கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

10.3.10

ஒப்பாரிப்பாடல்

(ஒரு ஆண் இறந்தால் வைக்கப்படும் ஒப்பாரி)

யாரைச்சரியிடலாம்,யார்யாரை ஒப்பிடலாம்
வெள்ளி சரியிடலாம் விடிமீனை ஒப்பிடலாம்
தங்கம் சரியிடலாம் சர்ச்சிமாரை ஒப்பிடலாம்
பொன்னைச்சரியிடலாம் பிள்ளையாரை ஒப்பிடலாம்
அலைகடலில் பள்ளிகொள்ளும் அச்சுதரை ஒப்பிடலாம்
நிலைகடலில் பள்ளிகொள்ளும் நீலவண்ணரை ஒப்பிடலாம்
பாற்கடலில் பள்ளிகொள்ளும் பச்சைவண்ணரை ஒப்பிடலாம்

அக்கம் கதவும் எங்கள் அரண்மனைக்குக் காவல்
பூட்டுங்கதவும் புதுமனைக்குக்காவல்
ஆனைப்பலம் போச்சே அதிகாரச்சொல் போச்சே
குதிரைப்பலம் போச்சே கூசாத சொல் போச்சே
ஆனையான் வந்தாலும் அஞ்சுவான் வாய் திறக்க
ஆனைவிட்டுக்கீழிறங்கி ஐயா சரணமென்பார்
குதிரையான் வந்தாலும் கூசுவான் வாய் திறக்க
குதிரை விட்டுக்கீழிறங்கி ஐயா கோடி சரண்மென்பார்
வீரர் சமத்து வெல்ல முடியாது
கர்ணர் சமத்து காண முடியாது

கடையாம்,கடைத்தெருவாம் காணவருவோமின்னா
கைலாசப் பூநாடு காணவர ஏலாது
தேராம்,திருவிழாவாம் தேடிவருவோமின்னா
சிவலோகப் பூநாடு தேடி வர ஏலாது
கப்பல் விட்டுக்கீழிறங்கி கடைக் கணக்கப் பாக்கலையே
தோணிவிட்டுக் கீழிறங்கி தொலைக்கணக்கப் பாக்கலையே
பூமி வந்து சேரையில பெரிய கிடை வந்ததே
வளவு வந்து சேரையில மிகுந்த கிடை வந்ததே

மகுந்த கிடை பாக்க மச்சமில்லா நேரமின்னு
மனசோ திகைச்சழுதா வாங்க வந்தான் கேக்கலையே
வார்த்த சொல்லப்போகலையே
பெரிய கிடை பாக்க பொன்னில்லா நேரமின்னு
புத்தி திகைச்சழுதா புடிக்க வந்தான் கேக்கலையே
கொடுக்கா முறையின்னு கூவினால் கூற்றுவனும் போகலையே
தேற வழியுமில்ல,தேற்றுவார் யாருமில்ல.

(ஒரு பெண் இறந்தால் வைக்கப்படும் ஒப்பாரி)

எக்கோடி சேனை தளம் இறந்த இடம் கண்டாயா!
மட்டற்ற கோடி சனம் மடிந்த இடம் கண்டாயா!
சேர மடிந்த தீ வெளிச்சம் கண்டாயா!
ஐவர் மடிந்த அனல் வெளிச்சம் கண்டாயா!
மக்களை அழுவைத்து,மன்னரையும் சோம்ப வைத்து
வாவரசி ஆனாயோ,வளவு வரக் காண்போமோ!
புள்ளைய அழுகவைத்து,பெருமாளச்சோம்ப வைத்து
பேரழகி ஆனாயோ,பொழுது வரக் காண்போமோ!

கஞ்சிக்கு மஞ்சன் களைக்க வைத்துப்போனாயா
சோத்துக்கு மஞ்சன் சோம்ப விட்டுப்போனாயா
அமுதுக்கு மஞ்சன் அழுக வைத்துப்போனாயா
பாலுக்கு மஞ்சன் பறக்க வைத்துப்போனாயா
காடு மண மணங்க கண்டாங்கி தீப்பறக்க
மஞ்ச,மணமணங்க மங்கிலியந்தீப்பறக்க

மையோட பொட்டோட கயிலாயம் போன செல்வி
பொட்டோட பூவோட பரலோகம் போன செல்வி
வைகையில நீர் மோந்து வாசலிலே நீராடி
மரவையில பொன் கழட்டி மட்ட மன்னர் கை கொடுத்து
மலரோட தீக்கலக்க மாதவத்தைச்செய்தாயோ
பொய்கையில நீர் மோந்து பூமியில நீராடி
பொட்டியில பொன் கழட்டி பிஞ்சு மன்னர் கைகொடுக்க
பூவோடு தீக்கலக்க புண்ணியத்தச்செய்தாயோ

மச்சம் வெட்டி மாத்துரைக்கும் மந்திரிக்கி வாழ்ந்திருந்தாள்
தங்கம் வெட்டி தரமுரைக்கும் சமர்த்தருக்கு வாழ்ந்திருந்தாள்
சானகியும் ராமருமா நெடுங்காலம் வாழ்ந்திருந்தாள்
பார்வதியும்,பரமனுமா பலகாலம் வாழ்ந்திருந்தாள்
பெருமாளும் தேவியுமா பிரியாமல் வாழ்ந்திருந்தாள்
கூடாத நேரம் வந்து கூட்டி போன துயரமென்ன?
போதாத நேரம் வந்து பிரிச்சு போன துயரமென்ன?

2 கருத்துகள்: