கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

8.7.10

மாற்றங்கள்









மாற்றம் ஒன்று மட்டும் தான் மாற்றமே இல்லாதது என்றான் ஒரு புதுக்கவிஞன்.மாற்றங்கள் நல்லதாக இருக்கும் போது மகிழும் மனம், கெடுதல்களைக் கண்டு சலனப்படும்.ஒவ்வொரு இரு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குப்போகும் போதும் ஊருக்குள் சில மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்கள், வெற்றுநிலங்களில் புது வீடுகள், இளையோர் சிலரின் வயோதிகத்தோற்றம், குழந்தைகள் சிலரின் வியத்தகு வளர்ச்சி, போனமுறை போனபோது இருந்த சிலரின் மறைவு இப்படி நிறைய. சில ஆச்சர்யம், சில சந்தோசம், சில வருத்தம். இந்த முறை என்னை வளர்த்த என் ஆயா இல்லாத வெறுமை தவிர மற்ற படி எல்லாம் சுகமே! நலமே!

எங்களின் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டம். ஆற்றுப்பாசனம், இயற்கை நீரோடைகள், கால்வாய்கள் எதுவுமே எங்கள் ஊர்களில் கிடையாது. ஊரணி, கண்மாய்கள் உண்டு. அவை மழைக்காலத்தில் மட்டும் நிரம்பிக்கிடக்கும்.இப்போது, அவைகள் மழைக்காலத்தில் கூட நிரம்பி வழிவதெல்லாம் கிடையாது. காரணம், வெற்று நிலங்களில் வீடுகள், சுற்றுச்சுவர்கள் என்று எழுப்பியபடியால், மழை நீர் வரத்து திசை மாறி, நீர் நிலைகளுக்கு, போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே எங்கும், கரிசல் பூமி போல், பாரதி ராஜாவின் "கருத்தம்மா" படத்தில் காட்டப்படும் பொட்டல் காடுகளாகக் கிடந்தன. இந்த வருட விடுமுறைக்குப் போன போது, ஊருக்குள் பசுமையை தரிசிக்க முடிந்தது. எல்லா வீடுகளிலும் ஒரு குளுமையை உணர முடிந்தது. மக்கள் மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும், பசுமையின் பயனையும் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பது குறித்து சந்தோசம். பேருந்துப்பயணத்தின் போது, கவனித்த போதும் சாலைகள், வீடுகளின் வெற்றிடங்களை மரங்களும் செடிகொடிகளும் நிரப்பி இருந்தது. தமிழ்நாட்டின் மின் வெட்டில், மின்சார விசிறி இல்லாத போதும், கோடை தகிக்காமல் சமாளிக்க முடிந்தது.


ஒவ்வொரு வீடுகளிலும் உரக்குழிகள் உண்டாக்கி, இயற்கை உரத்தயாரிப்பில் பெரும்பாலான பெண்கள் ஈடுபட்டிருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. வீட்டின் காய்கறிக்கழிவுகள், மாட்டுச்சாணம், ஆட்டுக்கழிவுகள், இலை, தழைகள் கொண்டு உரம் தயாரித்து, வீட்டுக்கும் உபயோகித்து, வேண்டுபவர்களுக்கும் விற்பனை செய்கிறார்கள்.ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபாடு அதிகரித்திருந்த போதிலும் பாக்கெட் பால் விற்பனை அமோகம் தான்.ஆனால் பாலித்தீன் பைகளின் உபயோகம் மட்டும் குறைந்தபாடில்லை.கிராமப்புற மக்களுக்கு அதன் தாக்கமும், சுற்றுச்சூழலைக் கெடுப்பதில் அதன் வீர்யமும், வீச்சும் புரியாதவர்களாய் இருக்கிறார்கள். தோட்டங்கள், வயல்வெளிகள், வீட்டின் சுற்றுப்புறம் அனைத்தையும் நீக்கமற நிறைத்திருந்தது.வேலிக்கருவை மரங்களில் கிழிந்த தோரணங்களாய் தொங்கிக்கொண்டிருந்தது விகாரமாய். அந்தமானில் நெகிழும் பைகளுக்குத் தடை விதித்துள்ளது போல் தமிழக அரசும் தடை விதித்தால் குப்பைகள் குறையும். பைகளை உபயோகித்த பின் பறக்கவிடாமல், ஒரே இடத்தில் சேகரித்து வைக்கும் விழிப்புணர்வு கூட அற்றுப்போய் இருக்கின்றனர் நம்மவர்.
அந்தமானில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மீள் சுழற்சிக்காக முக்கிய பூமி அனுப்பும் வியாபாரிகளுக்கு கப்பல் சத்தம் (fright) கிடையாது. 


ஊருக்குள் காங்கிரீட் வீடுகள் அதிகமாகி, குடிசைகள் அற்றுப்போயிருந்தது. சுபிட்சம் கூடியிருந்தது. மகளீர், சுய உதவிக்குழுக்கள் மூலமும், அவரவர் கல்வித் தகுதிக்கேற்றார் போல் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்க, பெரும்பாலான ஆண்கள் வெளி நாடுகளில் அல்லது வெளி நகரங்களில் சம்பாதிப்பதின் நிமித்தம்.பெண்களும் கணவனின் அருகாமையை விட, வசதியான வாழ்விற்கு தம்மைத் தயார் படுத்திக்கொண்ட தைரியம், மன உறுதியைக் கண்டு, இது தியாகமா? அன்றி சுயநலமா? என்று கேள்வி மனதைக்குடைந்தது. இருக்கும் அவர்கள் மனதிலும் யாருமறியாத ஆசாபாசங்களும், கண்ணீரும். அவர்கள் எதார்த்தங்களை அனுசரித்து குடும்பம் நடத்தும் பொறுப்பு பிடித்திருந்தது.அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து, செல்வம் சேர்த்து, "எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல சம்பாதிக்கிறார்" என்று பெருமை பொங்கக் கூறும் அவர்களின் அறியாமை பிடித்திருந்தது.குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற அவர்களின் நியாயமான குறிக்கோள் பிடித்திருந்தது.மொத்தத்தில் எங்கள் ஊர்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது சந்தோசம் தான். ஆனாலும் நம் நாட்டின் மனித வளம் மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது நல்லதா? புரியவில்லை.


பேருந்துகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும் அதிகம் கேட்க நேர்ந்த வார்த்தைகள் - "அவன் நல்லா இருப்பானா? பெத்த வயிறு பத்தி எரியுது!" - தாயாராய் இருக்க வேண்டும். "எந்தம்பி நல்லவன் தான். வந்தவ சரியில்ல. மேல ஒருத்தன் எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கான் - சகோதரி. இப்படியான வசனங்கள். நமது பெண்களின் பெருந்தன்மை குறைந்து அனைவரும் குறுகிய வட்டங்களுக்குள் தம்மைப் பூட்டிகொண்டார்களா? நமது ஆண்களின் நியாய உணர்வு அற்று விட்டதா? கேள்விக்கு விடை கிடைக்காமல் நாம். மொத்தத்தில் இன்று பெண்களில் பெரும்பாலானோருக்கு பேராசை அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டியுள்ளது வருத்தந்தான். காலம் அனைவைரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்.

7 கருத்துகள்:

  1. Font-ல் ஏதோ பிரச்சனை கவனியுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. Another sensible essay from you. Thanks! நல்ல நல்ல கேள்விகளா தூக்கி போட்டுருக்கீங்க, மேம்போக்கா படிச்சிட்டு தாண்டி போயிட முடியாதபடிக்கு... ம்ம்ம் :(

    பதிலளிநீக்கு
  3. நீண்ட நாட்களுக்குப் பிறகு மாற்றங்களுடன் வந்திருக்கிறீர்கள். ஊரில் நிறைய மாற்றங்கள். விலைவாசி முதல் கொண்டு மனிதர்களிலும் மாற்றங்கள். நானும் ஒருமாத விடுமுறையில் ஊருக்கு போய் வந்த போது நிறைய மாற்றங்கள் பார்த்தேன்.
    தொடரட்டும் உங்கள் எழுத்து,

    பதிலளிநீக்கு
  4. //அந்தமானில் நெகிழும் பைகளுக்குத் தடை விதித்துள்ளது போல் தமிழக அரசும் தடை விதித்தால் குப்பைகள் குறையும்.//

    நம் அரசு என்று உணருமே...மாற்றம் எண்ணி நானும்...மாறும் . நல்ல பதிவு .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. Thekkikattan Said...


    Another sensible essay from you. Thanks! நல்ல நல்ல கேள்விகளா தூக்கி போட்டுருக்கீங்க, மேம்போக்கா படிச்சிட்டு தாண்டி போயிட முடியாதபடிக்கு... ம்ம்ம் :(

    பதிலளிநீக்கு