கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு-அண்ணல் காந்தியடிகள்

12.9.11

என் இரவு



இரவின் மடியில்
சூரியன் உறங்க
பூமியின் வெளியில் பாடித்திரிகிறது மௌனம்

இருள் சூழ் வெளியில்
காலத்தின் விரல் பிடித்து நான்.
என் வானத்து நிலா
பால் நிற ஒளியூற்றி இருளை அழிக்க
இருட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது.

வனாந்தரத்தின் ஒற்றையடிப்பாதையாய்
வானில் நீண்டு கிடக்கிறது ராக்கெட் புகை.
நட்சத்திரம் மின்னும் வானில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காற்றாய்ப்போன என் உறவுகளை.

நித்திரையற்ற இரவினில்
தூங்காத கண்களின் கருப்பு வெள்ளைக்கனவாய்
விரிந்து கிடக்கிறது இரவு.
சலனமற்ற நிசப்தத்தில் உலவுகிறது
என் முன்னோரின் தாலாட்டுகள்.

இலையுதிரும் சப்தத்தில்
நடுங்கும் குருவிகளின் சிறகசைப்பு.
எல்லோரும் உறங்கும் இந்த நடு நிசியின்
ஏகாந்தம்.
தூரத்து ஊர்களின் சந்தைகளுக்கு
ஒற்றை மணி அசைய
ஊர்வலம் போகும் மாட்டு வண்டிகளில்
அசையும் லாந்தர் வெளிச்சம்.

ஏவலாய், எடுபிடியாய்,
காத்துக்கிடந்து, காக்க வைத்து
நிர்ப்பந்தங்களைச் சுமக்கும் கட்டிடக்காடுகளில்
மூச்சடைக்கும் பகலை விடவும் இனிமையானது இரவு.
அதுவும் விடுமுறைக்கு முதல் நாள் இரவு.


எனக்குப்பிடித்திருக்கிறது இந்த இரவு.
வாழ்க்கையை நகர்த்தும் பகலை விட
நான்
வாழும் இந்த இரவு.

1 கருத்து:

  1. சலனமற்ற நிசப்தத்தில் உலவுகிறது
    என் முன்னோரின் தாலாட்டுகள்.

    என்னாலும் கேட்கமுடிகிறது.

    பதிலளிநீக்கு