கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

24.8.10

குடியினால் கெட்ட குடிகள்.

சொந்த ஊர் போகும் போது, உறவினர் வீட்டுத்திருமணங்கள், இறப்பு,பிறப்பு, சடங்கு ஆகியவற்றை முறை கேட்டு வருவது வழக்கம். அதிலும் துக்கம் கேட்கப் போகும் நாளில் சந்தோசமான முறை கேட்கப் போகும் பழக்கமில்லை. துக்கம் கேட்க ஒரு நாள் குறித்துக்கொண்டோம். அப்படி நேமத்தான் பட்டியில் உறவினர் வீட்டில் முறை கேட்டுவிட்டு, திரும்பி வரும் போது பேருந்து நடத்துநர், இந்தப்பேருந்து கோட்டையூர் வழியாகப்போகாது என்றும், எங்களை பள்ளத்தூரில் இறங்கிக்கொள்ளும்படியும் கூற நாங்களும் பள்ளத்தூரில் இறங்கினோம். பள்ளத்தூரில் இறங்கியதும் நகரப்பேருந்து வர தாமதமாகும் என்றார்கள்." ரொம்ப நாளாச்சு நடந்து. நடப்போமா! என்று நடக்கத்தொடங்கினோம். வழியில் மணச்சை. மணச்சையில் முறை கேட்டு வேலங்குடி. வேலங்குடியில் முறை கேட்டு கோட்டையூர் செல்ல வேண்டும். கண்மாய் ஒரு புறமும், வயல்வெளிகள் ஒரு புறமும், உச்சியில் அக்னி நட்சத்திர வெயிலும் எங்களைக் கடந்து போவோரின் ஏளனப்பார்வையும் சுகம் தான். வழியில் நுங்கு சுளை விற்றுக்கொண்டிருக்க அதையும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே நடந்தோம்.எங்களின் குழந்தைப்பருவம் திரும்பக் கிடைத்தது போல் இருந்தது.

வேலங்குடி கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த போது எனது கணவரின் பெயர் சொல்லி அழைப்பு. திரும்பிப் பார்த்தால் அந்தமானில் நெடுநாள் வசித்த நண்பர். அவர் தந்த குளிர்பானத்தை பருகியபடி அவரை நலம் விசாரித்துப்பேசிக்கொண்டிருக்க, ஒரு பெண் வந்து பணத்தை நீட்டினார். வட்டியொன்றும் வேண்டாம். எடுத்துக்கொண்டு போ!. என்று வட்டிப்பணத்தை திருப்பிக் கொடுத்து, அவர் அடமானம் வைத்த பொருளைத் திருப்பிகொடுத்தார். அந்தப்பொருள் அடுப்பு, கேஸ் சிலிண்டர். குடிப்பழக்கம் உள்ள அந்தப்பெண்ணின் கணவர், குடிப்பதற்கு பணமில்லை என்றதும், அடுப்பை விட்டு சிலிண்டரைக் கழற்றத் தெரியாது, இரண்டையும் கொண்டு வந்து 1500/ ரூபாய்க்கு அடகு வைத்து குடித்துக் கும்மாளம். நான் அவரிடம் இனிமேல் வாங்காதீர்கள் இது தரித்திரம் என்று கூற அந்தப் பெண் ஐயோ! இந்த அண்ணன் வாங்காவிட்டால் எங்காவது கொண்டு போய் விற்று விடுவார் என்றழுதார்.

அரை மணி நேரம் அந்தம்மா சொந்தக்கதை, சோகக்கதை கூற ஏற்கனவே துக்கம் கேட்டு வந்த சோகம்.கண்கள் ஈரமாகின. இப்படி நிறைய வீடுகளில் நித்தம் இதே கதை. குடிப்பதற்குப் பணமில்லை என்றால் வடித்த சோற்றைத் தூக்கி கொட்டிவிட்டு, சோற்றுப் பானையை விற்றுக் குடிப்பார்களாம். தரவில்லை என்றால் மனைவி, மக்களை அடிப்பது, பானை சோற்றில் சிறுநீர் கழித்து வைப்பது போன்ற கொடூரங்கள். இதனால் தான் ஏழைகள் ஏழைகளாகவே! எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. குடித்து சீரழியும் மாக்கள் குடியை விட மட்டும் மருந்தே இல்லையா?����

3 கருத்துகள்:

  1. இதனால் தான் ஏழைகள் ஏழைகளாகவே! எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. குடித்து சீரழியும் மாக்கள் குடியை விட மட்டும் மருந்தே இல்லையா?


    ......மனதை பிசையும் கேள்வி இது. ம்ம்ம்ம்....

    பதிலளிநீக்கு
  2. Nalla pakirvu akka.

    kudippalakkathtaal eththanaiyo izappukkal.

    pallaththuril irunthu kottaiyurukku pogum vazhiyil velangudi varai azakiya vayalkalum... kanmayum... supera irukkum. athil nadappadu enpathu sugamana anupavamy.

    பதிலளிநீக்கு
  3. வருந்தவைக்கிற விஷயம், விடையில்லாத கேள்வி :(

    பதிலளிநீக்கு