங்கள் தாய் என்ற ஆலமரம்தான்.

ஒருமுறை எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.அவரைப்பார்க்க ஒரு நண்பர் வந்திருந்தாராம்.அவருக்கு மூன்று பெண்குழந்தைகளாம்.இரு பெண்களை நல்லமுறையில் திருமணம் செய்வித்து மூன்றாவது பெண்ணுக்கும் வரன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும்,போதியளவு சேமிப்பு இருப்பதாகவும் சொன்னாராம்.உடனே எழுத்துச்சித்தர் அவர்கள் எழுந்து அவரை வணங்கினாராம்.ஒரு மனிதனுக்கு இதைவிட என்ன வேண்டும்.இரு பெண்களைக்கரை சேர்த்து மூன்றாவது பெண்ணுக்கு வழி தேடிக்கொண்டிருக்கும் இவர் தான் வணங்கப்பட வேண்டியவர் என்று முடித்திருந்தார்.அப்படியானால் இரு பெண்களுக்கு மணம் செய்வித்து என் தந்தை இறந்ததும்,என் தந்தை விட்டுச்சென்ற சொத்தை அழிக்காது வளர்த்து,மற்ற மூன்று பெண்களைப்படிக்கவைத்து,திருமணம் முடித்து,மகனைப்படிக்கவைத்து,மணமுடித்து,இன்றும் உறுதுணையாக இருக்கும் எங்கள் தாய் என்றும் எங்கள் வணக்கத்திற்கும்,வாழ்த்துக்களுக்கும் உரியவர்.ஒளிரும் ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்குப் பின்னும், உருகும் மெழுவர்த்தியாய் ஒரு பெண் இருக்கிறாள்.பெண் என்னும் பிறவியின் தியாகங்களால் நிரப்பப்பட்டது நம் புண்ணிய பூமி."அவளின் தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் தேவையில்லை.அவள் அவளுக்காக வாழவேண்டும்" என்று பெண்ணீயவாதிகள் போர்க்கொடி தூக்கினாலும் குடும்பம் என்ற கோவில் உருவாக அவளின் அர்ப்பணிப்புகள் தேவையாயிருக்கிறது.நம் சமூகத்தில் பெண் என்பவளின் பரிமாணங்கள் பன்முகம் கொண்டது.குடும்பங்கள் என்னும் கோவிலில் ஒளி தீபமேற்றும் பெண்கள் வாழ்க! வளர்க!

3 கருத்துகள்: